Skip to main content

‘நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை..’ அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான பார்வையை மாற்றிய செல்வங்கள்! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது போன்றும், பள்ளி டேபிள், பெஞ்சுகளை உடைப்பது போன்றும் காணொளிகள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிகழ்வுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, துறை அமைச்சராக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன்


ஆசிரியர்கள் கோபத்தில் திட்டுவதைக் கூட இப்போதெல்லாம் மாணவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் அடித்துத் தான் மாணவர்களை வளர்த்தார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் நடப்பதில்லை. ஒரு மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே அடித்தார்கள். ஆனால், இப்போது எந்தவொரு ஆசிரியரும் மாணவர்களை அடிப்பதில்லை. எடுத்துச் சொல்லித் தான் புரிய வைக்கிறார்கள்.


அதையும் தாண்டி வரம்பு மீறி சிலர் நடந்து கொள்ளும் போது, அவர்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் சில தண்டனைகளைக் கொடுக்க வேண்டி உள்ளது. தவறு செய்தால் தண்டை கிடைக்கும் என்பதை இந்த வயதிலேயே உணர வைக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. இப்போது கூட மாணவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். 


இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புகளில் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தான் எங்கள் பொறுப்பு, அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார். 

 

அதேபோல், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஒரு காணொளியை வெளியிட்டார் அதில் அவர், “இரண்டு காணொளிகளை பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட மாணவர் தாக்க முற்படுகிறார். அதேபோல், மற்றொரு இடத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த வகுப்பறையில் இருக்கும் டேபிள், பெஞ்சு உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு உடைக்க முற்படுகிறார்கள். பாரதியார் சொல்வதுபோல், “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் சூழ்நிலையில் தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். 


நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நம் பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் பெரிய வருமானமோ, சொத்தோ இல்லை. உங்க அப்பா அம்மாவிற்கு சொத்து இல்லை. ஆனால், உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளன. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளி, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம், அந்த வகுப்பறை, அங்கிருக்கும் டேபிள், பெஞ்சு, அங்கிருக்கும் ஆசிரியர் இது தான். உங்கள் சொத்து. 

 

நாங்க படிக்கும் போது பள்ளியில் டேபிள், பெஞ்சு எதும் கிடையாது. கீழே தரையில் அமர்ந்துதான் படித்தேன். இவற்றையெல்லாம் அரசு உங்களுக்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறது. அதனைத் தான் நீங்கள் உடைக்கிறீர்கள். 

 

இந்த ஆசிரியர்கள்தான் நமக்கும், கணிதம், அறிவியல், கணிணி, மூவாயிரம் ஆண்டு வரலாறு, மனித சரித்திரம் உள்ளிட்டவற்றை கற்பிப்பார்கள். இவர்கள் தான் நமக்கு மிகப் பெரிய சொத்து. அப்படி இருக்கும்போது, அறிவையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், இதுபோன்ற வன்முறை செயல்களை ஏன் செய்கிறீர்கள். 

 

இந்தச் செயல்கள், நம் வீட்டிற்கே நாம் தீவைப்பது போன்றும், நம் கை, கால்களை நாமே வெட்டுவது போன்றும் உள்ளது. உங்கள் ஆதாரங்களை நீங்களே சேதப்படுத்திக் கொள்கிறீர்கள். இனி இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வருவது என்பது ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு வருகிறோம். இங்குதான் நீங்கள் முழு மனிதராக, சிந்தனையாளராக வளரவேண்டிய ஆற்றல் படைத்தவராக மாறவேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக்கூடம். ஆகவே அந்த இடத்திற்கு மிகவும் மரியாதை தரவேண்டும். ஆசிரியர் பெருமக்களை மிகவும் உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனங்கள் மாறவேண்டும். பள்ளிக்கூடங்களில் இது போன்ற வன்முறை சம்பங்கள் என்பது மிகப் பெரிய குற்றம். ஆகவே இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யாதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், திருச்சி லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணினி பிரிவில் படிக்கும் 38 மாணவர்கள், அவர்களின் சேமிப்புத் தொகையைக் கொண்டு தங்களின் வகுப்பறையை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுபொலிவுறச் செய்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும், மொத்த நிகழ்வையும் முன்னெடுத்து சென்றதாகவும், அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் நம்மிடம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான மேற்குறிப்பிட்ட வீடியோக்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான ஒரு பார்வையை, இந்த மாணவர்களின் செயல் மாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

 

 

Next Story

திருச்சிக்கு கலைஞர் நூலகம்; வலுக்கும் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Demand for an kalaignar library in Trichy

திருச்சியில் உள்ள மாவட்ட மைய நூலகம் மத்திய மாவட்டங்களில் மிகப்பெரிய பொது வாசிப்பு வசதியாக இருக்கலாம். ஆனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடமளிக்க போதுமான இடவசதி இல்லை. இந்த ஆர்வலர்கள் திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைக்கக் கோரி வளர்ந்து வரும் முழக்கத்தில் இணைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 142 நூலகங்கள் உள்ளன, மேலும் மேற்கு பவுல்வர்டு சாலையில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம், வேலை தேடுபவர்களுக்குப் பார்க்கவும் தேர்வுக்குத் தயாராகவும் மிகப்பெரியது. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 800 இளைஞர்கள் நூலகத்திற்கு வருகை தருகின்றனர், ஆனால் அதன் நடைபாதைகளிலும் பார்க்கிங் இடங்களிலும் அமர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 64 கிளைகள் மற்றும் 65 கிராம நூலகங்கள் உள்ளன, ஆனால் அவை மைய நூலகத்திற்கு நிகரான உட்கட்டமைப்பு இல்லை. மைய நூலகத்தின் இரண்டு தளங்களும் மொத்தம் 45,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களின் உயரும் வருகையால் நூலகத்தில் அனைவரும் அமர்ந்து படிக்க முடியவில்லை.

நூலகத்தை தினசரி பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பெண்கள் செய்தித்தாள் பிரிவு மற்றும் தரைத்தளத்தில் உள்ள நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர், ஆண்கள் முதல் தளத்தில் உள்ள குறிப்புப் பிரிவு மற்றும் அருகிலுள்ள நடைபாதைகளில் தயார் செய்கிறார்கள். TNPSC குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க இரண்டாவது தளம் பயன்படுத்தப்படுகிறது. “மதுரையில் உள்ள, கோவைக்கு முன்மொழியப்பட்ட கலைஞர் நூலக வசதி நமக்குத் தேவை. இத்தகைய வசதி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைச் சேர்ந்த UPSC மற்றும் TNPSC ஆர்வலர்களுக்கும் உதவும்" என்று NEET PG 2024 க்கு தயாராகும் செந்தில் குமார் கூறினார்.

சராசரியாக, ஒவ்வொரு வாரமும் மைய நூலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சித் திட்டம் மற்றும் மாதிரித் தேர்வுகள் மூலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைகின்றனர். “திருச்சிக்கு கலைஞர் நூலகத்தை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். வரும் தேர்தலில் கோரிக்கை வைப்போம்,'' என, திருச்சி Intra-City Development Endeavours (TIDES) உறுப்பினர் G.கனகராஜன் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போதுள்ள மைய நூலகம், மெயின் கார்ட் கேட் அருகே நகரின் முதன்மையான வணிகப் பகுதியில் அமைந்துள்ளதால், மேலும் விரிவாக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. நிறைவுற்ற நூலகத்தில் சரியான பார்க்கிங் இடமும் இல்லை.

“அருகில் உள்ள மாவட்ட மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக நகரத்தில் வசிப்பதால், திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு செயலில் உள்ள திட்டங்கள் எதுவும் இல்லை, எதிர்காலத்தில் நகரம் ஒன்றைப் பெறலாம் என நூலகத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.