Skip to main content

நீடிக்கும் இழுபறி! விட்டுக்கொடுக்குமா தி.மு.க.?

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

                                                                 கோப்புப் படம் 

 

தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.

 

தி.மு.க.வில் என்ன நடக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மா.செ.க்கள் சிலரிடம் விசாரித்தோம். ’தி.மு.க.வில் காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருக்கின்றன. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

கூட்டணிக் கட்சிகளுக்கு, எண்ணிக்கை என்பதையும் கடந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, விரும்பும் தொகுதிகளைப் பெறுவது என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. உதயசூரியனில் போட்டியிடச் சொல்லி வலியுறுத்தவில்லை என எங்கள் தலைமை சொன்னாலும், அதற்கான வலியுறுத்தல்கள் உண்டு. அதாவது, 200 தொகுதிகளில் உதயசூரியன் நிற்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் இலக்கு.

 

காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தால், அவைகளுக்கான எண்ணிக்கை குறையும். அந்த வகையில், 34 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, 200 இடங்களில் தி.மு.க. நேரடியாக களமிறங்கும்.

 

அதுவே, கூட்டணி கட்சிகளுக்கு எண்ணிக்கையை தி.மு.க. உயர்த்தினால் அந்த எண்ணிக்கையில் சரிபாதியாக தனிச் சின்னத்திலும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட கூட்டணி கட்சிகள் சம்மதிக்க வேண்டும். அப்படி நடந்தால் 180 இடங்களில் தி.மு.க. போட்டியிட ஸ்டாலின் சம்மதிப்பார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கை 34-லிருந்து 54 ஆக உயரும். அது கட்சிகளின் தன்மைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.

 

இது ஒருபுறமிருக்க, தற்போது தி.மு.க. ஜெயித்துள்ள சிட்டிங் தொகுதிகளோடு, வெற்றி வாய்ப்புள்ள மேலும் 100 இடங்களை அடையாளம் கண்டறிந்து அதனை ஸ்டாலினிடம் தந்துள்ளது ஐ-பேக். அதில் பல தொகுதிகள் கூட்டணி கட்சிகள் அழுத்தமாக கேட்கும் தொகுதிகளும் அடங்கியிருக்கின்றன. அதனை விட்டுக்கொடுக்க தி.மு.க. தயாராக இல்லை.

 

இதனால், எண்ணிக்கையும் குறைவு, தி.மு.க. சின்னத்திலும் போட்டியிட வேண்டும், விரும்பிய தொகுதிகளும் கிடைக்காது என்றால் எப்படி என்கிற ஆதங்கம்தான் கூட்டணி கட்சிகளிடம் இருக்கிறது. இதனால்தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை.

 

தற்போதைய சூழலில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு மட்டுமே இரட்டை இலக்கத்திலும், மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கத்திலும்தான் ஒதுக்க சம்மதிக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா 5 சீட் என சொல்லப்பட்டிருக்கிறது. முந்தைய தேர்தலில் மதி.மு.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதால், அதைச் சுட்டிக்காட்டி 5 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது தி.மு.க.

 

உதயசூரியனில் போட்டியிடுவதாக இருந்தால், எண்ணிக்கையைக் கூடுதலாக்குகிறோம். அதில் நீங்கள் விரும்பும் சில தொகுதிகளும், நாங்கள் தரும் தொகுதிகளும் இருக்கும் என விடுதலைச் சிறுத்தைகளிடமும், அதேபோல, 5 சீட்டுகளுக்கு ஒப்புக் கொள்ளுங்கள்; ராஜ்யசபா தேர்தலின்போது உங்களுக்கு சீட் தரப்படும் என கம்யூனிஸ்டுகளிடமும் தி.மு.க. தெரியப்படுத்தியிருக்கிறது. ஆனால், தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில் ராஜ்யசபா என்கிற கமிட்மெண்ட்டை எப்படி ஏற்பது என்கிற குழப்பம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது. இப்படிப்பட்ட சிக்கல்களால்தான் வெளிப்படையான பேச்சுவார்த்தை தி.மு.க.வில் துவங்கவில்லை'' என்கிறார்கள் விரிவாக.

 

தி.மு.க. வைத்திருக்கும் இப்படிப்பட்ட நிபந்தனைகளைக் கூட்டணிக் கட்சிகள் தங்களின் உயர்மட்ட குழுவில் விவாதித்து வருகின்றன. அநேகமாக, பிப்ரவரி 15-க்குள் கூட்டணி கட்சிகள் தங்களின் இறுதி முடிவை தி.மு.க.வுக்குத் தெரிவித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.       

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.