Skip to main content

சபரிமலையில் நுழைவேன் என கூறிய 'த்ருப்தி தேசாய்' யார்?

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்த நாள்முதல் இன்றுவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது கேரள அரசியல்.  மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை திறக்கும் இந்த நேரத்தில், கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என கூறியிருக்கிறார் த்ருப்தி தேசாய் எனும் பெண்.  இப்படி கூறி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த த்ருப்தி தேசாய் யார்?

 

பெங்களூருவில் உள்ள நிபானி தாலுகாவில் பிறந்த இந்த பெண் தனது 8 வயதில் குடும்பத்துடன் புனேவில் குடியேறினார். பள்ளிப்படிப்பை முடித்தபின் புனே கல்லூரியில் சேர்ந்த இவர், பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டார். இந்நிலையில் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடிவு செய்த இந்த பெண் விகாஸ் சங் என்பவருடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு புனேவில் உள்ள குடிசைவாசிகளின்  மறுவாழ்விற்காக செயல்பட்டார். பிறகு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், 2010 ஆம் ஆண்டு ’பூமாதா இயக்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் 4000 பெண்களை உறுப்பினராக சேர்த்தார். 2011 ல் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு போராட்டத்திலும்  கலந்து கொண்டார். 

 

des

 

2013 ஆம் ஆண்டு சரத் பவாரின் குடும்பத்துக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பெண்களை சேர்த்துக்கொண்டு, பெண்களை உள்ளே அனுமதிக்காத சனி சிங்னாபூர் கோவிலுக்குள் நுழைந்தார். இதனை போலவே கோல்ஹாபுரில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலில் நுழைய முற்பட்டபொழுது அங்குள்ள அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். இதுபோல் மேலும் பல கோவில்களுக்குள் நுழைய முயற்சித்த அவர், அதே 2016 ல் ஹாஜி அலி தர்காவில் உள்ளே செல்ல முயற்சித்த பொழுது அங்கிருந்தவர்களின் போராட்டத்தால் உள்ளே செல்லாமல் மீண்டும் திரும்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தர்காவில் நுழைந்த அவர் அதன் உட்பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் சென்ற மாதம் உச்சநீதிமன்றம் சபரிமலை தீர்ப்பை அளித்த பின்பு, அதனை பின்பற்றி பெண்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்த, புனே வந்த பிரதமர் மோடியை அனுமதியின்றி நேரில் பார்க்க சென்றார். போலீசார் இவரை கைது செய்து, பிரதமர் சென்ற பின் விடுவித்தனர். த்ருப்தி தேசாய்க்கு திருமணமாகி, 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவரது குடும்பம் அவரது செயல்களுக்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறுகிறார்

 

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.