Skip to main content

"அவர் எல்லாம் ஒரு தலைவரா...? பதவிக்காக காலில் விழுவது எங்கள் ரத்தத்திலே கிடையாது..." - டிடிவி தினகரன்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

jkl

 

எடப்பாடியின் நேற்றைய பேட்டிக்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, " சில நாட்கள் முன்பு உங்களை எல்லாம் சந்தித்தபோது என்னிடம் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டீர்கள். மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு எங்களின் செயல்பாடு இருக்கும் என்று தெரிவித்திருந்தேன். நீங்கள் கூட அதிமுகவோடு கூட்டணி என்றெல்லாம் எழுதினீர்கள். அதற்கு நாம் தற்போது பதில் சொல்ல வேண்டும்.

 

அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக இருக்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் கூட அந்தக் கட்சியால் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்க முடியவில்லை. இதுதான் எடப்பாடியின் நிலைமை. அவரால் எதையும் செய்ய முடியாது. அவர் மெகா கூட்டணி அமைப்பேன், அந்தக் கூட்டணி அமைப்பேன் என்பதெல்லாம் அவருக்கு வேண்டுமானால் ஈஸியாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நடக்கப்போவதில்லை. 

 

இருக்கிற அதிமுக கட்சியினரைக் கூட அவரால் தொடர்ந்து கட்சியில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இவர் எப்படி மெகா கூட்டணி அமைப்பார். வாய் வேண்டுமானால் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் எடப்பாடி சொல்வதெல்லாம் ஒருகாலும் நடக்காது. பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக 25 எம்பிக்களை தமிழகத்திலிருந்து பெறுவோம் என்று கூறி வருகிறார். அப்படியென்றால் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டால்தான் இந்த எண்ணிக்கையில் அவர்கள் வெற்றிபெற முடியும். அப்படி என்றால் எடப்பாடி மெகா கூட்டணியின் தலைவர் மட்டும்தானே, தேர்தலில் நிற்கமாட்டாரா என்பது தெரியவில்லை.

 

அதிமுக தொடர்பான பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றுவிட்டது, அங்குதான் அதிமுக யாருக்குச் சொந்தம் என்பது தெரிய வரும். எனவே உண்மை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது. அதைப்போல அமமுக வேறு எந்தக் கட்சியுடனும் இணையும் என்று சொல்லக்கூடாது. அதற்கு வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை. எடப்பாடி போல் தொண்டர்களை அடகு வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. இயக்கத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க கட்சி நடத்தி வருகிறோம். யாருக்கோ பயந்து எடப்பாடி மாதிரி கட்சி நடத்தவில்லை. 

 

எந்தக் காலத்திலும் எடப்பாடியை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை. அவருடன் கூட்டணிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று கூறியதாகக் கேள்வி எழுப்பினீர்கள். அவருடன் கூட்டணி என்பது காலரை சதவீதம் கூட இல்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு எடப்பாடி பெரிய ஆள் இல்லை. அவரைப் போல் பதவி வேண்டும் என்றால் காலில் விழவோ இல்லை பதவி கிடைக்கவில்லை என்றால் காலை வாரவோ எங்களுக்குத் தெரியாது. பதவிக்காகக் காலில் விழும் வம்சத்தில் வந்தவர்கள் இல்லை நாங்கள்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது கூட அவர்தான் என்னைத் தேடி என் வீட்டிற்கு வந்துள்ளார். அவரைத் தேடி நான் போனதில்லை. இதைப் பெருமைக்காக நான் கூறவில்லை. எடப்பாடி மாதிரி எதையும் எதிர்பார்த்து யாரையும் சார்ந்திருக்கமாட்டேன். துரோகம் செய்வதனால் எத்தகைய பதவி கிடைக்கிறது என்றாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எனவே எங்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைக்கும். பாஜக, காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைத்தால்தான் நல்லது. அப்படி இல்லை என்றாலும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கவும் அமமுக தயாராக இருக்கிறது.

 


 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.