Skip to main content

காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே அடியாக அடித்த உறியடி!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

செங்கதிர்மலை... தமிழகத்தில் ஒரு சிறிய அழகிய கிராமம்; எளிய மக்களைக் கொண்ட கிராமம். அதனருகே 'பக்சினி' என்ற பெயரில் இயங்கும் ஒரு தொழிற்சாலை. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில், தேவையான பராமரிப்போ பாதுகாப்பு ஏற்பாடோ இல்லாமல் கொள்ளை லாபம் ஈட்டி வரும் தொழிற்சாலை.

 

uriyadi 2

உறியடி 2



உள்ளே என்ன வாயு பயன்படுகிறது, வெளியாகிறது என எந்தத் தகவலையும் தெளிவாகத் தராத, கொடுக்கும் லஞ்சத்தால், தரத் தேவையில்லாத ஒரு ஆலை. அந்த ஆலையில் வேலைக்கு வருகிறார்கள் நாயகனும் நாயகனின் நண்பர்கள் இருவரும். நண்பர்களில் ஒருவர் வேலை நேரத்தில் தங்கள் ஆலையில் ஒரு குழாய் சேதப்பட்டிருப்பதை கவனிக்கிறார். அதை அணுகும்போது அதிலிருந்து திரவ நிலை வேதிப்பொருள் வெளியாகி முகத்தில் அடித்து, அதை சுவாசித்ததால் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கிறார். பேருக்கு சில நாட்கள் மூடப்படும் அந்த ஆலை மீண்டும் இயங்குகிறது. எதுவும் சரி செய்யப்படாமல் இயங்கும் அந்த ஆலையில் சில நாட்களில் மீண்டும் ஏற்படும் விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். ஆலையின் அதிபர் அரசின் உதவியோடு வெளிநாடு பறக்கிறார். பிறகு நடப்பது சினிமாவில் மட்டும் நடக்கக்கூடிய, 'இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே' என்று நாம் ஏங்க மட்டுமே கூடியவை.

மேலே படித்தது 'உறியடி 2' படத்தில் நிகழ்ந்தது. இதே காட்சி மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஆனால், அதன் கோரமும் அதனால் ஏற்பட்ட இழப்பும் இன்னும் மிக மிகப் பெரியது. 'உறியடி' படம் போபால் விஷவாயு விபத்தை அடிப்படையாக வைத்து முக்கிய காட்சிகளைக் கொண்டுள்ளது. படத்தில் அந்த ஆலையின் பெயர் 'பக்சினி'. போபாலில் இருந்தது 'யூனியன் கார்பைட்'. 1981ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது விஷவாயு கசிவுகள் நிகழ்ந்து அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 1984இல் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது. உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக இன்றும் அது கருதப்படுகிறது. அந்த ஆலை நிர்வாகத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு உடனே ஜாமீன் கிடைத்தது. அதன் பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை. விசாரணைக்கு வராமலேயே வயதாகி மறைந்தும் போனார். அப்போது நடந்தது காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி கொல்லப்பட்டிருந்த சமயம். தேர்தல் நேரம் வேறு. அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பால் வாரன் எளிதாக வெளிநாடு சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் அரசும் பிற அரசுகளும் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க, தண்டிக்க, முயற்சி செய்துகொண்டே இருந்தன. இந்திய நியதிப்படி, எதுவும் நிகழவில்லை.


 

bhopal

போபால் கொடூரம்



போபாலில் வெளியான விஷவாயு மெத்தில் ஐஸோ சயனேட் (Methyl Isocyanate). 'உறியடி 2' படத்திலும் அதே வாயுதான் குறிப்பிடப்படும். போபாலில் இந்தக் கொடுமை நிகழ்ந்தபின் சுற்றுவட்டார மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆனால், எந்த மருத்துவருக்கும் வெளியானது என்ன வாயு, அதற்கு சரியான சிகிச்சை எது என்பது தெரியவில்லை. ஆலை நிர்வாகமும் அதை தெரிவிக்கவில்லை. இதனாலேயே உயிரிழப்பு அதிகமானது. அரசின் கணக்குப்படியே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 4000. இன்னும் அதிகம் என்கின்றன பிற ஆய்வுகள். பார்வை, கேட்கும் திறன் என பிற இழப்புகளை சந்தித்தவர்கள் லட்சக்கணக்கில். இன்று வரை தொடர்கின்றது அந்த விஷத்தின் தாக்கம். குற்றம் செய்தவரை தப்பிக்கவிட்டுவிட்டுத் தேடிய காங்கிரஸ் அரசின் போபால் சிறப்பைக் கூறியிருக்கும் அதே நேரம் தமிழகத்தில் நிகழ்ந்த ஸ்டெர்லைட் துயரையும் பேசுகிறது உறியடி 2.


 

sterlite gun shot

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு



படத்தில் வெளிநாடு தப்பிச்செல்லும் 'பக்சினி' ஆலை அதிபர் அங்கிருந்தபடி செங்கதிர்மலை மக்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிடுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ஒரு வீடியோ வெளியிட்டது நமக்கு நினைவுக்கு வருகிறது. மக்கள் நடத்தும் போராட்டமும் அதில் அரசும் போலீஸும் நடத்தும் தாக்குதல் தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டை  நினைவுபடுத்துகிறது. மிகப் பெரிய துயர் நிகழ்ந்த பிறகும் ஆலை விரிவாக்கத்திற்கு முயல்கிறார் ஆலை அதிபர். இதுவும் நாம் பார்க்காததல்ல. இறுதியாக தொழிலதிபர் தரும் பணத்துக்காக எதிரெதிர் கட்சிகளும் ஒன்றாக வேலை செய்வது மக்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கிறது. 'செங்கதிர்'மலை, 'லெனின்' விஜய் என பெயர்கள்... சாதிக் கட்சியின் செயல்பாடுகளைக் காட்டும் காட்சிகள்... தீர்வைத் தேடிப் பெற மக்களைத் தூண்டும் வசனங்கள் என நடப்பு அரசியலையும் அத்தனை கட்சிகளையும் ஓங்கி அடித்திருக்கிறது 'உறியடி2'. இத்தகைய ஒரு படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவும் இயக்கிய விஜய்குமாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.                                        

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.