Skip to main content

“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
ddd

 

 

நவம்பர் 27 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர். திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிதத்னர். 27ஆம் தேதி காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தியப் பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் பேசினோம்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்கிறார்களே?

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவை அரசியல் விமர்சகர்கள், எதிர்கட்சியினர், பார்வையாளர்கள் என பலரும் பல விதமாக விமர்சித்தனர், துவக்கத்தில். ஏதோ பொழுதுபோக்குக்காக வந்தது போல்  சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால், அவர் அரசியலை ரசித்து, உணர்ந்து, ஈடுபாட்டுடன்  தான் பயணித்தார், பயணிக்கிறார். அந்த ஈடுபாடு சமீபத்திய "விடியலை நோக்கி" என்ற பிரச்சார பரப்புரை பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது, எதிரிகளுக்குப் புலப்பட்டது. 

 

உதயநிதி தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, அரசியலுக்கு வரவில்லை. தி.மு.கழகம் இரண்டாவது முறை எதிர்கட்சியாக இருக்கும்போது தான் வந்தார். மத்தியில் மோடி பிரதமராக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தார். தமிழகத்தில் மோடியின் செல்லப்பிள்ளை எடப்பாடி ஆட்சியின் போது தான் அரசியலுக்கு வந்தார். எதிர்கட்சியாக, இரண்டு அரசுகளின் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்து தான் வந்தார்.

 

வாரிசு அரசியல் என்றும் எந்த கொள்கைக்காக அவர் போராடி இருக்கிறார் என்றும் விமர்சனமும் வைக்கப்படுகிறதே? 

போராட்டங்களில் கலந்துகொண்டுதான் அரசியலுக்கு வந்தார், தொடர்ந்து கலந்து கொண்டும் வருகிறார். ஆனாலும், வாரிசு அரசியல் என்ற ஓட்டை விமரசனத்தை கடுமையாக சிலர் வைத்தார்கள். அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது, இவர் கடுமையாக உழைப்பார் என்று. அது அடுத்த ஆண்டே நிரூபணமாயிற்று, நாடாளுமன்ற தேர்தல் போது.

 

உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே அவரது அரசியல் ஈடுபாடும், கொள்கை பிடிப்பும், கடின உழைப்பும் வெளிப்பட்டது. ஆனால், தேர்தல் பரபரப்பில் அதனை பலரும் கவனிக்கவில்லை. அவர்களை இப்போதைய 'விடியலை நோக்கி' பயணம் கவனிக்க வைத்திருக்கிறது. 

 

நாடாளுமன்ற தேர்தல் போது, அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சார பயணம் அவரது அயராத உழைப்பை வெளிப்படுத்தியது. பிரச்சாரப் பயணத்தில் அவரது பேச்சு யதார்த்தமாக அமைந்து மக்களை கவர்ந்தது, அதே சமயம் கொள்கையில் இருந்து விலகாமல் இருந்தது. அரசின் அவலங்களை பட்டியலிட்டவர்,  மறக்காமல் எல்லா இடத்திலும் ஒரு விஷயத்தை தன் பேச்சில் குறிப்பிட்டார். அது, "நீட் தேர்வு".

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வு போன்ற கொள்கை விஷயத்தை பேசுவது எளிதல்ல. ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை பேசினார். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட "மாணவி அனிதா" குறித்து பேசும்போது உணர்வு மயமானார். அது அவரது "எதிர்கால சிந்தனையையும், மனித நேயத்தையும்'' வெளிப்படுத்தியது. தேர்தல் வெற்றி, அவரது பிரச்சார பயணத்திற்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது.

 

ddd

 

கட்சியில் பொறுப்புகளை பெற்ற பிறகு உதயநிதியின் செயல்பாடுகள் உடன்பிறப்புகளுக்கு திருப்பி அளிக்கிறதா? 

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உடன் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தலில் தீவிரம் காட்டி, பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை திமுகவில் இணைத்தார். 

 

"கலைஞர் கடிதங்களை" படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்கள் உதயநிதியின் ட்விட்டர் பதிவுகளை கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்டார்கள். தலைவர் கலைஞரின் கிண்டலும், கேலியும் பொங்கி வழிகிறது அவரது ட்விட்களில். பேட்டிகளிலும், பேச்சுகளிலும் பின்னி எடுக்கிறார். "உதயநிதி சாக்லேட் பாய்", என விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார். " ஜெயக்குமார் ப்ளேபாய்", என பதிலளிக்க அண்ணன் ஜெயக்குமார் கப்சிப்.

 

ddd

 

திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டாரே? 

கடந்த காலங்களில் உதயநிதியை அலட்சியமாக பார்த்த எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது. தேர்தல் பரப்புரை துவங்கியவரை கண்டு திணறுகிறார்கள். அவரது 'விடியலை நோக்கி' பயணத்தை முடக்குவதே ஸ்பெஷல் டி.ஜி.பியின் பணியாகிப் போனது. எடப்பாடி தினம், தினம் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர் அசரவில்லை, பயணத்தை தொடர்கிறார், மக்களை சந்திக்கிறார், சந்திப்பார்.

 

ddd

 

'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் உதயநிதி ஏற்று நடித்த கேரக்டர், சாப்ட் நேச்சர் கொண்ட சரவணன். தங்களை 'பார்த்தா' சந்தானமாக நினைத்து நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணனில்லை, சமூக அவலங்களை கண்டு கொதிக்கிற கலைஞரின் பராசக்தி "குணசேகரன்" என முத்திரை பதித்து விட்டார். 

 

தன் பிறந்தநாளுக்கும் 'கருப்பு சட்டை' உடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தெறிக்கிறது! இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை இளைய சூரியனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

 

 

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.