Skip to main content

வேட்பாளர் நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான இரண்டு கேள்விகள்... - ராஜுமுருகன் அதிரடி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறுக் கட்சிளும் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், மக்கள் நேர்மையாக வாக்களிக்கவேண்டும் என்பதை வழியுறுத்தி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் மக்கள் பாதை இயக்கம் நேர்மைத் தேர்தல் என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதன் துவக்கவிழாவில், இயக்குனர் ராஜு முருகன் தேர்தல் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

Raju murugan

 

இப்போ இன்னமும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி தி பெஸ்ட் பெஸ்ட் என்று மோடி விளம்பரம் பண்ணலையினு எனக்கு ஆச்சரியமாக இருக்கு. ஏனென்றால் எனக்கு இந்தியாவே சரவணா ஸ்டோர்ஸ் மாதிரிதான் தெரியுது. தேர்தல் ஒரு பெரிய வியாபாரமாக மாறியுள்ளது, அதற்கு பெரிய கார்ப்பரேட் விளம்பரங்களுக்காக வேலைப் பார்க்குது. எதுக்கு விளம்பரம் பண்ணுவோம்? விற்காத பொருளுக்குத்தானே விளம்பரம் பண்ணுவோம். தேர்தலுக்கு யார் விளம்பரம் செய்வா? தேர்தலுக்கு எதுக்கு விளம்பரம்? உன்னுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எதற்காக விளம்பரம்? உன் வேட்பாளரின் தரமும், நியாயமும், நேர்மையும் உனக்குத் தெரிஞ்சா போதாதா? இங்கே எல்லா பெரிய கட்சிகளுமே நேர்முகத்தேர்வில் தங்களுடைய வேட்பாளரிடம் கேட்கிற கேள்விகள் இரண்டுதான். நேர்முகத் தேர்வே ஒரு அபத்தம், நிறைய சீட் வாரிசுகளுக்குத் தான் போகுது, அது வேற விஷயம். அந்த நேர்முகத் தேர்வில் இரண்டே கேள்விகள் தான், ஒன்று எவ்வளவு செலவு பண்ணுவ? இரண்டாவது என்ன சாதி? இதைத் தாண்டி வேட்பாளர் தேர்வு என்பது கிடையாது. கட்சிக்காகவோ வேட்பாளருக்காகவோ நான் இதைப் பேசவில்லை. 
 

இந்த வேட்பாளர் பட்டியலை எடுத்துப் பார்த்தால், மதுரையில் சு.வெங்கடேசன் தோழர் தேர்தலில் போட்டியிடுகிறார். நான் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனாலும், ஒரு எழுத்தாளர், ஒரு இளைஞர், கீழடிக்காக தொடர்ந்துப் போராடுகிற தமிழர். அவரைப் பற்றி நான் பேசவில்லை.  சாதாரணமாக வேட்பாளர் பட்டியலை எடுத்துப் பாருங்கள், எத்தனை வேட்பாளர்கள் இப்படி இருக்கிறார்கள். பெரும்பாலானா வேட்பாளர்களை சாதி அடிப்படையிலும், பண அடிப்படையிலும், அதிகார அடிப்படையிலும் கட்சிகள் நிற்கவைகின்றன. மக்களும் அப்படியே பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள், அதுதான் இங்கு பிரச்சனை. அப்போ, பணத்துக்காக ஓட்டுப் போட்டால் அவர் ஊழல் பண்ணுவார், சாதிய பார்த்து ஓட்டுப் போட்டால் அவர் கலவரம் பண்ணுவார், எந்த அதிகாரத்திற்காக ஓட்டுப் போடுறோமோ அந்த அதிகாரத்தை அவர் துஷ்பிரியோகம் பண்ணுவார். சாதிக்காக, பணத்துக்காக, அந்தஸ்துக்காக ஓட்டுப் போடலையினா இது எதுமே உனக்கெதிரா பாயாது. நேர்மைக்காகவும், தரத்திற்காகவும், அரத்திற்காகவும் ஓட்டுப் போடக்கூடிய ஒரு கல்வியை மக்களுக்குக் கொடுக்கணும். 
 

இந்தியா மாதிரியான தேசத்தில் எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை நிலங்கள், அவ்வளவு பேர் பிரிஞ்சு பிரிஞ்சுக் கிடக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல், வறுமையில், கல்வியில்லாமல், வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தொட்டு தூக்கணும்னா, நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு கல்வியைக் போதிக்கணும். அதைத்தான் செய்யணும்னு நினைக்கிறேன். நான் ஒரு விஷயத்தை உறுதியாக நம்புகிறேன். என் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் அரசாங்கமோ அதிகாரமோ நமக்கு ஒரு மண்ணும் செய்யாது. சமூக செயல்பாட்டாளர்களும், தோழர்களும், சமூக சேவகர்களும் தான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள். இவ்வாறு இயக்குனர் ராஜு முருகன் பேசினார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.