Skip to main content

கவனமாக அடியெடுத்து வைக்கிறாரா  கனிமொழி ?

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

இந்தியாவே தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. தலைவர்களின் பிரச்சார உறுதிமொழிகளையும் கடந்த முறை தந்த வாக்குறுதிகள் நிறைவேறியதையும் ஒப்பிட்டு, எந்தப் பக்கம் ஓட்டுப் போடலாம் என, மக்கள் நாடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மக்கள் நாடி பிடிக்கும் கைகளில் ஒன்று சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதுபெற்ற கனிமொழியுடையது, மற்றது மருத்துவர் தமிழிசையினுடையது.  தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க.வோடு சுயேட்சைக் கட்சிகள் பலவும் போட்டியிட்டாலும் அசல் போட்டி கனிமொழிக்கும் தமிழிசைக்கும்தான்.

 

kanimozhi -tamilisai



தமிழிசை தரப்பு விளாத்திக்குளம் தொகுதியிலுள்ள அ.தி.மு.க. வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என நினைத்திருக்கையில், விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவது முதல் ஷாக்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை தமிழிசை, அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதனைக் கண்டுகொள்ளவில்லை என்கிற வருத்தம் அ.தி.மு.க. தரப்பிலிருக்கிறது. தவிரவும் இப்பகுதியில் ஓரளவு வாக்கு வங்கியுள்ள த.மா.கா. மாவட்டச் செயலாளர்களான தெற்கு விஜய சீலனையும் வடக்கு கதிர்வேலனையும் இதேரீதியில்தான் நடத்தியிருக் கிறார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சி களிலும் இவர்கள் ஆப்சென்ட். பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சி பொறுப் பாளர்களுக்கும் இதே நிலைதானாம். ஆனால் அழைக்காமலே வேட்புமனு தாக்கலுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தே.மு.தி.க. மா.செ. ஆறுமுகநயினார்.

 

kanimozhi



அ.தி.மு.க. மா.செ., தொகுதியை நன்கறிந்தவர் என்கிற முறையில் பிரச்சாரத்துக்கு டூர் சார்ட் போட்டால், தமிழிசை தரப்பிலிருந்து வேறொரு சார்ட் போடப்படுகிறது. உள்ளூர் அ.தி.மு.க.வினரும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினரும் சங்கரராமேஸ்வர் கோவிலிலிருந்து பழைய முனிசிபல் அலுவலகம் வந்து, வ.உ.சி. சந்தையிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதாகத் திட்டம். ஆனால் தமிழிசை தரப்போ அந்த திசையைத் தவிர்த்து அந்தோணியார் கோவில் வழியாக காரியாலயம் நோக்கிச் சென்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு அ.தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது. தமிழிசை அங்குசென்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க, டி.எஸ்.பி. சகாய ஜோஸ் "அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யக்கூடாது' என அவர்களை அங்கிருந்து அகற்றியது தனிக்கதை.

அதிருப்திகள் இப்படி ஒருபுறம் இருந்த போதும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச் செந்தூர் பகுதி கிராமங்களில் கோவில்களில் மாவிளக்கு பூஜை, குத்துவிளக்கு பூஜை ஏற்பாடு செய்து வாக்கு சேகரித்து வருவது நல்ல அடித் தளத்தைத் தந்திருக்கிறது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் நிறைந்திருக்கும் கோவில் பாடல் கச்சேரி களில், அங்குள்ள பாடகரைக் கொண்டு வாக்கு சேகரிப்பதும் பலன் தருமெனவே தெரிகிறது.
 

kanimozhi



இதுதான், தான் போட்டியிடும் தொகுதி என பல மாதகாலம் முன்பே திட்டமிட்டு, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டு தொகுதி முழுவதும் வலம் வருகிறார் கனிமொழி. அதோடு ஒவ்வொரு சமுதாயத் தலைவரையும் சந்தித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள விளாத்திக்குளம், கோவில்பட்டி, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் பகுதி மக்களின் வாக்குகளை ஈர்ப்பதுதான் கனிமொழிக்கு முன்பிருக்கும் சவாலான வேலை. ஆண்டாண்டு காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப் பட்ட தூத்துக்குடியை பா.ஜ.வுக்கு தாரை வார்த்ததால் அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூட்டால் 13 நபர்கள் பலி, நசியும் கடற்கரையோர மக்களின் வாழ்வாதார நிலை, "ஒக்கி' புயலில் மத்திய-மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் என பல்வேறு விவகாரங்கள் கனிமொழிக்கு துணைசெய்யக் காத்திருக்கின்றன.

ஆனாலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரின் கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லாமல் இல்லை. காங்கிரசைச் சேர்ந்த எட்டையபுரம் சீனிவாசன் தலைமையிலான டீம், "எங்களை தி.மு.க. மதிக்கவில்லை'’என கூட்டமே நடத்திக் காட்டியது. இதனை தி.மு.க. எப்படியோ சமாளித்து வந்தாலும் "கனிமொழி வென்றுவிட்டால் நமக்கு வாய்ப் பிருக்காதோ' என உள்ளடி வேலையிலும் இறங்கியிருக்கிறது கட்சியைச் சேர்ந்த சீனியர் தரப்பு. அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், ஜெயதுரை, ஜோயல் என தி.மு.க. அதிகார மையம் நான்காகப் பிரிந்து கிடப்பதும் எதிரணிக்கு சாதகமாக உள்ளது.

வேட்பாளர் கனிமொழியைக் காரணம்காட்டி சொந்தக் கட்சியினரையும் தொழிலதிபர்களையும் காசு கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மிரட்ட... இதனாலேயே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுவரை போனதும் இடைஞ்சல்தான். இப்படி இரு தரப்பிலும் சாதக, பாதகங்கள் இருக்க... கள நிலவரத்தை கணித்து கவனமாக அடியெடுத்து வைக்கிறார் கனிமொழி. தமிழிசை தரப்பு சவாலாக இருக்கிறது. 
 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.