Skip to main content

அ.தி.மு.க. மீதான அதிருப்தி அதிகரிப்பு! நெருக்கடியில் முதல்வர் எடப்பாடி!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

eps

 

ஆட்சியிலும் கட்சியிலும் நாடார் சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை எடப்பாடியும் பன்னீரும் கொடுப்பதில்லை என்கிற அதிருப்தி, அச்சமூகத்தினரிடம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையால் அ.தி.மு.க. மீதான அதிருப்தி அதிகரித்துள்ளன.

 

இந்தச் சூழலில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார், மூப்பர், சாணார், கிராமணி சாதியினரை இணைப்பதற்காக, 1957-இல் போடப்பட்ட அரசாணையைத் திரும்பக் கொண்டுவர வலியுறுத்தியும், இஸ்ரோ வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் 2 கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடிக்கு அவசரமாக வைத்துள்ளன நாடார் சமூக அமைப்புகள்.

 

அரசியல் ஆலோசகர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் இது குறித்து கேட்டபோது, "1957-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மிகவும் பிற்படுத்தப் பட்ட சாதி பட்டியலில் (எம்.பி.சி) சாணார், கிராமணி சமூகத்தினர் இருந்தனர். 1971-இல் அந்த அரசாணை நீக்கப்பட்டது. பிறகு, 1989-இல் மிகவும் பிற்படுத்த பட்டோர் என புதிய அரசாணையைக் கலைஞர் கொண்டு வந்தார். அந்த அரசாணையில் இடம்பெற்ற சாதிகளின் வரிசைப் பட்டியலில் சாணார், கிராமணிகள் விடுபட்டு விட்டனர். அதனால், தற்போது 1957-இல் போடப்பட்ட அரசாணையைத் திரும்பக் கொண்டு வாருங்கள் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து நாடார் அமைப்புகள் போராடி வருகின்றன. முதல்வர் எடப்பாடி நினைத்தால், உள்ளடக்கிய அரசாணையைக் கொண்டு வர முடியும். கொண்டுவர வேண்டுமென்பதே நாடார் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது'' என்கிறார்.

 

இதற்கிடையே, தென்மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காகவும், அதன்மூலம் நாடார் சமூகத்தினருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவும் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு வைத்து வருகிறது தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம். இதன் பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், அண்மையில் முதல்வர் எடப்பாடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

 

சதீஷ்மோகனிடம் இதுபற்றி பேசியபோது, "நாங்குநேரியிலுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதில், ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக 1,500 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு (இஸ்ரோ) ஒதுக்க வேண்டும் என இஸ்ரோ நிர்வாகம் முதல்வர் எடப்பாடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

 

இதனை அப்படியே கிடப்பில் வைத்திருக்கிறார் எடப்பாடி. இஸ்ரோவின் கோரிக்கை நிறைவேறினால் தென்மாவட்ட மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால், நாடார்கள் பயன்பெற்றுவிடுவார்கள் என்பதாலேயே இஸ்ரோவின் கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளார் எடப்பாடி! நாடார் சமூகத்தைத் தொடர்ச்சியாக எடப்பாடி வஞ்சித்து வருவதால் அ.தி.மு.க.-வின் மீதான அதிருப்தி நாடார்களிடம் அதிகரித்தபடி இருக்கிறது'' என்கிறார் சதீஷ்மோகன்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.