Skip to main content

"பெட்ரோல், டீசல் விலை குறையுமா?" - நாராயணன் அதிரடி பதில்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

dddd

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 22ஆம் தேதி திமுக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். 

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதற்கு பாஜகவின் பதில் என்ன? 

 

கச்சா எண்ணெய், பிறகு சுத்திகரிப்பு, அதன் பிறகு டீலர் கமிஷன் இதையெல்லாம் சேர்த்தால் 30-ல் இருந்து 35 ரூபாய்க்குள்தான் பெட்ரோல், டீசல் விலை வரும் என்பது உண்மைதான். ஆனால், வளரும் நாடுகளில் அதற்கான விலை, சர்வதேச அளவில் உள்ள பொதுவான கொள்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வளராத  நாடுகளில் இவை குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால், இங்கிலாந்தில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டைவிட 97 நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது.  

 

2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜனவரி வரை பெட்ரோல் டீசல் விலையை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை குறைத்தோம். ஆனால், எப்போதெல்லாம் பெட்ரால் டீசல் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் பொருட்களின் விலையை உயர்த்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபோது, அதற்குரிய விலை குறைப்பை செய்யாமல், தங்களுக்குச் சாதகமாக அவர்களுடைய லாபத்தில் ஏற்றிக்கொண்டதால் மத்திய கலால் வரி அதிகப்படுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தபோதும்கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் விலை குறைக்காததால், பெட்ரோலுக்கான வரியை அதிகரித்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகளை அமைத்தோம். இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு.  

 

கரோனா காலக்கட்டத்தில் பல எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தபோது அல்லது நிறுத்தியபோது கூட இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை மூன்று மடங்கு சேமித்து வைத்திருந்தோம். ஒருவேளை அந்த நேரத்தில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்திருந்தால் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயை தொட்டிருக்கும். 

 

கரோனா காலக்கட்டத்தில் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டதுபோல, இந்தியாவிலும் அந்த நிலை ஏற்பட்டது. உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், அந்த நேரத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணம் மற்றும் பொருள் உதவியைப் பொதுமக்களுக்கு மத்திய அரசு செய்திருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை அரசு செய்யவேண்டும் என்றால் வருவாய் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

 

காஸ் சிலிண்டர்களின் விலை ஒரு வாரத்திலேயே 2 முறை உயர்ந்து ரூ.75 கூடுதலாகி, ரூ.785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் காஸ் சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தது. இப்படித் திடீரென்று விலை ஏற்றப்பட்டதால், இல்லத்தரசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே?

 

பெண்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகமாகாது. கடந்த ஏழு வருடங்களில் 10 கோடி குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பை வழங்கியிருக்கிறோம். இதுவரை விறகு அடுப்பை பயன்படுத்தியவர்களுக்கு கேஸ் இணைப்பை வழங்கியிருக்கிறோம். 

 

காஸ் இணைப்பு கொடுத்தால் மட்டும் போதுமா? காஸ் சிலிண்டர் வாங்க வேண்டுமே? அதன் விலை அதிகமாகியிருக்கிறதே? 

 

காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை 1,200 ரூபாய். இன்று 750 ரூபாய். அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் மானிய விலையில் கொடுக்கக் கூடிய கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 9 மட்டுமே. ஆனால் இப்போது வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் கொடுக்கிறோம். சில கோடி மக்கள் மட்டுமே அனுபவித்ததை இன்று பல கோடி பேர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

 

நீங்கள் என்னதான் விளக்கம் அளித்தாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் தங்களது கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறதே? 

 

கவர்ச்சி அரசியல் செய்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இலவசங்கள் கொடுப்பதன் மூலம் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்த முடியும் என்று நினைப்பது தவறு. கட்டமைப்புகளை அதிகப்படுத்துகிறோம். வசதி வாய்ப்புகளை மேம்படுத்திக்கொடுக்கிறோம் என்று சொன்னால் உறுதியாக மக்கள் இந்த விசயத்தை உணர்வார்கள். எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்வது தேவையற்ற விசயம்.  

 

காங்கிரஸ் அரசில் எண்ணெய் நிறுவனங்களிடம் கடன் பத்திரங்களை கொடுத்து மானியம் வழங்கியது. அதாவது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு கடன் வாங்கியது. இன்று ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் கோடி ருபாய் கடன் வட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு சென்றவருடம் 5 ஆயிரம் கோடி ருபாய் திரும்பக் கொடுத்திருக்கிறோம். இதேபோல, ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி திரும்பக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் அரசு எப்படி திருப்பிக்கொடுக்கும். வருவாய் இருந்தால்தானே கொடுக்க முடியும்.

 

cnc


 
பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாடுகள் எடுத்துக்கொண்ட சபதம். ஏனென்றால், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க வேண்டும், உலகம் முழுவதும் இருக்கக் கூடிய புவி வெப்பமயமாகுதலை குறைக்க வேண்டும், காற்று மாசுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றால், இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தால் மட்டுமே முடியும்.  

 

ஒரு அரசியல்வாதியாக நான் சொல்வதை சிலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, உண்மையிலேயே விலை அதிகமாக இருக்கும்போது பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். அந்தப் பயன்பாடு குறைந்தால்தான், உயிரிழப்புகளும் உடல்நிலை கேடுகளும் குறையும் என்பதை உணர வேண்டும்.  

 

 

 

 

Next Story

அரை மணி நேரத்தில் 'அக்கா தம்பி' ஆன மேஜிக் நடந்தது எப்படி? - நாராயணன் திருப்பதி பதில்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

கடந்த சில நாட்களாக சூர்யா, டெய்சி இடையே நடைபெற்ற அனைத்து பஞ்சாயத்துக்களும் தற்போது சுமுகமாக முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? 

 

பஞ்சாயத்து எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவருக்குள்ளும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அதைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுத்தது. இருவரும் பிரச்சனைகளை மறந்து கட்சி பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இருந்தாலும் குற்றச்சாட்டு அடிப்படையில் சில நடவடிக்கைகளை கட்சி எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அவ்வளவுதான் நடைபெற்றது. 

 

அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சிகளில் சில பிரச்சனைகள் தனி நபர்களுக்கு இடையே இருக்கத்தான் செய்யும். நீ வா உன்னை வெட்டி வீசுகிறேன் போன்ற இத்தகைய தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவுக்குப் போனதும், அதை அவர்களால் தாங்க முடியாமல் சென்ற காரணத்தால் தான் இதை வெளியிடும் அளவுக்குச் சென்றுள்ளார்கள்?

 

அந்த வார்த்தைகள் சரியா தவறா என்ற விவாதத்துக்குள்ளே போக வேண்டாம். ஏனென்றால் அது தவறுதான். ஆனால் அவர்களுக்கு இடையே நடைபெற்ற வார்த்தைகள் என்று தனிப்பட்ட உரையாடல். இவர்கள் இருவருமே பொதுவெளியில் எதையும் பேசவில்லை; யாரிடமும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியின் இமேஜை பாதிக்கும் என்று கருதியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவும் கூட அவர்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்ததன் காரணமாக இந்த சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

 

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை விமர்சித்துள்ளார் சூர்யா. இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்களும் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இருவரையும் கூப்பிட்டுப் பேசிய சில நிமிடங்களிலேயே அக்கா-தம்பி மேஜிக் எப்படி நடந்து என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறதே?

 

இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் பதில் சொல்ல முடியாது. அவங்க இருவரும் உடன்பாட்டுக்கு வந்து புரிந்துகொண்டார்கள் என்றால் அதை நாம் என்ன கேட்க முடியும். இது அவர்களின் விருப்பமாகத்தான் பார்க்க வேண்டும். சண்டை போட்டவர்கள் சண்டை போட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் நடந்ததை மறந்து ஒன்று சேர்ந்து பணியாற்றலாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆகையால் தவற்றை விசாரிக்கலாம். அவர்கள் இணைவதை நாம் தடுக்க இயலாது. 

 

இருந்தாலும் அவர் பேசியதை அனுமதிக்க முடியாது என்று கூறி அவர் வகித்து வந்த பதவியிலிருந்து ஆறு மாதம் நீக்கி இடைநீக்கம் செய்துள்ளார்கள். அவர் பேசியதைக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியிலும் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தால் மட்டுமே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் கட்சியில் மிகச் சிறப்பான நடவடிக்கையைக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அண்ணாமலை எடுத்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

 


 

Next Story

நாடு எங்கே செல்கிறது? - நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

prakash raj tweet goes viral

 

திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும்  கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். 

 

அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராமர், ஆஞ்சநேயர், அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகம் அகியவற்றின் முந்தைய,மற்றும் தற்போது இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நாடு எங்கே செல்கிறது”’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆனால் இந்த சிலையில் உள்ள சிங்கத்தின் பற்கள் வெளியே ஆக்ரோஷமாக தெரிவதாகவும், அதனால் இந்த சிலை பழைய சிங்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக எதிர் கட்சியினர் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜும் அதனையே சுட்டிக்காட்டி உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.