Skip to main content

அதானி, அம்பானிகளிடம் இந்தியாவின் சொத்துகளை தருவதைவிடவா இது தேசத் துரோகம்..? - பியூஷ் மனுஷ் கேள்வி!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

vb

 

சில நாட்களுக்கு முன்பு 'டூல்கிட்' வெளியிட்டதால், இளம்பெண் திஷா ரவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு, "சிலருக்கு பெண்கள் எதைச் செய்தாலும் பிடிக்காது. அவர்கள் கேள்வி கேட்டால்கூட பெரும்கோபம் வரும். அந்த வகையில் அரசியல்வாதிகள் சிலருக்குத் தற்போது பெண்கள் மீது கோபம்வருகிறது. நாங்கள் போராட்டத்தின் போது கூட பெண்களை முதலில் அனுப்புவோம். ஏனென்றால் அப்போதுதான் காவலர்கள் அவர்களிடம் மரியாதையாகப் பேசுவார்கள், அவமரியாதை செய்ய மாட்டார்கள் என்று. ஆனால், தற்போது டூல் கிட் வெளியிட்டார்கள் என்று ஒரு பெண்ணை முறையற்ற வகையில், கைதுசெய்து பெங்களூரில் இருந்து டெல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

 

அவர் அதில் என்ன சொல்லியிருந்தார், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். 200 விவசாயிகள் இதுவரை இறந்துள்ளார்கள். அவர்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக ஒரு பெண்ணை முறையற்ற வகையில் கைதுசெய்ய வேண்டுமா? நாட்டுக்கு எதிரானது என்றால் முதலில் ஆட்சியாளர்களுக்கு என்னவெல்லாம் நாட்டுக்கு எதிரானது என்று தெரியவேண்டும்.  

 

நாட்டுக்கு எதிரானது எது என்றால், அதானி அம்பானிகளிடம் நாட்டுச் சொத்துகளைத் தருகிறீர்களே, அதுதான் மக்கள் விரோத காரியம். மக்கள் நன்மைக்கு எதிரானது. டூல் கிட் வெளியிடுவது ஒன்றும் மக்களுக்கு எதிரான காரியம் இல்லை. பெட்ரோல் விலையை 100 ரூபாய் ஆக்கி வைத்துள்ளீர்களே இதுதான் மக்கள் விரோதம். இதைத்தான் நாங்கள் மக்களுக்கு எதிரானது என்று கூறுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்து வாங்குவது, ஆட்சியை அபகரிப்பது, இந்து மக்களுக்கு ஆபத்து என்று கூச்சலிடுவது, இந்த வேலைகள் எல்லாம்தான் மக்கள் விரோதம். ஆனால், இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்துவிட்டு நாங்கள் மக்கள் ஆட்சி செய்கிறோம் என்று ஆட்சியாளர்கள் கதை விடுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு தவறுகள் செய்துள்ளது. மன்மோகன் சிங் அரசில் போபால் விஷ வாய்வு வெளியேறியதற்கு நாங்கள் எல்லாம் 200 கிலோ மீட்டர் நடந்துசென்று டெல்லிசென்று நீதி கேட்டோம். எங்களைச் சந்திக்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். அவர் பேசவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக ஒரு புகைப்படத்தைப் போட்டு அதில் பேசத் தெரியாதவர் என்று எழுதினேன். அதைப் போல் சிதம்பரம், சத்தீஷ்கரில் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. 3 லட்சம் பேர் அகதிகளாக மாறிப் போனார்கள். 

 

இவர்கள் எல்லாம் சென்று மத்தியில் பாஜக ஆட்சி வந்தது. நாட்டில் உள்ள அனைவரும் அகதி ஆனார்கள். இவர்கள் ஆட்சியில் சிக்கல் என்று பார்த்தால் அனைத்துமே அப்படித்தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசவிரோதச் செயல்பாடு என்று சொல்லி மக்களின் பக்கம் நிற்பவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாகக் கைது செய்து வருகிறார்கள். இதுதான் மக்கள் நல அரசா? இந்த மாதிரியான சட்டங்கள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது பாய்வதில்லை, திருடர்கள் மீது பாய்வதில்லை, லஞ்சம் வாங்குபவர்கள் மீது போடப்படுவது இல்லை. ஆனால், அப்பாவி மக்கள் மீது தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அரசின் அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். குறைந்தபட்சம் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீதாவது இத்தகைய கொடுமையான சட்டம் பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. எதிர்த்துக் கேள்விகேட்க முடியாமல் இருக்கிறவர்கள் மீது மட்டும் இத்தகைய சட்டம் பயன்படுத்தப்படும்" என்றார். 

 

 

 

Next Story

பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
mansour


எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.

 

சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வ-ழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

 

இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

 

நடிகர் மன்சூர் அலிகானை கடந்த மே 3ம் தேதியன்று சேலத்திற்கு அழைத்து வந்த அவர், எட்டு வழிச்சாலைத் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிராக மக்களிடம் பரப்புரை செய்ய வைத்தார். அப்போது பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ''எட்டு வழிச்சாலைக்காக எட்டு பேரை கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார்.

 

இதையடுத்து கடந்த 17ம் தேதி காலை சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மன்சூர் அலிகானை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். கலகம் விளைவித்தல், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், 7 (1) சிஎல்ஏ ஆக்ட் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த பியூஷ் மானுஷை, கடந்த 18ம் தேதி இரவு ஓமலூர் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

கைதான இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் கேட்டு ஓமலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார்.

 

மேலும், பியூஷ் மானுஷை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்வதாக தீர்ப்பு அளித்தார். தினமும் காலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். 

 

இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து பியூஷ் மானுஷ் விடுதலை ஆகி வெளியே வந்தார். அவருடைய மனைவி, பெற்றோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். 

 

அப்போது பியூஷ் மானுஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. மக்களை எந்த வகையிலும் வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையில் ஒருபோதும் செயல்படவில்லை. 

விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை அமையும் பகுதி மக்கள் பயந்து போய் உள்ளனர். பொதுமக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தவறான நடவடிக்கை ஆகும். அரசிடம் விளக்கம் கேட்பவர்களை அரசு அச்சுறுத்தி வருகிறது. மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுவேன்,'' என்றார்.
 

Next Story

பியூஷ் மனுஷ் கைது - ஓமலூரில் விசாரணை

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
manush

 

சேலம் பசுமை  வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார்.   அரசுக்கு எதிராக செயல்படுதல், போராட்டத்திற்கு தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.  ஓமலூர் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.