Skip to main content

டி.ஆர். பாலு எழுதிய கடிதம்! அ.தி.மு.க.வை கழட்டி விடும் மோடி! தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிப் பாலம்?

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

eps-trbaalu-modi

 

ராமர் பாலத்தைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் கடிதம் எழுதியிருக்கிறார் தி.மு.க. எம்.பி. டி.ஆர் பாலு. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் மோடி பிடிக்க வேண்டும் என்கிற டி.ஆர். பாலுவின் இந்தக் கடிதவரிகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பதற்றமடைந்த முதல்வர் எடப்பாடி தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகிறதா என டெல்லி லாபி மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் விசாரிக்கத் துவங்கியிருக் கிறார். அ.தி.மு.க சீனியர்களும் பரபரப்படைந்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத்திற்குள் குறைந்தபட்சம் 15 எம்.எல்.ஏ.க்களுடன் நுழைந்து விட வேண்டுமென்பது பா.ஜ.க. தலைமையின் திட்டம். அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலே 174 இடங்களைக் கைப்பற்றும்; அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 3 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை (இந்த சர்வே குறித்து முழு விபரங்களைக் கடந்த மாதம் எழுதியிருக்கிறோம்) எனச் சொல்லியுள்ளன. இதனை பிரதமர் மோடியுடன் இரண்டு முறை விவாதித்திருக்கிறார் அமித்ஷா.

 

இதுகுறித்து பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் நாம் விசாரித்த போது, "ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தமிழகத்தின் நிர்வாக அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. இருக்க வேண்டும் என 3 அஜெண்டாக்களை வைத்துள்ளது பா.ஜ.க.!

 

அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத்தொடர விரும்பாத பா.ஜ.க., அரசியலுக்கு ரஜினி வராமல் போகும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் வலிமையாக உள்ள தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. தி.மு.க. சீனியர்கள் மூலம் இதற்காக ரகசிய மூவ்களும் நடந்தன. பாசிட்டிவ்வான பதில்கள் வராத நிலையில்தான், தி.மு.க.வின் நிதி கட்டமைப்பு மீது கை வைக்க முடிவு செய்தது.

 

அதாவது, சோனியா-ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அறக்கட்டளைகளின் சட்ட விரோத பணபரிவர்த்தனைகளை மத்திய நிதியமைச்சகமும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருவதுபோல, தி.மு.க. அறக்கட்டளை விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளது. இது குறித்த பல விவகா ரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார் அமித்ஷா. அதேசமயம், தி.மு.க.வுக்கு நிதி ஆதாரமான பலரையும் அமலாக்கத்துறை குறி வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், சேதுசமுத்திர திட்டத்தை முன்னிறுத்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் டி.ஆர். பாலு. அதில் சொல்லப்பட்டுள்ள பல வரிகள், பா.ஜ.க.வை குளிர வைப்பதாக இருக்கிறது. இதெல்லாமே டெல்லி திட்டமிடலின் ஒரு பகுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

இதுபற்றி தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "முடக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை தமிழகத்தின் நலன்களுக்காக துவக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துவது தேவையானதுதான். அதில் தப்பில்லை. ஆனால், ’இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை மோடி பிடிக்க வேண்டும் எனச் சொல்வதில் பா.ஜ.க.வை தி.மு.க. நெருங்கிறதோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. தமிழக மக்களின் மனதில் மோடி இடம்பிடிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் வேலை இல்லையே! இப்படிப் பல வரிகள் மறைந்திருக்கின்றன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு ஒரு நேர்க் கோட்டில் வரும்'' என்கிறார் அந்த சீனியர்.

 

இவரைப் போலவே பாலுவின் கடிதத்தை தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் அலசி வருவதுடன் சித்தரஞ்சன்சாலையில் என்ன நடக் கிறது எனத் துப்பறிந்தும் வருகின்றனர். தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரமிடப்படுகிறதா என தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்ட போது, "சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக சுப்பிரமணியசாமி மூலம் வழக்குப் போட்டு முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர்தான். இந்தத் திட்டத்திற்கு விரோதமானவர்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் இந்தத் திட்டத்தைத் துவக்குவார்களா என எனக்குத் தெரியவில்லை. அரசியல் கொள்கைகளிலும் சமுக கொள்கைகளிலும் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. தி.மு.க.வின் கொள்கை விரோதி பா.ஜ.க. அதனால், கூட்டணிக்கு வாய்ப்பில்லை'' என்கிறார்.

 

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம் பேசியபோது, "தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைத்து கவர்னர் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைத்தான் எங்கள் தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். தவிர, கழகங்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதற்காகத்தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடி செய்து வருகிறார். இறைநம்பிக்கை இல்லாத தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை பா.ஜ.க.வினர் ஏற்கமாட்டார்கள். இருப்பினும், கூட்டணியைத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்கிறார் அழுத்தமாக.

 

http://onelink.to/nknapp

 

இதற்கிடையே டி.ஆர்.பாலுவின் கடிதவரிகள் எடப்பாடிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதால், முன்னாள் கவர்னர் சதாசிவம் மூலம் அவர் விசாரித்ததில், 'அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது’ என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் எடப்பாடி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.