Skip to main content

ஜெயிக்கலைன்னா எல்லாருக்கும் ஜெயில் களிதான்! - இ.பி.எஸ். கறார்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

ddd

 

பரப்புரை பயணத்தில் கூடும் கூட்டமெல்லாம் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்தது என்பது இ.பி.எஸ்.ஸுக்கு தெரியும். ஜெ.வுக்காக அவரே இப்படியான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதனால், அவர் நம்புவது மூன்று தரப்பினரை என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.


உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி சத்தியமூர்த்தி ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். தேர்தல் ஆலோசகர் சுனில் தரப்பில் ஒரு பட்டியல், எஸ்.பி.சி.ஐ.டி ஒரு பட்டியல். இதில்தான், அ.தி.மு.க வேட்பாளர்கள் அடங்கியிருக்கிறார்கள். இவர்களில் செலவு செய்யக்கூடியவர்களாகவும், தனக்கு விசுவாசமாக இருப்பவர்களாகவும் கவனமாகப் பார்த்து ‘டிக்' செய்ய ரெடியாகி வருகிறார் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி.

 

ddd

 

கட்சி நிர்வாகத்துக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மா.செ.க்கள் நியமிக்கப்பட்டு, அவர்களை ஒருங்கிணைக்க மண்டல பொறுப்பாளர்களும் போடப்பட்டாலும் எடப்பாடிக்கு முழு நம்பிக்கை வந்தபாடில்லை. சீட் கொடுத்து, ஜெயித்த பிறகு மண்டல பொறுப்பாளர்களுடன் சிண்டிகேட் அமைத்து, தனக்கு எதிராக களம் அமைப்பார்களோ என்ற சந்தேகத்திலேயே இருக்கிறார், தனக்கு பதவி தந்த சசிகலாவையும் அவர் குடும்பத்தினரையுமே ஓரங்கட்டியவரான எடப்பாடி.

 

தேர்தல் ஆலோசகர் சுனில் தரப்பிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில், மூன்று லிஸ்ட்டுகளிலிருந்து விசுவாசிகளை மட்டும் தேர்வு செய்யச் சொல்லியிருக்கிறார். தேர்தலுக்கு வேறென்ன வியூகம் தேவை என்றும் கேட்டிருக்கிறார். அதன் விளைவுதான், மா.செ.க்கள் - மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேசிய பேச்சு.

 

ddd

 

"10 வருசமா நல்லா சம்பாதிச்சிருக்கீங்க. அதிலும் இந்த நாலு வருசம் உங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. அதனால அடிச்ச பணத்தை தேர்தலில் செலவு பண்ணுங்க. சம்பாதிச்சதில் பாதியையாவது செலவு பண்ணலைன்னா ஜெயிக்க முடியாது. நாம மறுபடியும் ஆட்சிக்கு வரலைன்னாலும், இருக்கிறதை வச்சி நிம்மதியா இருந்திடலாம்னு கணக்குப் போட்டு செலவு பண்ணாம இருந்திடாதீங்க. தி.மு.க நம்ம மேலே செம கடுப்புல இருக்குது. அவங்க ஜெயிச்சி வந்தா, என்னையும் சேர்த்து நம்ம எல்லாருக்கும் ஜெயில் களிதான்'' என்று கறார் குரலில் பேசியிருக்கிறார் பழனிசாமி.

 

முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தலைமை முடிவு செய்யும் என்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் குரலும் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியுள்ளது.

 

"பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் என அரசு விழா மேடையில் அறிவிக்க வேண்டிய நிர்பந்தந்தத்தைத் தனக்கு உருவாக்கிவிட்டு, ரஜினியைக் கட்சி ஆரம்பிக்கவும், கமலை கொம்பு சீவியும், முருகனைப் பேசவைத்தும் ஆட்டத்தைக் கலைக்கிறதா பா.ஜ.க மேலிடம் என்ற கோபமும் எடப்பாடிக்கு இருக்கிறது'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.