Skip to main content

காரைக்கால் துறைமுகத்தில் ஆவணங்கள் இல்லாத விசைபடகுகள்; கடத்தலுக்கு பயன்படுத்துவதாக மீனவர்கள் வேதனை...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

Undocumented boat in Karaikal port being used for smuggling

 

 

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் எந்தவித ஆவணங்களோ, பதிவு எண்களோ,  இல்லாத ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடி தொழில் என்கிற பெயரில் புழக்கத்தில் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலம் மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட  போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும் மீனவர்கள் மத்தியில் புகையத்துவங்கியுள்ளது.

 

பதிவு செய்திடாத படகுகளை வைத்திருப்பவர்கள், மீனவர்கள் மத்தியில் பசுந்தோல் போர்த்திய புலிகளைப்போல தலைவர்களாக இருந்துகொண்டு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பாலியல் தொல்லை கொடுப்பதும், தட்டிக்கேட்பவர்களின் குடும்பங்களை கிராமத்தைவிட்டு ஒதுக்கிவைத்து கொடுமைப்படுத்துவதாககுமுறுகிறார்கள் மீனவர்கள். 

 

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் நலனுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டில் மீன்பிடித் துறைமுகம் காரைக்காலில் உருவாக்கப்பட்டது. அங்கு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 200 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவருகின்றனர். அதோடு தமிழக பகுதிகளை சேர்ந்த சில மீனவர்களும்  தங்களின் விசைப் படகுகளை அங்கு நிறுத்தி வைத்துக்கொண்டு மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர். அப்படி நிறுத்திவைத்து மீன்பிடிக்க செல்வதற்கு முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி எந்தவித அனுமதியும், பதிவும் செய்திடாத சில ராட்சத படகுகள் தான் மீன்பிடி என்கிற பெயரில் கடத்தல் தொழிலை செய்கின்றனர். என்கிறார்கள் மீனவர்கள் சிலர்.

 

Undocumented boat in Karaikal port being used for smuggling

 

 

இது குறித்து மீனவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், "சாதாரணமாக மீன் பிடிக்க செல்லும் படகுகள் அனைத்துமே முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மீன்பிடி உரிமை பெற்றிருக்க வேண்டும். மீன்பிடித் துறைமுகத்தில் அனுமதி சீட்டு பெற்றே கடலுக்கு செல்ல வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வளவு எல்லையை தாண்டி செல்லக்கூடாது, வலைகள் கட்டுப்பாடு என்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன. உண்மையாக மீன்பிடி தொழிலை மட்டும் செய்பவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்திருப்பார்கள். அதே போல 24 மீட்டர் நீளம் மற்றும்  147 திறன் கொண்ட விசைப்படகுகள் மட்டும் பதிவு செய்யப்படும். அதற்கு மேற்பட்ட விசைப்படகுகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் அதிக திறன் கொண்ட இன்ஜினுடன் கூடிய சட்டவிதிகளுக்கு உட்படாத வகையில் உள்ள ராட்சத விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் புழக்கத்தில் இருக்கிறது, நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு செல்கிறது என்பது மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட தெரியும். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த படகுகள் அனைத்துமே மீனவர்கள் மத்தியில் பெரும் புள்ளிகளாக இருப்பதால் அதிகாரிகளும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. இதை சாதகமாக்கிக்கொண்டு உள்ளூரில் உள்ள மீனவர்களிடம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியரும், எஸ்,பியும், மீன்வளத்துறை ஆணையரும் நினைத்தால் முடிவுகட்டமுடியும்," என்கிறார் விவரமாக.

 

காரைக்கால் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் ஒருவர் கூறுகையில், "காரைக்கால் துறைமுகம் சமீப காலமாகவே கட்டுபாடுகளை இழந்துவிட்டது, சில மாதங்களுக்கு முன்புகூட கடல்வழியாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திசென்று ஒருசில படகுகள் மாட்டிக்கொண்டன. தங்கம்போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி மாட்டிக்கொண்ட படகுகளும், அது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

 

இவை அனைத்துமே பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மூலமே நடக்கிறது. அதோடு ராட்சத இயந்திரங்களுடன் படகுகளில் மீன்பிடிக்க செல்வதால் ஒரு மாதம் பிடிக்கவேண்டிய மீன்களை ஒரு வாரத்தில் பிடித்துக்கொண்டு வந்துடுவாங்க. அவர்களிடம் எந்த அனுமதியும் கிடையாது, ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறாங்க. அதனால அவங்க எங்களை போன்ற மீனவர்கள் மத்தியில் அராஜகம் செய்கின்றனர். கிளிஞ்சல்மேட்டில் ஊர் தலைவர்கள் என்கிற போர்வையில் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அலவே இல்லாமல் போய்விட்டது. அவர்களால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளது, பல பெண்கள் பாலியல் ரீதியாக வெளியில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் உடனடியாக பதிவு செய்யப்படாத படகுகள் அனைத்தையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார் வேதனையுடன்.

 

 

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.