Skip to main content

பாஜக ஒரு நாள் அழைப்பது மறு நாள் புறக்கணிப்பது ஏன்? - வா.புகழேந்தி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Va Pugazhenthi  interview

 

மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நம்மிடையே எடுத்து வைக்கிறார்

 

பாஜகவை நம்பி நாங்கள் அரசியல் செய்யவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமருக்கு அருகில் பன்மொழிப் புலவர், வருங்காலப் பிரதமர் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டார். எங்களை அவர்கள் அழைக்கவில்லை. பாஜக சொன்னதையெல்லாம் ஓபிஎஸ் அவர்கள் கேட்டார். அவருடைய பயணத்திலிருந்து அவரை டைவர்ட் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் செயல்பட வைத்தனர்.  தர்மயுத்தம் மட்டும் தொடர்ந்து நடந்திருந்தால் இன்று தமிழ்நாட்டை ஆளும் இடத்தில் ஓபிஎஸ் அண்ணன் இருந்திருப்பார்.

 

குடியரசு தினத்துக்கு அவர் வீட்டில் கொடியேற்றும்போது கூட பிரதமர் கொடியேற்றும் நேரத்துக்காக காத்திருந்தார் ஓபிஎஸ். பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடியை அழைத்தனர். ஆனால் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி என குறிப்பிட்டு அழைத்தார் பிரகலாத் ஜோஷி. தாய் பகை, குட்டி உறவு என்பதுபோல் உள்ளது இது. ஒரு நாள் அழைப்பது, ஒரு நாள் புறக்கணிப்பது என்று அவர்கள் மாறுபட்ட நிலையில் நடந்துகொள்கின்றனர். தெளிவான முடிவை அவர்கள் எடுக்க வேண்டும். 

 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்று சொல்லி அவர்கள் கூட்டிய கூட்டத்தில் தலைவர்களே இல்லை. பழனிசாமியை வைத்துக்கொண்டு அந்தக் கூட்டணி நிச்சயம் வளராது. எங்களுடைய தொண்டர்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான விஷயம்தான். கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எங்களுடைய போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.

 

மணிப்பூரில் அநியாயம் நடக்கிறது. காட்டு தர்பார் நடக்கிறது. அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படும் காட்சியை நாம் பார்க்கிறோம். இடஒதுக்கீடு பிரச்சனையால் தான் அனைத்தும் நடக்கிறது. இடஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. ஏனெனில் இது பெரியார் மண். திராவிட மண். ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்து பலர் உயிரிழந்தாலும் ரயில்வே அமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார். மணிப்பூரில் இவ்வளவு பெரிய கலவரம் நடந்தாலும் அங்குள்ள முதலமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார். 

 

சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் சம்பவம் போன்ற ஒன்று இதுவரை நடைபெற்றதில்லை. மணிப்பூர் எங்கே இருக்கிறது என்பது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. தனக்கு மற்ற மாநிலங்கள் குறித்து தெரியாது என்று அவரே ஒருமுறை கூறினார். அவர் இந்த சம்பவங்களுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொண்டவர் அவர். மணிப்பூர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி கேட்பதை நான் வருத்தத்துடன் பார்க்கிறேன். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்.

 

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.