Skip to main content

இத்தனை வசதிகளா... டிஎன்பிஎஸ்சி ஊழலில் சிக்கிய புரோக்கருக்கு சொகுசு ஜெயில்... EXCLUSIVE ஷாக்கிங் ரிப்போர்ட்! 

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மையுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்னிலையிலேயே கடந்த பிப்ரவரி 6-ந் தேதி சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் ஜெயக்குமாரை கைது செய்யாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே புரோக்கர் ஜெயக்குமாரின் ‘ஹைலெவல் பவர்’என்ன என்பது பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

jayakumar



இந்நிலையில்... புழல் சிறையில் ஸ்பெஷல் ரூம் கொடுக்கப்பட்டதோடு நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன், கோதுமை தோசை என ஜெயக்குமார் எந்த நேரத்தில் என்ன கேட்டாலும் வகை வகையாக சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெஷல் ரூம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இந்தியன் ஸ்டைல் டாய்லெட்டுக்குப் பதிலாக வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று ஜெயக்குமார் கேட்டதால் ஏற்கனவே இருந்த டாய் லெட்டை உடைத்துவிட்டு புதிதாக வெஸ்டர்ன் டாய்லெட்டையே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் சிறை அதிகாரிகள் என்ற தகவல் சிறைத்துறை வட் டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதுமட்டுமல்ல, சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணையிலிருந்து புரோக்கர் ஜெயக்குமாரை தப்பிக்க வைக்கும் வேலையையும் செய்துவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழும்பியிருக்கிறது.

இதுகுறித்து நேர்மையான சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, “தீவிரவாதிகள், மற்றவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையிலுள்ளவர்களைத்தான் ஹைசெக்யூரிட்டி ப்ளாக் 2-ல் அடைப்பார்கள். ஆனால், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் புரோக்கராக செயல்பட்ட ஜெயக்குமாருக்கு தனியாக ஸ்பெஷல் ரூம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே ஹைசெக்யூரிட்டி 2-ஆவது ப்ளாக்கில் 54-வது அறையில் வைத்துவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் புரோக்கர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதைவிட யாருடைய தொந்தரவும் டார்ச்சரும் இல்லாமல் சூட் ரூமில் இருப்பது போல பாதுகாப்பாக, நிம்மதியாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
 

tnpsc



புரோக்கர் ஜெயக்குமார் எந்த நேரத்தில் என்ன உணவு விரும்பிக் கேட்டாலும் கிச்சனிலிருந்து வகை வகையாக சமைத்துக் கொடுக்கிறார்கள். டீ, பிஸ்கெட் என எந்த நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் சாப்பிடவேண்டுமானாலும் அவரது அறைக்கு வந்துவிடும். ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க கடந்த 18-ந் தேதி உடல்நிலை சரியில்லை என்று அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டுபோய் ட்ராமா செய்யவும் செட்-அப் செய்யப்பட்டது. "எங்களுக்கு பிரச்சினை ஆகிவிடும்' என்று சிறை மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு, விசாரணைக்கு சென்று வந்தார் புரோக்கர் ஜெயக்குமார்.


இதுகுறித்து நாம் புழல் சிறைத்துறை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, "தவறான தகவல். ஜெயக்குமாருக்கு சிறை நிர்வாகம் பரிந்துரைத்த உணவுகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. பி.சி.பி. எனப்படும் பிரிசனர் கேஷ் பிராப்பர்ட்டி என்ற நடைமுறை அனைத்துச் சிறைகளிலும் உள்ளன. அந்த நடைமுறைப்படி தன்னிடமுள்ள பணத்தை வைத்து ஸ்னாக்ஸ், டீ போன்ற உணவுகளை சிறைவாசிகள் வாங்கிக்கொள்ள முடியும்.

சிறைவாசிகளுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் என்பது சட்டத்துக்குப்புறம்பான சலுகை அல்ல. அவர்களின் உடல் நலன் சார்ந்த உரிமை. ஆனால், ஜெயக்குமாருக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வசதி செய்து தரப்படவில்லை'' என்று மறுத்தார். டி.ஐ.ஜி. முருகேசனுக்கு மெசேஜ் அனுப்பி பலமுறை தொடர்புகொண்டபோதும் போனை அட்டெண்ட் செய்யவில்லை. ஆனால், ஜெயக்குமாருக்காக புதிய வெஸ்டர்ன் டாய்லெட் பதிக்கப்பட்டுள்ளது. அதை அவர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் அதே சிறைத்துறையினர் ஆதாரத்துடன்.

இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, "பி.சி.பி. என்கிற பிரிசனர் கேஷ் பிராப்பர்ட்டி டீமின் நோக்கமே கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைப்பற்றப்படும் பணம், பொருள் அனைத்தையும் பத்திரமாக வைத்து அவர் ரிலீஸ் ஆகும்போது திரும்ப ஒப்படைப்பதுதான். ஆனால், அதையே சிறைவாசி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகளை உருவாக்கும் நடை முறையாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிறையில் பி.சி.பி. பொறுப்பை யார் எடுத்துக் கொள்வது என்று 6 சிறைக் காவலர்களுக்குள் ஏலமே நடக்கிறது. இதன்மூலம் கைதிகளைப் பார்க்க வருகிறவர்கள் அக்கவுண்டில் பணத்தைப் போட்டுவிடுகிறார்கள். அந்தப் பணத்தை எடுத்துதான் பி.சி.பி. திட்டக்காவலர்கள் இஷ்டத்துக்கு கைதிகளுக்கு கெஸ்ட் ஹவுஸ் போல் வசதிகளை செய்துகொடுத்து இவர்களும் பணம் கொழிக்கிறார்கள்.

என்னதான் பி.சி.பி. மூலம் பணம் கொடுக்கப்பட்டாலும் சட்டப்படி நாட்டுக்கோழி குழம்பு, இட்லி, தோசைக்கெல்லாம் சிறையில் அனுமதியே இல்லை. ஆனால், ஸ்டோர் வார்டராக இருப்பவர்களை கவனித்து ஜெயக்குமார் போன்ற சிறைவாசிகள் சுகவாசி களாகிவிடுகிறார்கள்'' என்கிறார்கள். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைவிட அதிக சொகுசுடன் சிறைப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.


 

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு எவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.