Skip to main content

எங்களின் அடுத்த போராட்டம் இதுதான்! - வேல்முருகன் தீர்க்கம்

Published on 07/07/2018 | Edited on 11/07/2018

காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைத்ததற்காக, புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாகர்கோவில் -கோட்டார் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போடுகிறார். நக்கீரனுக்காக அவரைச் சந்தித்தோம்..

உங்களை தேசவிரோதி என்று அரசு குற்றம்சாட்டுகிறதே?

காமராஜர் அமைச்சரவையில் என் தாய்மாமன் பூவராகன் அமைச்சராக இருந்தார். உழவர் உழைப்பாளர் கட்சியை உருவாக்கிய ராமசாமி படையாச்சியார் என் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என் தாத்தா கோவிந்தசாமி. நேரு பிரதமராகவும், காமராஜர் முதல்வராகவும் ஆதரவுக் கடிதம் கொடுத்தவரும் அவர்தான். மக்களுக்கும், இயற்கைக்கும் விரோதமான மோடியையே நம்பி ஹிட்லர் ஆட்சி நடத்தும் எடப்பாடிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா? ஜீனிலேயே அரசியல் போர்க்குணம் கொண்ட என்னை தேசவிரோதி என்றழைக்க இவர்கள் யார்?

 

velmurugan


தமிழக வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள்தான் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக தமிழிசை குற்றம்சாட்டுகிறாரே?

8 வழிச்சாலையால் சேலம் மற்றும் சென்னை மாநகர மக்களுக்கு என்ன பயன்? இந்த சாலையை பன்னாட்டு பெருநிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்காகவோ, கனரக வாகனங்கள் செல்வதற்கோ மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால், ஏழை எளிய மக்களுக்கு என்ன லாபம் என்பதை என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தமிழிசை தயாராக இருப்பாரா? ஒருவேளை 8 வழிச் சாலைக்கு மக்கள் இடமளித்தால், அவர்கள் நோகாதவண்ணம் சுங்கச்சாவடிகள் அமைக்கமாட்டோம் என தமிழிசையால் உத்தரவாதம் தரமுடியுமா?

 

 


தமிழகத்தில் நடக்கும் மக்கள் வாழ்வாதாரப் போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் போராட்ட முடிவுகள் சரியானதாக இருக்கிறதா?

89 எம்.எல்.ஏ.க்களுடன் பவர்ஃபுல்லாக இருக்கும் தி.மு.கவுக்கு சென்னையில் இருந்து குமரிவரை கிளைகள் இல்லாத ஊர்களே இல்லை. நினைத்த நேரத்தில் லட்சம் பேரை திரட்டக்கூடிய பலம்வாய்ந்த அந்தக் கட்சி, இந்நேரம் 5 லட்சம் பேருடன் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். சாதாரண கறுப்புக்கொடி போராட்டத்திற்கு ஏழாண்டுகள் சிறையென்று கவர்னர் மிரட்டுகிறார். கலைஞர் ஆக்டிவாக இருந்தாலோ, ஜெயலலிதா இருந்திருந்தாலோ அவர் வாய் திறந்திருப்பாரா?

சுங்கச்சாவடி உடைக்கப்பட்ட வழக்கில் போலீசார் இரண்டுமாதம் கழித்து உங்களை கைது செய்ததன் பின்னணி என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்ரல் 1ஆம் தேதி டோல்கேட் அசோஷியன் தலைவருக்குரிய உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியையும் சேர்த்து, 45 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டோம். காவல்துறையின் அத்துமீறலே சுங்கச்சாவடியை உடைக்கக் காரணம். இந்தப் போராட்டத்தில் என்னைத்தவிர 11 பேரை மட்டும் வீடியோவைப் பார்த்து கைதுசெய்தனர். ஆனால், இரண்டு மாதத்திற்குப் பிறகு, என்னைக் கைதுசெய்ததன் நோக்கம் சிறையில் இருந்து வந்தபிறகுதான் தெரிந்தது. ஐ.பி.எல். மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்ட பலகோடி இழப்புக்கு பழிதீர்க்கத்தான் கவர்னர் மாளிகைக்கும், காவல்துறைக்கும் பெரிய அமவுன்ட்டைக் கைமாற்றி என்னைக் கைது செய்தார்கள்.

 

 


தமிழகத்தில் அடுத்து உங்கள் போராட்டம் எதை முன்வைத்து இருக்கும்?

லாட்டரிச் சீட்டை தடைசெய்யவேண்டுமென்கிற கோரிக்கையையும், தனி கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தது நான்தான். ஜெயலலிதா அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தடையும் செய்தார். ஜெயலலிதா தடைசெய்த லாட்டரியை மீண்டும் கொண்டுவர எடப்பாடி நடவடிக்கை எடுத்துவருகிறார். 5 ஆண்டுகளுக்கு 43ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்ற வரைவுத்திட்ட விளக்கத்தை அதிகாரிகள் எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. லாட்டரியை மீண்டும் கொண்டுவர எடப்பாடிக்கு 400 கோடி கமிஷன் பேசப்பட்டுள்ளது. டாஸ்மாக்கிற்கு நிகரான லாட்டரி சீட்டு மீண்டும் வருமென்றால், அதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்தும் என எடப்பாடியை எச்சரிக்கிறேன்.





 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.