Skip to main content

துட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்..! அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி? அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
ddd

 

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் வெற்றிக்கான பட்ஜெட்டை கூட்டிக் கழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்பட்டிருப்பதால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர் போட்டிருக்கும் பட்ஜெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

 

ஆட்சியைத் தக்கவைத்து மீண்டும் முதல்வராக அமர்ந்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை போட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி. அதிகார பலம், பண பலம் ஆகியவையே திட்டத்தின் பிரதானமாக இருக்கிறது என்கின்றனர் அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.

 

இதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர், "அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. ஆனால், கழகங்களின் பார்வை வேறு. அவர் வரக்கூடாது என தி.மு.க. நினைப்பது போல எடப்பாடியும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஸ்டாலினுக்கும் நமக்குமான போட்டியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கேற்பத்தான் அவரது தேர்தல் யுக்திகள் வகுக்கப்படுகின்றன.

 

தி.மு.க.வைப் போலவே அதிக இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பது முதல் யுக்தி. 185 தொகுதிகளுக்கும் குறையாமல் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என அவரிடம் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். இந்த 185 தொகுதிகளிலும் தேர்தல் கால கள யுக்திகளை பயன்படுத்தினால் 155 இடங்களில் வெற்றிபெற முடியும். ஒருவேளை அமைச்சர்களின் தேர்தல் பணியில் அலட்சியம், அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு, தி.மு.க.வில் வலிமையான வேட்பாளர், சீட் கிடைக்காதவர்களால் ஏற்படும் அதிருப்தி ஆகிய பிரச்சனைகளால், 25 தொகுதிகளில் சரிவு ஏற்பட்டாலும்கூட , 130 இடங்களை அ.தி.மு.க.வால் கைப்பற்ற முடியும் என்றும் சில கணக்குகளின் அடிப்படையில் எடப்பாடிக்கு விவரிக்கப்பட்டிருக்கிறது.

 

இதற்காக, முந்தைய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளிலிலும், தோல்வியடைந்த தொகுதிகளிலிலும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்குமிடையே உள்ள ஓட்டு வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் அ.தி.மு.க.வுக்கு, தி.மு.க. கூட்டணி கட்சிகளிடத்தில் கிடைத்த வெற்றியின் வாக்கு வித்தியாசத்தையும், தி.மு.க.வை வெற்றிகொண்ட தொகுதிகளின் வாக்கு வித்தியாசத்தையும் கூர்ந்து அலசியிருக்கிறோம்.

 

அப்படி அலசப்பட்டதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயித்த தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு தற்போதைய ஆதரவு எப்படி இருக்கிறது? அந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டால் யாரை வேட்பாளராக நிறுத்தும்? கூட்டணி கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டால் யாரை நிறுத்துவார்கள்? என தோராயமாக ஆராய்ந்துள்ளோம். அந்த வகையில், அந்த தொகுதிகளில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எப்படி உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு இல்லை. எதிர்ப்புதான் அதிகமாக உள்ளது. அதனால், அந்த தொகுதிகளில் தி.மு.க.வை எதிர்க்கும் வகையிலான வலிமையான புதியவர்களை களமிறக்க யோசனை சொல்லியுள்ளோம். அதேபோல, அ.தி.மு.க. தோல்வியடைந்த தொகுதிகளிலிலும் இதே ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என முதல் யுக்தியை விவரித்தார் அந்த தலைவர்.


 
மேலும் விசாரித்தபோது, "கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள கணக்கின்படி தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கியதாக சென்னையிலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்தபட்சமாக 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்களை கொண்டதாக சென்னை துறைமுகம் தொகுதியும் இருக்கின்றன. மற்ற தொகுதிகளைப் பொறுத்த வரை 2 லட்சம் முதல் 2 லட்சத்து 93 ஆயிரம் வரை வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

 

பொதுவாக, தேர்தலில் அதிகபட்சமாக 70, 75 சதவீத வாக்குகள்தான் பதிவாகின்றன. அந்த வகையில் ஒரு வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வாங்கினால் போதும். அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும். இதனை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. துட்டுக்கு ஓட்டு என்கிற மனநிலையில்தான் பெரும்பாலான தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதுவும் கரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரிடம் இத்தகைய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதுவும் துட்டு அதிகமாக தருகிற கட்சிக்கு ஓட்டு என்கிற சிந்தனை அவர்களிடம் அதிகரித்துள்ளது.

 

அந்த வகையில் தற்போது ஒரு ஓட்டுக்கு 2000 என்கிற கணக்கை போட்டு வைத்திருக்கிறது ஆளும் கட்சி தலைமை. அதன்படி ஒரு தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் தரப்படவிருக்கிறது. அந்த 1 லட்சம் வாக்காளர்களில் யாரும் மாற்று கட்சி உறுப்பினர்களாக இருந்து விடக்கூடாது என இப்போதே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு தொகுதியில் 1 லட்சம் ஓட்டுகளை விலைக்கு வாங்க, 20 கோடியும், மற்ற தேர்தல் செலவுகளுக்காக 5 கோடியும் என 25 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 4,625 கோடி ரூபாய் பட்ஜெட்டை போட்டுள்ளார் எடப்பாடி. தேர்தல் வெற்றிக்கான இந்த பட்ஜெட், தி.மு.க.வின் தேர்தல் கால திட்டங்களைப் பொறுத்து அதிகரிக்கும். குறிப்பாக, அ.தி.மு.க.வையும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடியையும் தமிழகத்தின் முகமாக மாற்றும் தொழில்நுட்ப ப்ராண்டிங்கிற்கான பட்ஜெட் தனி. துட்டுக்கு ஓட்டு என்பதே இரண்டாவது யுக்தி.

 

இதனையடுத்து, அ.தி.மு.க. ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என 100 சதவீதம் விரும்பும் அதிகாரிகளைத்தான் தேர்தல் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் நியமிக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. அதேபோல, பூத்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இதே பாணியில் நியமிக்கும் யோசனையும் விவாதிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது யுக்தி. இப்படி பல யுக்திகள் தீட்டப்படுகின்றன'' என்று அ.தி.மு.க.வின் தேர்தல் ரகசியங்களை விவரிக்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான சீனியர்கள்.

 

ஆக, கூட்டணி பலத்தைவிட துட்டுக்கு ஓட்டு என்கிற தேர்தல் பட்ஜெட் பலத்தைத்தான் அழுத்தமாக நம்புகிறது அ.தி.மு.க. தலைமை. அந்தவகையில், ஒவ்வொரு தொகுதிக்கான தேர்தல் நிதி, ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கும் போய்ச்சேர்ந்துவிட்டது. அந்த கோடிகள் பல்வேறு வழிகளில் பதுக்கப்பட்டுள்ளன. அந்த பதுக்கல் வழிகளை கண்டறிந்துதான் ரெய்டு வேட்டையை துவக்கியிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவினரின் தலைமுடி எப்போதும் தங்கள் கைப்பிடியில் இருக்க வேண்டும் என நினைக்கும் மத்திய மோடி அரசு.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.