Skip to main content

2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே!!! - விஜய் ரசிகர்கள் போஸ்டர்! 

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

dddd

 

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் ரஜினியைப் போல பல ஆண்டுகளாகவே கருத்துத் தெரிவித்து வந்தார். ஆனால் எஸ்.ஏ.சியின் நலம் விரும்பிகள் சிலர் ரஜினியைப் போல வாய்ச் சொல் வீரராக இருக்காதீர்கள் என்று அட்வைஸ் சொல்ல, அதன்படி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அதில் சில வெற்றிகளும் கிடைத்தது. 

 

இந்த நிலையில்தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவதற்கு முன்னோட்டமாக, தற்போது திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், பெரிய சர்ச்சைக்கு உள்ளானதோடு, விஜய் அரசியலுக்கு வரும் முன்னோட்டம்தான் என்று பேசும்படி ஆகியது.

   

vijay fans


வழக்கமாக  விஜய் பிறந்த நாள் அன்றோ அல்லது திரைப்படம் வெளியாகும் அன்றோதான் போஸ்டர்களை அடித்துக் கலக்கி எடுப்பார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் இப்பொழுதோ, இதில் இருந்து மாறுபட்டு விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு ஈடாக விஜய் புகைப்படத்தை அச்சடித்து அதில், 


இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும்

இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே 

2021 உங்கள் தலைமையில் அமையட்டும்

தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்


என்கிற வாசகங்களுடன் திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர், திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி கலக்கி எடுத்துள்ளனர்.

 

vijay fans


நாம் இது சம்பந்தமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைமை ஒப்புதலுடன் தான் தற்போது திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளோம். விரைவில் சென்னை, மதுரை உள்ளிட்ட... ஏன் தமிழகம் முழுவதும் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.

  

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பா.ஜ.கவில் சேரவுள்ளதாக அண்மையில் வந்த தகவலை அவர் மறுத்த நிலையில்தான், திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டிய போஸ்டர் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிட்டது.

  

vijay fans

 

இந்த போஸ்டர் விவகாரம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு வர, விஜயின் பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, களநிலை ஆலோசனைகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

     

cnc

 

திருச்சியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியது மாவட்டத் தலைவர், ராஜா தரப்பு ஆதரவாளர்கள். ஆனால், அவர்களை இதுவரை விஜய் மற்றும் சந்திரசேகர் சந்தித்துப் பேசவில்லை. பிற்பகலுக்கு மேல் அவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.   

 

 

 

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.