Skip to main content

"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே!" - சி.ஆர்.சரஸ்வதி  

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

விவாதங்களில் எத்தனை பேர் இருந்தாலும் இவரது குரல் தனியே ஒலிக்கும். அதிமுகவில் இருந்த போதும், இப்பொழுது அமமுகவில் இருக்கும்போதும் சுழன்று சுழன்று கூட்டங்கள், பேட்டிகள், விவாதங்கள் என சுற்றி வருகிறார் அமமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி. தீபாவளியை முன்னிட்டு அவரிடம் ஒரு நான்-பொலிட்டிக்கல் பேட்டி எடுத்தோம்...

 

c.r.saraswathy



பொதுவாக தீபாவளியை எப்படி கொண்டாடுவீங்க?

பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவோம். தீபாவளியை விட பொங்கல் பண்டிகையை எனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமத்தில்தான் கொண்டாடுவோம்.

இப்போதெல்லாம் டிவி, செல்போனில் படம் பார்க்கிறோம். நாங்க சின்ன வயதாக இருக்கும்போது, சினிமாவுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள். வீட்டில் அடம் பிடித்து, குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீஸாகும்போது அதை பார்த்தே ஆகனுமுன்னு அழுது புரளுவேன், பிறகு அழைத்துச் செல்வார்கள். தலைவர் எம்ஜிஆர் படத்தைப் பார்க்க பெரும் கூட்டமே திரளும். அதுதான் எங்களுக்கு தீபாவளி. பிறகு அந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் எங்களுக்கு இன்னொரு தீபாவளின்னு கொண்டாடுவோம்.
சினிமாவுக்கு வந்த பிறகு நான் நடிச்ச படங்கள் தீபாவளிக்கு வருதுன்னு சந்தோஷப்படுவேன். வெற்றி பெற்ற பின்னர் கூட நடிசவங்களோட சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வேன்.

அதிமுகவில் இணைந்த பிறகு வருடம்தோறும் தீபாவளிக்கு அம்மாவை (ஜெயலலிதா) இல்லத்திற்கு சென்று சந்தித்து புத்தகங்களை பரிசாக அளிப்பேன். பொதுவாக அனைவரும் புத்தாண்டு அன்றுதான் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் நான் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அதற்கு அவர் 'நன்றி கடிதம்' அனுப்புவார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்குமே நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவார்.

இப்போது அவரது மறைவுக்குப் பிறகு தீபாவளியை நான் கொண்டாடுவதில்லை. எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு போராட்டக் களத்தில் உள்ளது. எங்களது போராட்டம் வெற்றி பெற்ற பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையெல்லாம். எங்களது போராட்டம் வெற்றி பெற்று அடுத்த வருடம் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம்.

உங்கள் சினிமா வாழ்க்கை பற்றி...

'எங்க சின்ன ராசா'தான் நான் நடிச்ச முதல் படம். அதில் தொடங்கி தமிழ், தெலுங்கு எல்லாம் சேர்த்து 85 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். முழு நேர அரசியலுக்கு வந்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

 

c,r,saraswathi enga chinna rasa



நடிக்க வாய்ப்பு வரவில்லையா? வேண்டாம் என்று விட்டுவிட்டீர்களா?

ஏதாவது ஒன்றில்தான் டிராவல் பண்ண முடியும். எங்கேயாவது ஷூட்டிங்கில் இருக்கும்போது, கூட்டத்திற்கு நேரம் ஆகுது வரவில்லையா என்பார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, ஏதாவது விவாத்தில் கலந்து கொண்டிருக்கும்போது ஷூட்டிங் நேரத்திற்கு வரவேண்டாமா என்பார்கள். எதற்கு இதெல்லாம்... அதான் முழு நேர அரசியல் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். வருடத்தில் ஒரு நாள் கிடைக்கும் மகிழ்ச்சியில் இப்படி கட்டுப்பாடு விதிப்பது சரியா என்று பலரும் கேட்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

குழந்தைகளை நினைச்சாதான் கஷ்டமாக இருக்கிறது. மாசில்லாத சுற்றுச்சூழலை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதேநேரத்தில் மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று நீதிமன்றம், சமூக ஆர்வலர்கள் சொன்னதற்கு பின்னர் நிறைய மாறி இருக்கிறது. தற்போது அதிக ஒலி எழுப்பும் வெடிகளை பொதுமக்கள் வெடிப்பதில்லை. முன்னரெல்லாம் விடிய விடிய வெடிப்பார்கள். அதுபோன்றெல்லாம் இப்போது இல்லை. 10 மணிக்கு மேல் யாரும் வெடிப்பது இல்லை. மேலும் அதிக புகை, ஒலி வரக்கூடிய பட்டாசுகளை தயாரிப்பதும் இல்லை, அதுபோன்ற பட்டாசுகளை பொதுமக்கள் வாங்குவதும் குறைந்துவிட்டது.

தீபாவளிக்கு மட்டுமா பட்டாசுகளை பயன்படுத்துகிறார்கள்? நல்லது கெட்டது, திருவிழா உள்பட எல்லாவற்றிக்கும் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். இந்த விசயத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு தன்னோட வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. சிவகாசியில் இந்தத் தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதை நினைத்து பார்த்திருக்கலாம்.

 

 


 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.