Skip to main content

பாமகவுக்கு லாபம்... அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்..? - அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

 

தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.

 

அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சிகளாக பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகியவை இருக்கின்றன. த.மா.கா.வை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்கும் முடிவில் இருக்கிறது. அதே சமயம் தேமுதிகவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எடப்பாடி பழனிசாமி. அதனால் பாஜக, பாமகவுடனான ரகசிய பேச்சுவார்த்தையை மட்டுமே நடத்துகிறது அ.தி.மு.க.! இந்த இரு கட்சிகளைச் சம்மதிக்க வைத்த பிறகே தேமுதிகவைப் பார்ப்போம் என சீனியர்களிடம் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

 

அதி.மு.க. கூட்டணியில் நடப்பது என்ன என்று மேல்மட்டத்தில் விசாரித்தபோது, அ.தி.மு.க. கூட்டணியைப் பா.ஜ.க. உறுதிப்படுத்தியிருந்தாலும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என எந்த உறுதியையும் பாஜக தலைமை தரவில்லை. சீட் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த யுக்தியை அவர்கள் கையாண்டு வருகிறார்கள். அதனை உடைத்து, தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜகவை ஏற்றுக்கொள்ள வைக்கும் யுக்தி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதற்கான வியூக முயற்சிகள் தனி ட்ராக்கில் ரகசியமாக நடந்து வருகிறது.

 

அதேபோல, கூட்டணியில் இரண்டாவது இடம், அதிக தொகுதிகள், தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முன்னிறுத்தி கூட்டணியைப் பேசுகிறது பாமக. இதற்காகத்தான் இட ஒதுக்கீடு பிரச்சனை மூலம் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தருகிறார் டாக்டர் ராமதாஸ். இதுகுறித்து அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் ராமதாசுடன் தைலாபுரத்தில் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும், 20 சீட்டுகள் தருகிறோம்; தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்காத பாமக, 35 சீட்டுகள் வேண்டும்; தேர்தல் செலவுக்கான தொகையை எங்களிடமே தர வேண்டும் என வலியுறுத்தியது. இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால், தங்களின் அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க கட்சியின் நிர்வாக குழுவை 31-ந்தேதி கூட்டுவதாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.

 

dddd

 

இதனையடுத்து, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோருடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, அதிக தொகுதிகளையும் கொடுத்து இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஏற்றால் பாமகவுக்கு லாபம். அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? எனக் கேட்டார். அதற்கு அமைச்சர்கள், ராமதாஸின் கோரிக்கையை ஏற்பதை விட, அவர்களைக் கழட்டிவிடுவதே நல்லது எனத் தெரிவித்தனர். ஆனாலும் பாமகவை வைத்திருந்தால்தான் கூட்டணி வலிமையாகத் தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோரை 30-ம் தேதி தைலாபுரத்திற்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

 

அந்தச் சந்திப்பில், ‘தமிழகத்தில் 24 சதவீதமும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 75 சதவீதமும் வன்னியர்கள் இருக்கும் நிலையில், நாங்கள் தனி இடஒதுக்கீடு கேட்பது எப்படி தவறாகும்? தனி இடஒதுக்கீடு கொடுக்க உடனடி சாத்தியமில்லை என இப்போது சொல்றீங்க. அப்படின்னா உள் இட ஒதுக்கீட்டில் அதிகபட்ச சதவீதத்தை ஒதுக்கலாமே? அதாவது, 16 சதவீதம் தருவது சரியானது. இதைக்கூட செய்யலைன்னா எப்படி? இது சாதி பிரச்சனை இல்லை. சமூகப் பிரச்சனை’ என சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.

 

இதனை ஆமோதித்துள்ள அமைச்சர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதி தருகிறோம். அதேபோல, 25 சீட்டுகள் வரை கொடுக்கிறோம். இதுகுறித்துப் பேச ஒரு குழுவை அமையுங்கள். இரு தரப்பும் பேசி சுமுகமாக இறுதி செய்வோம் என சொல்ல, அதனை ராமதாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் திருப்தியுடன் சென்னைக்கு திரும்பியுள்ளனர் அமைச்சர்கள். இரு தரப்பும் சென்னையில் பேசுவதற்காக பிப்ரவரி 3-ம் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சுமுகமான தீர்வு காணப்படும். அதேபோல, பாஜகவை 20 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள வைக்க கடைசிகட்ட முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியின் டெல்லி லாபிகள் எடுத்து வருகின்றன. “பாமகவை இறுதி செய்துவிட்டால் மற்றவை எல்லாமே ஈசிதான்'' என்கிறார்கள்.

 

அதேசமயம், நேரடி அரசியலில் இல்லாத தனது நெருக்கமான நண்பர் ஒருவரை 28-ம் தேதி தோட்டத்துக்கு அனுப்பியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், இடஒதுக்கீடு அல்லாத மற்ற விசயங்கள் பேசி முடிக்கப்பட்டதையடுத்தே அமைச்சர்களை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி என்கிற தகவலும் அதி.மு.க.வில் சிறகடிக்கிறது.

 

இந்த நிலையில் 31-ம் தேதி கூடிய பாமக நிர்வாகக் குழுவில், அமைச்சர்கள் தன்னை சந்தித்துப் பேசிய விபரங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ராமதாஸ். இடஒதுக்கீடு குறித்து பேச அரசு தரப்பில் அழைத்துள்ளனர். 3-ம் தேதி நடக்கும் அந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். அதன் பிறகு இறுதி முடிவெடுப்போம் என சொல்லியுள்ளார்.

 

இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தைன்னா இழுபறி இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்துகொள்ளாமல் பிரேமலதாவும் அவரது மகனும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிப்பதை அவர் ரசிக்கவில்லை. இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விஜயகாந்த் ஆரோக்கியமாக அரசியல் செய்தபோது தேமுதிகவுக்கு இருந்த செல்வாக்கு அவர்களுக்கு இப்போது இல்லைங்கிற எதார்த்தத்தை அந்தம்மா (பிரேமலதா) புரிந்துகொள்ளாமல் பேசுகிறது'' என கமெண்ட் பண்ணியிருக்கிறார்.

 

பல்வேறு கணக்குகள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என கூட்டணி கட்சிகள் ரவுண்ட் கட்டுவதால் கூட்டணியை இறுதிசெய்ய முடியாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது அதி.மு.க. தலைமை.

 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.