Skip to main content

“ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை; ம.பி. பாஜக பிரமுகருக்கு என்ன தண்டனை” - காந்தராஜ் கேள்வி

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

“Two years in prison for Rahul; What is the punishment for a MP BJP figure” - Kandaraj asked

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதும், பழங்குடியினத் தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் குறித்தும் அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை சந்தித்துப் பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராகப் போகிறார் என்று அண்ணாமலை கூறுகிறாரே?


அண்ணாமலை தரப்பில் இருந்து எந்த நகைச்சுவையும் வரவில்லை என்று பார்த்தேன். அதுபடியே நகைச்சுவை வந்துவிட்டது. ஒரு ஆபாச கலப்பு இல்லாமல், வன்முறை கலப்பு இல்லாமல் அண்ணாமலை நேரடியாக பேசியது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

 

கோ பேக் ஸ்டாலின் என்று கூறினால் தொண்டர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் என்று ஆர்.எஸ். பாரதி கூறியதற்கு நாங்களும் அரிவாள் பிடித்த கை தான் என்று அண்ணாமலை கூறுகிறாரே?


அரிவாளை எடுத்து யார் வெட்டினாலும் வெட்டும். அது அண்ணாமலை வெட்டினால் தான் என்று இல்லை. ஆர்.எஸ். பாரதி வெட்டினாலும் வெட்டும். அரிவாளை எடுத்தவன் எல்லாம் வெட்டுவான் என்று இல்லை. வெறும் செய்தியாளர்களை மட்டும் மிரட்டி வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர் தான் அண்ணாமலை. சென்ற வாரம் அண்ணாமலை நடத்திய பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் காலியாக இருந்தது. ஒரு பொதுக்கூட்டத்தையே ஒழுங்கா நடத்த தெரியவில்லை. இவர் அரிவாளை எடுத்து வெட்டப்  போகிறாரா.

 

பழங்குடி தொழிலாளர் மீது பா.ஜ.க பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோ வந்ததற்கு பின் அந்த மாநில முதல்வர் அந்த தொழிலாளர் காலை கழுவினாரே?


இவர்களே சிறுநீர் கழித்துவிட்டு காலையும் கழுவுகிறார்கள். இந்த மாதிரி விவகாரங்கள் எல்லாம் வருணாசிரமம் வந்த காலத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த காலத்தில்  ஏகலைவன் இருந்தால் துரோணாச்சாரியார் விரலை வெட்டி எடுத்திருப்பான். தேர்தல் நெருங்குவதால் காலை கழுவுகிறார்கள். என்னதான் வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருந்தாலும் 10 ஓட்டாவது இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்று செய்கிறார்கள். அந்த நிர்வாகியை கைது செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அது தீர்வு ஆகாது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். காலம் காலமாக இவர்கள் மக்கள் தலையில் ஏற்றி வைத்து விட்டார்கள்.

 

அந்த பழங்குடி தொழிலாளர்க்கு ஐந்து லட்சம் நிவாரணமும், வீடு கட்ட ஒன்றரை லட்சம் முன் பணமும் கொடுத்திக்கிறார்களே?


இந்த பணம் எல்லாம் அந்த இளைஞரை திருப்தி படுத்துவதற்காக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த இனம் இதை ஒப்புக் கொள்ளுமா? மோடியைப் பற்றி ஏதோ ஒரு வார்த்தை பேசிவிட்டார். இரண்டு வருடம் சிறை தண்டனை கொடுத்தார்கள். சிறுநீர் கழித்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள். இந்த வழக்கை குஜராத் நீதிமன்றத்தில் அதே  நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். அப்போது என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று பார்ப்போம். வெறும் காலை மட்டும் கழுவி விட்டால் தீட்டு கழிந்து விடுமா.

 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்,’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன இனம் தமிழ் இனம். இது எல்லாம் ஆரியர்கள் அதிகம் இருக்கும் வட மாநிலத்தில் இல்லை. இதைத் தான்  நீங்கள் எல்லாம் ஆரிய வந்தேறி, மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்று மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத்தில் பேசினார். மத்தியப் பிரேதசம் பக்கத்து மாநிலமான பீகாரில் தான் புத்தர் பிறந்தார். அவர் இதைத் தான் ஒழிக்கப் பாடுபட்டார். ஆனால் அங்கு இப்படி நடக்கிறது.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.