Skip to main content

வைகோவுக்கு இன்னொரு பேர் இருக்கு! நாடாளுமன்றத்தில் வைகோ...

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

இன்றைய தலைமுறையினருக்கு வைகோவை ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துபவராகவும் செய்தியாளர் சந்திப்புகளில் உணர்ச்சிபயப்பட்டு பேசுபவராகவும் கூட்டணி விட்டு கூட்டணி மாறுபவராகவும் சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பவராகவும்தான் தெரியும்.
 

vaiko


ஆனால் இதே வைகோ ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தையே தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தது நிறையபேருக்கு தெரியாது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் முகமாக இருந்தவர்; ஈழவிடுதலை, காவிரி, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் கடைசிவரை உறுதியுடன் இருந்தவர். எழுவர் விடுதலை, மாநில உரிமை, மாநில சுயாட்சிகளில் சமரசம் செய்துகொள்ளாதவர். சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை  பட்டியலிட்டால் அதில் முதல் வரிசையில் கண்டிப்பாக இடம்பெறுபவர். 'பார்லிமென்ட் டைகர்', நாடாளுமன்ற புலி என்று அப்போதைய உறுப்பினர்கள் பலரால் அழைக்கப்பட்டவர் வைகோ.   

வைகோ, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பல பரபரப்பான தருணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1978 இந்தி திணிப்பிற்கு எதிராக முரசொலிமாறன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதுகுறித்து பேசிக்கொண்டிருந்த வைகோ, மத்திய அரசு அவருக்கு இந்தியில் அனுப்பிய கடிதத்தை அந்த அவையிலேயே கிழித்தெறிந்தார். மேலும், இந்தக் கடிதங்கள் கிழிக்கப்பட்டதுபோல் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் கிழித்தெறிவார்கள் என அப்போதைய பிரதமர் மொராஜி தேசாயிடம் காட்டமாகக் கூறினார்.
 

 

vaiko


ஈழப்பிரச்சனையில் வைகோவின் பங்கு மிக, மிக முக்கியமானது. 1984ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை கூட்டம் ஒன்றில் ஈழப்பிரச்சனை குறித்து பேசினார் வைகோ, அப்போது அவர், இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச்சென்ற விமானத்திற்கு திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி, ஆயுதங்களில் இலங்கை தமிழர் என எழுதப்படவில்லை எனக்கூறினார். உடனே அதை மறுத்து பேசிய வைகோ இவ்வாறு கூறினார், "உங்கள் அம்மா இந்திரா காந்தியை துளைத்த குண்டுகளிலும்கூட இந்திராகாந்தி எனப்பெயர் எழுதப்படவில்லை". இது ராஜிவ்காந்தியை அதிர வைத்த வாதமாக இருந்தது. 

1986ல் செப்டம்பர் முதல் வாரத்தை இந்தி வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று ராஜிவ்காந்தி அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதை எதிர்த்த வைகோ அரசியல் அமைப்பு சட்டத்தின் மொழிப்பிரிவை கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார். முல்லை பெரியாறு அணை உயர்த்தப்படுதல், ஸ்டெர்லைட், கதிராமங்கலம், மீத்தேன் ஆகியவற்றை உறுதியாக எதிர்த்தவர். கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதே அதை எதிர்த்தவர் வைகோ. தான் கூட்டணி கட்சியோடு இருந்தபோதும் சரி, தனது கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர் அவர். 1989ல் மத்திய அரசுக்கும், தனது கட்சியான திமுகவிற்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று ஈழத்தலைவர் பிரபாகரனை சந்தித்தார். அது அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
 

vaiko


சங்கர் தயாள் சர்மா துணை குடியரசுத்தலைவர் ஆன பிறகு முதன்முதலாக மாநிலங்களவைக்கு வருகிறார். ஈழத்திற்கு அமைதிப்படை போயிருந்த நேரம், திலீபன் இறந்திருந்த நேரம், யுத்தம் ஆரம்பமாகியிருந்த நேரம். சபை கூடுகிறது... சங்கர்தயாள் வந்து உட்காருகிறார், கேள்வி நேரம் தொடங்குகிறது, வைகோ அவர்களை பேசவிடவில்லை. எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என மிகுந்த வேகத்துடன் பேசுகிறார். இருந்தும் அவரை பேசவிடாமல் சங்கர் தயாள் கேள்வி எண்ணை சொல்லிக்கொண்டே இருக்கிறார். கேள்வி நேரம் முடியட்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். அப்போது வைகோ, "எங்கள் மக்கள் அங்கு கொல்லப்படுகின்றனர், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிக்கொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் இங்கு கேள்வி நேரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இந்த கேள்வி நேரத்தைப்பற்றி அக்கறையில்லை" எனக் கூறினார். இதனால் கோபமடைந்த அவர் வைகோவை அவையிலிருந்து வெளியேற்றினார். பின்னாளில் அதே சங்கர் தயாள் சர்மா வைகோவின் நாடாளுமன்ற பேச்சுகளால் கவரப்பட்டு மிகுந்த அன்பு பாராட்டினார்.

இந்திரா காந்தியையும், மொராஜி தேசாயையும் ஒப்பிட்டு வைகோ ஒரு உரையாற்றினார். இதைக் கண்ட மூப்பனார் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இந்திராகாந்தி வைகோவின் பேச்சு மிக அருமையாக இருக்கிறது என பிரணாப் முகர்ஜி மூலமாக தகவல் தெரிவிக்க கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு கழகத்தைச் சேர்ந்த வைகோ கடவுளுக்கு ஆபத்து வந்தபோதும் அது குறித்து கேள்வி கேட்டார். ஒரு முறை தமிழ்நாட்டின் ராமர் கோவில் சிலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பக்கூடாது என வைகோ தடுத்தார். சிலையை நீங்கள் ஏன் அனுப்புகிறீர்கள் எனக்கேட்டபோது அதற்கு அமைச்சர் ஒருவர், சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார். உடனே வைகோ பக்திக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்துள்ளீர்கள் எனக் கேட்டார்.
 

 

vaiko


அண்ணாவிற்கு அடுத்து மாநில சுயாட்சிக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்களில் வைகோவும் ஒருவர். அண்ணாவிற்கு நான் இருந்ததுபோல, எனக்கு என் தம்பி கோபால்சாமி என கலைஞரால் புகழப்பட்டவர், திமுகவின் போர்வாளாகவும், டெல்லியில் தமிழ்நாட்டின் முகமாகவும், திமுகவின் முகமாகவும் இருந்தவர். இவையனைத்திற்கும்மேல்... தற்போதைய நிலையில் அடுத்தவர்களை கொளுத்தியாவது அவர் இடத்திற்கு செல்லவேண்டும் என நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்க, அன்று வைகோவை திமுகவிலிருந்து நீக்கியபோது 5 பேர் தீ குளித்தனர். கட்சியிலும் தொண்டர்கள் மத்தியிலும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தவர்.

மீண்டும் நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கப்போகிறது... வைகோ முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு செல்வதற்குமுன்பு ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார், அது இதுதான்... "நமக்காக பேச நாதியில்லை என யார், யார் இந்த நாட்டிலே கவலைப்படுகிறார்களோ, நம் ஓலக்குரலை எடுத்துச் சொல்வதற்கு ஒருவருமில்லை என வேதனைப்படுகிறார்களோ, ஆதரவற்றவர்களாக, திக்கற்றவர்களாக எவரெல்லாம் துன்பப்படுகிறார்களோ அவர்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன்..."

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.