Skip to main content

வெளிநாடு போக ஓ.பி.எஸ்.க்கு விருப்பம் இல்லையா? புறக்கணிக்கப்பட்டாரா?

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 

வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிவடைந்து வரும் செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்புகிறார். 
 

எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவத்துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். இதேபோல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் சென்று அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத் தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிகிறார். 

 

ops-eps


 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்திற்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ மொரிஷீயஸ் நாடுகளுக்கும் சென்றுள்ளனர். 
 

செப்டம்பர் 1ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 2ம் தேதி நியூயார்க் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்களுடன் இணைந்து கொள்ள அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் செல்லவிருக்கிறார்கள். 
 

தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை, வனத்துறை, செய்தி விளம்பரத்துறை, சுகாதாரத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த  வெளிநாட்டு பயணத்தை வடிவமைத்தார்.  


 

இந்த அரசு முறை பயணத்திட்டத்தில் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. "அவர் நிதி அமைச்சர்தான். திட்டங்களுக்கான நிதி எவ்வளவு தேவைப்படும் என ஆராயந்து அதனை ஒதுக்கீடு செய்வதுதான் அவரது பணி. அதனால் வெளிநாடுகளுக்கு அவர் தேவையில்லை" என்கிறார்கள். 
 

ஆனால், அவரிடம்  வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகளும் கூடுதலாக இருக்கின்றன.
 

" அந்த வகையில் ஓ.பி.எஸ்.ஸிடம் உள்ள துறைகளிலும் சிலவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 


 

உதாரணத்திற்கு, மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஓபிஎஸ் கட்டுப்பாட்டிற்கு கீழ்தான் வருகிறது. குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி? நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்ன வழி? சென்னை போன்ற பெருநகரங்களில் மழை பெய்தால் உடனே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுவது? போன்றவற்றை துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கிறது. மேலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.  உள்கட்டமைப்பு வளர்ச்சி இருந்தால்தால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருவார்கள். அந்த வகையில், ஆய்வு  செய்தால்,  ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். ஏன் அவர் செல்லவில்லை?  அவருக்கு விருப்பம் இல்லையா? உள்கட்சி அரசியலால் அவர் புறக்கணிக்கப்பட்டாரா? அதிமுக என்றால் ஜெயலலிதா என்று இருந்தது போல, இனி  எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்பதை உருவாக்க திட்டமிட்டு ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டாரா?"  என்கிற கேள்விகள் அதிமுக வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.
 


 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.