Skip to main content

1977 முதல் களம் காணும் அரசியல் பிரபலங்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election political parties leaders

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அந்த வகையில், 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரசியல் பிரபலங்கள் குறித்துப் பார்ப்போம்.

 

அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 1971- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி, கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் 2021- ஆம் ஆண்டு வரையில் நடந்த எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டு வரும் ஒரே தலைவராக உள்ளார் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தற்போதைய காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரான துரைமுருகன். 11 முறை தேர்தல் களம் கண்டுள்ள துரைமுருகன் இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். இதில் 9 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 12- வது முறையாக மீண்டும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

 

துரைமுருகனுக்கு அடுத்தபடியாக, அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், அ.தி.மு.க.வில் இருந்து தற்போது தி.மு.க. வேட்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அ.தி.மு.க. முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

 

இதில், கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்து, மற்ற எல்லாத் தேர்தல்களிலும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 1996- ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியை ருசித்துள்ளார் கே.ஏ.செங்கோட்டையன்.

 

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகரான தனபால், அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முதன் முதலாக ஆட்சி அமைத்த 1977 தேர்தல் தொடங்கி 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011- ஆம் ஆண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், 2016- ஆம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்ற தனபால், தற்போது மீண்டும் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

 

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 10 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் இவர், இரண்டு தேர்தலில் மட்டுமே தோல்வி அடைந்தார். அதிகபட்சமாக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மட்டும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்