தமிழகத்தில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸ் கட்சியில், இவர் எந்த கோஷ்டி என்று கதர் சட்டைகாரர்களையே ஒரு கணம் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது, காங்கிரஸ் தலைமையின் இந்த அறிவிப்பு. ஏற்கெனவே, தமிழகத்திலிருந்து திருநாவுக்கரசு, சுதர்சன் நாச்சியப்பன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சீட் எதிர்பார்த்து அதற்கேற்ப காய் நகர்த்தி வந்த நிலையில், ஈட்டியாய் வந்து விழுந்திருக்கிறது இந்த தேர்வு. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களே கூட, யாருப்பா இந்த கிறிஸ்டோபர் திலக்? என்றே, தனது சகாக்களிடம் விசாரிக்க வேண்டிய நிலைதான் இதில் சுவாரஸ்யமானது.
கிறிஸ்டோபர் திலக் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை மாணிக்கம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அடிப்படையில் பொறியாளரான கிறிஸ்டோபர் திலக், படிப்பை முடித்த கையோடு வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்து வந்தவர்.
நடுத்தர குடும்பத்திலிருந்தும் பின்தங்கிய சமூக பின்னணியிலிருந்தும் கல்வியால் உயர்ந்தவர், ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். தொடக்கத்தில் சொந்த கட்சிக்குள்ளேயே பல்வேறு பாலிடிக்ஸ்களால் பாதிக்கப்பட்டிருப்பினும் அதையும் தாண்டி இந்த இடத்திற்கு அவர் வந்து சேர்ந்திருப்பதுதான் அவரைப்போலவே எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.எல்லோரும் கிறிஸ்டோபர் திலக் தேர்வை புதிய முகத்துக்கான வாய்ப்பு என்கிறார்கள். உண்மையில், கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் பழைய முகம்தான். அகில இந்திய காங்கிரஸின் செயலாளர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் திலக் என்பதே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பெருத்த அதிர்ச்சிதான்.
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களின் கட்சி மேலிட பொறுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். ராகுல் நடத்திய யாத்திரையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ராகுல் காந்திக்கு மட்டுமல்ல; கட்சியின் தலைவர் கார்கேவுடனும் நெருக்கமாக வலம் வந்திருக்கிறார், கிறிஸ்டோபர் திலக். அவ்வளவு ஏன், அகில இந்திய இளைஞர் காங்கிரசுக்கான தேர்தலை நடத்தியதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார், கிறிஸ்டோபர் திலக், ராகுல் நடத்திய யாத்திரை, இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தியவர். தலைவர் கார்கேவின் நம்பிக்கைக்குரியவர். திமுகவுடன் கூட்டணியை விரும்பாமல், தவெகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக யாரை போட்டாலும் திமுக தலைமையோடு ஒருவித இணக்கத்தோடுதான் கட்சிப்பணியாற்றுகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு மத்தியில், ராகுல் காந்தியால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவர்தான் இந்த கிறிஸ்டோபர் திலக் என்கிறார்கள்.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக கடந்த ஆண்டில் தேர்வான லெனின் பிரசாத் என்பவரும் திருச்சியை சேர்ந்தவர்தான். மேலும், தமிழகத்தின் சார்பில், சென்னையை சேர்ந்த சிந்துஜா ராஜு மற்றும் கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஆகியோர் தேசிய செயலாளர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் வார்டு உறுப்பினராக போட்டியிடும் விருப்பத்தோடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை தேடிச் சென்றவர். இன்று, கல்வியால் உயர்ந்து, உயர் பதவிகளை துறந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக அதே திருச்சியிலிருந்து -தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு மரியாதையோடு அனுப்பி வைக்கப்படவிருக்கிறார், கிறிஸ்டோபர் திலக்.
Follow Us