Skip to main content

வாகைக்குளம் இன்னொரு சாத்தான்குளமா? வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி சாவு! போராடும் உறவுகள்...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

சாத்தான்குளத்தையடுத்து இன்னொரு கொட்டடிச்சாவு அம்பலமேறியிருக்கிறது. நீதிகேட்டுக் கொதிப்புடன் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர் உறவினர்கள்.

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் சமீபமாக இருக்கும் வாகைக்குளம் கிராமத்தின் விவசாயி அணைக்கரைமுத்து. 72 வயதானவர். மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். விவசாயியான அணைக்கரை முத்துவிற்கு அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் விவசாய நிலமிருப்பதால் மகசூல் செய்திருக்கிறார். மேலும் தோட்டத்தின் ஒரு பகுதியில் காய்கறிகளும் பயிரிட்டிருந்தார்.

 

வனவிலங்குகளிடமிருந்து காப்பதற்காகத் தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்தார் என்று வந்த தகவலையடுத்து கடந்த 22ஆம் தேதி நள்ளிரவு கடையம் வனத்துறையின் வனச்சரகர் நெல்லை நாயகம் மற்றும் வனக்காவலர்கள் வந்து அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் விசாரணை என்ற பெயரில் விவசாயியைத் தாக்கியதாகத் தெரிகிறது. அன்றைய நள்ளிரவு உங்கள் தந்தைக்கு உடல் நலமில்லை. வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று வனத்துறையினர், அணைக்கரைமுத்துவின் மகனான நடராஜனுக்குப் போன்மூலம் தகவல் சொல்லி வரவழைத்திருக்கிறார்கள். அங்கே சென்ற நடராஜன் தன் தந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார்.

 

உடனே வனத்துறையினர் அணைக்கரைமுத்துவைச் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதனையடுத்து வனத்துறையினர் தாக்கியதால் அணைக்கரைமுத்து உயிரிழந்தார் என்றும் நடவடிக்கைக்காக ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் உறவினர்கள்.

 

வனத்துறையைச் சேர்ந்த ஐந்து பேர்கள் தனது தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியிருக்கிறார்கள். அதானல் தந்தை மரணமடைந்தார். எனவே வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நடராஜன். காவல் துறையின் பரிந்துரையை ஏற்று அம்பை குற்றவியல் நீதித்துறை நடுவரான கார்த்திகேயன் உறவினர்கள், வனத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்.

 

இதனிடையே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட அணைக்கரைமுத்துவின் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தியதில் கலந்து கொண்ட தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதையும் விவசாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

 

தொடர்ந்து போராட்டம் வலுவானதையடுத்து அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணமாகப் பத்து லட்சம் மற்றும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்ததை குடும்பத்தார்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அதிகாரிகள், தென்காசி தாசில்தார் உட்பட அனைவரும் குடும்பத்தார்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களிடமும் தங்களின் கோரிக்கையைத் தெளிவாகக் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

எனது தந்தையின் உடலை எங்களுக்குத் தெரியாமலேயே உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். அதன் ஆய்வறிக்கையும் எங்களுக்குத் தரப்படவில்லை. உடலை மறுபரிசோதனை செய்து ஆய்வறிக்கையைத் தரவேண்டும். வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். அதன்பிறகே அரசு அறிவித்த நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வோம் என்கிறார் அணைக்கரை முத்துவின் மகளான வசந்தி.

 

வனத்துறையினர் தாக்கியதால்தான் அணைக்கரை முத்து உயிரிழந்தார். நீதி வேண்டும் என்று உடலை வாங்கமறுத்துப் போராட்டம் 4ஆவது நாளாக நீடிக்க, இன்னொரு சாத்தான்குளமாக மாறியிருக்கிறது வாகைக்குளம்.

 

 

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.