Skip to main content

“உங்க தாத்தாவையே பார்த்தவர் கார்கே” - மோடியை வறுத்தெடுத்த திருச்சி வேலுச்சாமி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Trichy velusamy Interview

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அகில இந்திய அளவில் உள்ள பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்தும், சமகால அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஈடுபாட்டோடு செயல்பட்டால் நாட்டில் எதுவுமே சாத்தியம் தான். அதுபோல்தான் ஒத்த கருத்துடைய, இந்திய நாட்டின் நலனை விரும்பும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தும். நாடு முழுவதும் மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிரான ஒரு மனநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய தன்னம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற சிந்தனையுடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் இந்த ஆட்சியை நிச்சயம் வீழ்த்த முடியும். இதற்கான தீர்மானம் தான் சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.

 

பத்தாண்டு காலத்தில் நாங்கள் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறோம், அதனால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்று சொல்லும் தைரியம் பாஜகவுக்கு இருக்கிறதா? ஒரு மதம், ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என்று நாட்டு மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ளது பாஜக அரசு. எனவே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தவறான கனவு காண்பது பாஜக தான். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை 100 சீட்டுகளுக்குள் அடக்கிவிடலாம் என்று நிதீஷ் குமார் சொன்னது மிகச் சரி.

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் கூலிக்காகத் திரண்டவர்களா? இதை விமர்சிக்கும் துக்ளக் குருமூர்த்தி கனவுலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவது அவருக்கு நல்லது. நாட்டு மக்களிடையே தற்போது ஒரு அமைதிப் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு அரசியலைப் பார்ப்பவர்களுக்கு அது புரியாது. 

 

நான் டீ விற்றவன், ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி தினமும் தன்னுடைய மேக்கப்பிற்கே லட்சக்கணக்கில் செலவழிக்கிறார். அவர் போல் அல்ல மல்லிகார்ஜுன கார்கே. 50 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அவர், மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர். எனவே மோடிக்கு இதெல்லாம் புரியாது. இந்த நாட்டின் பிரதமராக ஒரு தலித்தை அறிவிக்க பாஜகவால் முடியுமா? பட்டியலினத்தைச் சேர்ந்த, நீண்ட அரசியல் அனுபவமுள்ள கார்கேவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல் நடிக்கிறார் மோடி. உங்களுடைய தாத்தாவையே பார்த்தவர் கார்கே. தாமரை எப்போதும் சாக்கடையில் தான் மலரும். தற்போது மக்கள் தெளிவாகி விட்டனர். இனி பாஜகவால் வெற்றி பெற முடியாது.

 

 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.