Skip to main content

ஸ்டாலினுக்குக் கிடைக்காதது... உதயநிதிக்குக் கிடைத்தது!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021
stalin udhayanidhi

 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதியாக வெற்றி அறிவிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் முதல் தேர்தலாகும்.

 

2019இல் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் எழுந்த போதும் அதை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வந்த அவருக்கு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தனது தொகுதி மட்டுமல்லாமல் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதியின் 'AIIMS - செங்கல்' பிரச்சாரம் வைரல் ஆனது. மதுரையில் பாஜக அரசு கட்டிய AIMS மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி கிண்டல் செய்தார் உதயநிதி. பொதுமக்கள் அதை ரசித்தனர். AIMS மருத்துவமனை கட்ட வைத்திருந்த செங்கலை உதயநிதி திருடினார் என்று பாஜக காரர் ஒருவர் புகாரளித்தது எக்ஸ்ட்ரா ரைஸ் காமெடி.

 

உதயநிதி தனது 43ஆவது வயதில் முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தந்தை ஸ்டாலின் தனது 31வது வயதிலேயே அந்த வாய்ப்பை பெற்றார். ஆனால், ஸ்டாலின் போட்டியிட்ட முதல் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். ஸ்டாலின் போட்டியிட்டது 1984 சட்டமன்ற தேர்தல், ஆயிரம் விளக்கு தொகுதி. அந்த தேர்தலின்போது எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இங்கு வராமலேயே அதிமுக அந்தத் தேர்தலில் வென்றது. ஸ்டாலின் தனது முதல் தேர்தலில் வெற்றியை நழுவவிட்டபோதும் பிறகு பல முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றார். உதயநிதியை விட களப்பணியில் அதிகம் ஈடுபட்டவர், சிறை சென்று சிரமங்களை சந்தித்தவர் ஸ்டாலின். என்ற போதும், சந்தித்த முதல் தேர்தல் வெற்றி என்பது ஸ்டாலினுக்குக் கிடைக்கவில்லை, உதயநிதிக்குக் கிடைத்துவிட்டது.   

 

           

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.