Skip to main content

என்னென்ன இந்தியாவிற்கு கிடைக்கும்... ரகசியமாக இருக்கும் ட்ரம்ப் இந்தியா விசிட்... வெளிவந்த தகவல்! 

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

"உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டினர்தான் காரணம் என்று சொல்லிவிடு. வெளிநாட்டினர் மீது உள்நாட்டு ஜனங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளில் இருந்து அவர்கள் கவனம் திரும்பிவிடும்''

சர்வாதிகாரி ஹிட்லரின் தந்திரம் இது. அவருடைய தந்திரத்தை ட்ரம்ப் கையிலெடுத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. அமெரிக்காவின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும், போதைப்பழக்கத்திற்கும் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா உள்ளிட்டவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறும் அகதிகள்தான் காரணம் என்றார் ட்ரம்ப்.
 

trump



இவர் அதிபரானவுடன், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகளை தடுத்து, பெற்றோரைத் தனியாகவும் குழந்தைகளை தனியாகவும் முகாம்களில் அடைத்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்.

அவருடைய இந்த நடவடிக்கையை அமெரிக்கர்களே எதிர்த்தார்கள். ஆனால், ட்ரம்ப் தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 1900 கிலோமீட்டர் தொலைவு எல்லையை சுவர் எழுப்பி மூடப்போவதாக அறிவித்தார். முதல்கட்டமாக ஆயிரம் கிலோமீட்டர் சுவர் எழுப்ப 45 ஆயிரம் கோடி டாலர்கள் தேவை என்றார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கவில்லை. அமெரிக்கா எப்போதும்போல பன்முகத்தன்மையோடு இருப்பதையே விரும்புவதாக பெரும்பான்மை அமெரிக்கர்களும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ட்ரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

 

trump



அவரைப் போலவே இந்திய பிரதமர் மோடியும் கடந்த ஆட்சிக் காலத்திலும் சரி, இந்த ஆட்சிக் காலத்திலும் சரி, தனது நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை பாகிஸ்தானைக் காட்டியே திசைதிருப்பினார். இப்போது, காஷ்மீரை திறந்தவெளி சிறைச் சாலையாக மாற்றி, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியா முழுவதும் நாடற்றவர்கள் என்று கோடிக்கணக்கான மக்களை அடைக்க முகாம்களை கட்டத் திட்டமிட்டு வருகிறார். பொருளாதார சீரழிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை திசைதிருப்பி, இந்திய அரசியல் சட்டத்தை வர்ணாசிரம அடிப்படையில் திருத்தும் நோக்கத்தோடு செயல்படுகிறார்.



இந்திய மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவின் மோடியாக ட்ரம்ப்பும், இந்தியாவின் ட்ரம்ப்பாக மோடியும் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த "ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்றார். அதற்குப் பதில் மொய் விருந்து இந்தியாவுக்கு ட்ரம்ப்பை அழைத்து "நமஸ்தே டிரம்ப்' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திவிட்டார் மோடி.

அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம், லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் வரவேற்புக் கூட்டம், தாஜ்மகால் விசிட் என ட்ரம்ப்பின் முதல்நாளின் நிகழ்வுகள் திட்ட மிட்டபடி நிறைவேறின. நிறைவுநாளான இரண்டாம்நாளில் மோடியுடன் உரையாடல், விருந்து ஆகியவை நிகழ்ச்சி நிரல்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. "நண்பர் மோடி'யை ட்ரம்ப் பாராட்டினார். உலகை ஆட்டிப் படைக்கும் நாட்டின் அதிபர் வருகைக்காக குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் கட்டிய மோடியின் சாதுர்யம் "பரவலாக'ப் பேசப்பட்டது. பயணத்தின் விளைவாக, இந்தியாவுக்கு என்னென்ன கிடைக்கும் என்பது மட்டும் ரகசியமாக இருக்கிறது. 

 

 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.