Skip to main content

பெரியார் கனவை நனவாக்கும் இரண்டு தீர்ப்புகள்!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

தந்தை பெரியார் இன்று இருந்திருந்தால், மனுசாஸ்திரத்தின் மண்டையில் உச்சநீதிமன்றம் சுத்தியலால் அடித்து வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளை கொண்டாட விழா எடுத்திருப்பார்.

 

periyar

 

தந்தை பெரியார் 1942 ஆம் ஆண்டு பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தைப் போல பெண்களுக்கு சமத்துவம் கோரும், பெண்களுடைய உரிமைகளைப் பேசும், பெண்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக வாதாடும் புத்தகம் இதுவரை உலகில் எங்கும் வெளிவந்ததில்லை என்று கூறுகிறார்கள்.

 

பெண்களை குழந்தைபெறும் மிஷினாகவும், கணவனுக்கு தொண்டூழியம் செய்யும் அடிமையாகவும், சமையல்காரியாகவும் பலவிதமாக பயன்படுத்திய சமூக அமைப்பில், தானே ஒரு பெண்ணாக பாவித்து, பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணங்களையும், தீர்வுகளையும் சொன்னவர் தந்தை பெரியார்.மனைவிக்கு கணவன் எஜமானன் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் இந்த வழக்கு விசாரணையில் எடுத்துவைத்த பெண்ணடிமை வாதங்களை எட்டி உதைத்திருக்கிறது.

 

periyar

 

இந்தியாவில் 'பிறன் மனை புணர்தல்' என்பது தொடர்ந்து குற்றமாகவே நீடிக்க வேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு விரும்புகிறது. "திருமணமான பெண்ணுடன் உறவுகொள்வதை குற்றமில்லை என்றாக்கினால் திருமண உறவின் புனிதம் கெட்டுவிடும், " என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

 

இந்திய தண்டனை சட்டத்தின் 497ஆவது பிரிவு பெண்கள் ஆண்களின் சொத்து எனும் ஆணாதிக்க சிந்தனைப்படி அமைந்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ஏற்கெனவே, அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டபூர்வ வயதை அடைந்த இருவர் விருப்பத்துடன் உடலுறவு கொள்வது அவர்களுடைய அந்தரங்க உரிமை என்பதால், இந்த 497 ஆவது சட்டப்பிரிவு அந்தத் தீர்ப்புடன் பொருந்தாது என்பதே இந்தத் தீர்ப்பின் அடிப்படை.

 

court

 

கள்ள உறவு, மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கும், விவாகரத்து உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதேசமயம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையே கள்ள உறவுக்கும் காரணமாக அமைகிறது. இதனாலேயே அத்தகைய உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

 

பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை இந்தச் சட்டப்பிரிவு பறிக்கிறது. தனி்ப்பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்திலிருந்து, பாலியல் உறவுக்கான தேர்வை துண்டிக்க முடியாது. திருமணம் ஆகிவிட்டது என்பதற்காகவே தனது பாலியல் உறவு சுதந்திரத்தை கணவனிடம் மனைவி அடகு வைத்து விடுவதில்லை. தனது விருப்பப்படி பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் உரிமையை பெண்ணிடமிருந்து பறிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட் கூறியிருக்கிறார்.

 

court

 

497 ஆவது பிரிவை நீக்கி தீர்ப்பளித்தாலும், கள்ள உறவு தொடர்பாக கணவனோ மனைவியோ தனக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதினால், அவர்கள் விவாகரத்து கோரி வழக்கு தொடரலாம். விவாகரத்து பெற இந்தக் காரணத்தின் அடிப்படையில் உரிமை இருக்கிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

"நாம் யாருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்லக்கூடாது"

 

"திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்வது சரியா, தவறா என்பதைவிட, விரும்பும் நபருடன் பாலுறவு கொள்ள சுந்திரம் உள்ளதா, இல்லையா என்பதே முக்கியக் கேள்வி" என்றெல்லாம் விமர்சகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

 

இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு ஆண், பெண் உறவுகளை கொச்சைப்படுத்தும் என்று ஆண்களும் பெண்களுமே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால், கள்ள உறவை சட்டவிரோதம் இல்லை என்பது பெண்களுக்கு மேலும் வலியைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

 

உச்சநீதிமன்றம் ஒரு சட்டப்பிரிவை தேவையி்ல்லை என்று நீக்கி உத்தரவிட்டிருப்பதால் மட்டுமே, மனைவியர் தங்களுடைய கணவர்களுக்கு தெரிந்தே வெளி ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வார்கள் என்றோ, கணவர்கள் தங்கள் மனைவியருக்கு தெரிந்தே வெளி பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார்கள் என்றோ கருதினால் அதைப்போன்ற சிறுபிள்ளைத்தனம் வேறு இருக்க முடியாது.

 

அதைப்போலவே, உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது, இனி நான் உன் சொத்து இல்லை. உனது அடிமையில்லை. நீ என் எஜமானன் இல்லை. உன்னுடன் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு விவாகரத்து கொடு என்று பெண்களோ, ஆண்களோ பொங்கியெழப் போவதில்லை. இந்திய சமூக அமைப்பில் அத்தகைய நிலை உருவாக வாய்ப்பிருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

 

எதிர்காலத்தில் ஆணும் பெண்ணும் நண்பர்களாக, சம உரிமையுடன் கூடிய இணையர்களாக வாழ்வதற்கு இந்த தீர்ப்பு உதவக்கூடும் என்ற வகையில் இது ஒரு முன்னோடி தீர்ப்பாகக் கருதி வரவேற்கலாம்.

 

 

இரண்டாவது தீர்ப்பு!

 

கடவுளை வழிபடுவதில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் உச்சநீதிமன்றம் தகர்த்திருக்கிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடச் செல்ல முடியாத நிலை இருந்தது.

 

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாயைக் காரணம் காட்டி இந்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவில் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் வீட்டில் உள்ள பூஜை அறைக்குள்ளேயோ, சாமி படங்களை வணங்கவோ மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.

 

ஐயப்பன் கோவில் தவிர, மாதவிடாயைக் காரணம் காட்டி வேறு எந்தக் கோவிலும் பெண்களை வழிபட அனுமதி மறுத்ததில்லை. எல்லாக் கோவில்களுக்கும் பெண்கள் செல்கிறார்கள். பழனி முருகன் கோவிலுக்கு விரதமிருந்து எல்லா வயதுப் பெண்களும் பாதயாத்திரை செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது மாதவிடாய் வந்துவிட்டால் பயணத்தை ரத்து செய்து ஊருக்குத் திரும்பிவிடுவார்கள்.

 

saparimalai

 

ஐயப்பன் கோவில் விஷயத்தில் வனப்பாதை என்பதால் மாதவிடாய் காலங்களில் புலி உள்ளிட்ட விலங்குகள் ரத்தவாடை உணர்ந்து ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று கருதியே பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

 

ஆனால், இப்போது போக்குவரத்து மிகவும் முன்னேறி இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வசதிகளை செய்துதரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில்பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு எனகேரள அரசு தெரிவித்திருந்தது. இந்த விசாரணையில் கருத்துதெரிவித்த நீதிபதிகளும், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடுநடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல்சாசனத்திற்கு எதிரானது” என கூறியிருந்தனர். குறிப்பிட்ட வயதுடையபெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளை மீறுவதாகும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது.

 

court

 

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இதற்கிடையேதான் கேரளாவில் தொடர் மழைபெய்து மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. உடனே, அந்த வெள்ளத்திற்கு ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற கேரள அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் கருத்துதான் காரணம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்தார். அவருடைய கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆதரித்திருந்தார்.

 

இத்தகைய பிற்போக்கு கருத்துகளை தகர்த்தெறிந்து உச்சநீதிமன்றம் ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. பெண் கடவுள்களை வணங்கும்நாட்டில் பெண்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. கடவுளைவணங்குவதில் ஆண் - பெண் பாகுபாடு கூடாது. கோவிலுக்குள் பெண்கள்செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 

ஆனால், பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

 

மொத்தத்தில் இந்த இரண்டு தீர்ப்புகளுமே பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் மிக முக்கியமான தீர்ப்புகள் என்றே பார்க்க வேண்டும். தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்த இரண்டு தீர்ப்புகளையும் கொண்டாடி வரவேற்றிருப்பார். அவர் இல்லாவிட்டாலும், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் அவருடைய சார்பில் இந்த இரண்டு தீர்ப்புகளையும் வரவேற்கிறார்கள்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.