Skip to main content

திமுகவிடம் மல்லுக்கட்டாதீங்க! - காங். தலைவர்களுக்கு திடீர் அட்வைஸ்!

Published on 01/10/2020 | Edited on 05/10/2020

 

tn congress committee meeting

 

 

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த தமிழக காங்கிரசின் புதிய மேலிட பொறுப்பாளரான தினேஷ்குண்டுராவ், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் முதல்கட்ட ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். சென்னை வந்த முதல் நாளே கூட்டணிக்கு வேட்டு வைக்கும் விதமாக தினேஷ் குண்டுராவ் பேசியதில் பதறிப்போனார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

 

சென்னையில் தினேஷ்குண்டுராவுக்கு உற்சாகமான வரவேற்பை தந்து அசத்தினர் கதர் சட்டையினர். அந்த வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார், நான்கு முறை தொடர்ச்சியாக கர்நாடகாவில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தினேஷ் குண்டுராவ். பத்திரிகையாளர்களை சந்தித்த தினேஷ்குண்டுராவிடம் சட்டமன்ற தேர்தல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார் மிக சாதாரணமாக. 

 

tn congress committee meeting

 

கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் விரும்புவதில்லை. அதனால், காங்கிரஸ் தலைவர்கள் ஏகத்துக்கும் பதறிப் போனார்கள். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களை அது உற்சாகமடைய வைத்தது, டெல்லி வரை பரபரப்பானது.

 

தினேஷூக்கு மேலிடத்திலிருந்து செம டோஸ். இதுகுறித்து கட்சி சீனியர்களிடம் தனது கருத்தை தினேஷ் முன்வைத்தபோது, கர்நாடகத்தில் செய்வது போல தமிழகத்தில் காங்கிரஸ் அரசியல் செய்திட முடியாது என்பதையும் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலோசனையை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என ஒரு விளக்கத்தை கொடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தினேஷ்குண்டுராவ்.

 

tn congress committee meeting

 

இந்த நிலையில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடம் குரூப் குரூப்பாக ஆலோசனை நடத்தினார் தினேஷ்குண்டுராவ். கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில், எடுத்த எடுப்பிலேயே, "கூட்டணி பற்றி எதுவும் பேசக்கூடாது. தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு என்ன செய்யலாம் என்பதைத்தான் பேச வேண்டும் என்ற அவர், எனக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சி மோசமாக கமெண்ட் பண்ணலாம்னு நினைக்காதீங்க. எனக்கு தமிழ் நன்றாகவே புரியும். நான் வெற்றி பெற்ற தொகுதியில் ஏராளமான தமிழர்கள் இருக்கிறார்கள்'' என்றதும் கூட்டத்தில் அதுவரை இருந்த சலசலப்புகள் நிசப்தமானது. 

 

கூட்டத்தில் பேசிய அணித் தலைவர்கள், "கடந்த தேர்தலை விட கூடுதல் சீட்டுகளை திமுகவிடம் பேசி வாங்குங்கள்'' என்றனர். "கட்சியைப் பலப்படுத்தும் வகையில் 100 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் தீவிர கவனம் செலுத்துங்கள்'' என்றார் தினேஷ்.

 

tn congress committee meeting

 

முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்களுடன் விவாதித்த குண்டுராவ், "ராகுல் பிரதமராக வர வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் ஸ்டாலின்தான். அவர் முதலமைச்சராக நாம் உழைக்க வேண்டும்'' என்று கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பேச்சை துவக்கினார். 

 

அப்போது பேசிய தங்கபாலு, "கடந்த தேர்தலில் 41 சீட்டுகளைப் பெற்றோம். திமுகவிடம் இதிலிருந்து ஆரம்பித்து கூடுதல் சீட்டுகளை பெற வேண்டும். அதிக சீட்டுகளை பெறுவது நம்முடைய குறைந்த பட்ச பார்வையாகவும், வாங்கிய சீட்டுகளில் வெற்றிபெற்று கட்சியை வளர்ப்பது அதிகபட்ச பார்வையாக இருக்க வேண்டும்'' என்றார்.

 

"வாங்கிய இடங்களில் வெற்றிபெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தேர்தல்னாலே செலவு என்றாகி விட்டது. அதனால், குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வாய்ப்பிருப்பவர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்'' என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். 


அப்போது பேசிய ஜெயக்குமார் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர், "காங்கிரஸில் சீட்டு வாங்கிட்டு திமுகவிடம் சரண்டராகி விடுகிறார்கள். திமுக ஒத்துழைச்சால் மட்டுமே ஜெயிக்க முடியுங்கிறதினால அங்கு சரணடைகிறார்கள்'' என்று எதார்த்தத்தை வெளிப்படுத்த, குறுக்கிட்ட இளங்கோவன், "இந்த யோசனை எனக்கு தெரியாம போய்டுச்சே. அதனால்தான் எம்.பி. தேர்தல்ல நான் தோத்துட் டேனோ?'' என கமெண்ட் பண்ணியிருக்கிறார்.

 

அப்போது பேசிய எம்.எல்.ஏ.க்கள், "திமுகவிடம் ஜெயிக்கக்கூடிய இடங்களாக பார்த்து வாங்குங்க. அதிமுக அமைச்சர்கள் போட்டியிடுற தொகுதிகளை நமக்கு ஒதுக்கிடப் போறாங்க'' என்றனர். அப்போது, "தொகுதி பங்கீடுகளை கடைசி நேரம் வரைக்கும் இழுத்துக்கிட்டு இருக்காதீங்க. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸுக்கான தொகுதிகளை பேசி முடியுங்கள்'' என எம்.பி.க்கள் சைடிலிருந்து குரல் எழுந்தது.

 

கார்த்திசிதம்பரம் பேசும்போது, "கட்சியிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கிற மாதிரி சீட்டுகளை வாங்க வேண்டும். பெண்களுக்குரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாநில தலைவர் எங்களுடன் கலந்து பேசுவதே இல்லை'' என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டார். அதேபோல, இந்த தேர்தலில் மகிளா காங்கிரசுக்கு அதிக முக்கியத்தும் தரவேண்டும் என கரூர் ஜோதிமணி சொல்ல, டெல்லியில் உட்கார்ந்து சீட் வாங்கிட்டு, இப்போது மகிளா காங்கிரஸ் முக்கியத்துவம் பற்றி பேசினால் எப்படி என முணுமுணுப்பு எழுந்தது.

 

திருநாவுக்கரசு பேசும்போது, மாவட்டத் தலைவர்களை மாற்றக்கூடாது என்றார். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, "எனக்கு முன்பிருந்த தலைவர்கள் எப்படி செயல்பட்டார்களோ அதிலிருந்து நானும் விலக மாட்டேன்'' என சொல்ல, "மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் மாற்றம் அவசியம்தான். அதில் விருப்பு வெறுப்பு இருக்காது. எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்'' என்றார் தினேஷ். 

 

அப்போது மாணிக்கம்தாகூர், "மாவட்ட தலைவர்கள் மாற்றம் வேண்டும். தலைவர் அழகிரி கட்சியை நன்றாக கொண்டு போகிறார். இந்த கூட்டத்திலேயே எல்லா தலைவர்களும் வந்துட்டாங்க; ஒத்துழைப்பு தர்றாங்க. திருநாவுக்கரசு இருந்தபோதுகூட இப்படி இருந்ததில்ல'' என சொல்ல, அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசு, ""என்ன தம்பி சொன்னீங்க. எனக்குப் புரியலை'' என கேட்க, பேச்சை மாற்றிக்கொண்டார் மாணிக்கம் தாக்கூர்.

 

எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் நானோ, கே.ஆர்.ராமசாமியோ ஒரு பைசா கூட வாங்கறதில்லை என மலேசியா பாண்டியன் சொல்ல, விஜயதாரணியும் பிரின்சும், "அப்படின்னா நாங்க வாங்கறமா?'' என குரல்கொடுக்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாருமே வாங்கறதில்லை என பேச்சை மாற்றிக்கொண்டார். 

 

விஷ்ணுபிரசாத் பேசும்போது, "பணம் இருந்தாதான் ஜெயிக்க முடியும்; பணம் இருக்கிறவங்களுக்குத்தான் சீட் கொடுக்கணும்னு எல்லாரும் சொல்றீங்க. அப்படின்னா, எம்.பி. தேர்தல்ல அ.தி.மு.க.தான் அதிகம் செலவு செஞ்சது. அவங்க ஜெயிக்கலையே! அதனால், பணம் முக்கியம்தான். அதேசமயம், கட்சிக்கு உழைச்சவங்க, விசுவாசமானவங்க, மக்கள்ட்ட அறிமுகம் உள்ளவங்கள பார்த்து சீட் கொடுங்க. பணம் இருக்கிறவருக்கே சீட் கொடுத்தா அது ஏலம் விடுற மாதிரி ஆகிடும்'' என்றிருக்கிறார்.

 

tn congress committee meeting

 

 

கே.எஸ். அழகிரி பேசும்போது, "தென் மாவட்டங்களில் கட்சி 70 சதவீதம் வளர்ச்சியடஞ்சிருக்கு. ஆனா, மேற்கு மாவட்டத்தில் 50 சதவீதமும், வட மாவட்டத்துல 40 சதவீதமும் தான் கட்சி இருக்கு'' என்று சொல்லிக்கொண்டேபோக, எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஒருவித சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்து வெளியேறும்போது, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், "இப்ப நடந்த கூட்டத்துலேயே 5 பேரு முக்குலத்தோர். ரெண்டு யாதவ பிரதிநிதிகள். இப்படி அதிகாரம் முழுமைக்கும் இவங்கக்கிட்டே இருந்தா மத்த பகுதியில கட்சி எப்படி வளரும்?'' என கமெண்ட் பண்ணியபடியே வந்தார். அதனை எம்.எல்.ஏ.க்கள் சிலர், "ஆமாம் தலைவரே'' என்றனர்.

 

இந்த 2 நாள் பயணத்தின்போது, முன்னாள் தலைவர்களுடனும் மூத்த நிர்வாகிகளுடனும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்திருக்கிறார் தினேஷ் குண்டுராவ், அப்போது, "இந்த முறை 180 சீட்டுக்களுக்கும் குறையாம தி.மு.க. போட்டி போடப் போகுது. அதனால காங்கிரஸுக்கு சீட் குறைய வாய்ப்பிருக்கு. கூடுதல் சீட் கேட்டு மல்லுக்காட்டாதீங்க. நமக்கு கூட்டணி முக்கியம்'' என்றவர்கள் டெல்லியிலும் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

 

கட்சியின் முன்னாள் தலைவர்கள் இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியாக இருந்ததால் அதுகுறித்து விசாரித்தபோது, "தங்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்கவிருக்கிறார்கள் அந்த தலைவர்கள். அதற்கேற்ப தொகுதியையும் தேர்தல் செலவுக்கு பணமும் ஜெயிக்க வைக்கிறோம்ங்கிற உறுதியையும் தி.மு.க. சைடிலிருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த பின்னணிதான் அவர் களை அப்படி பேச வைத்திருக்கிறது'' என்கிறார்கள் கதர்ச்சட்டையினர்.

 

 

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We will make the India coalition win to protect India CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன்.  கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

We will make the India coalition win to protect India CM MK Stalin

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.