Skip to main content

ஏழுமலையான் சொத்து விஷயத்தில் ஜெகனுக்கு எதிராக பா.ஜ.க... சர்ச்சையில் சிக்கிய சேகர் ரெட்டி... வெளிவந்த தகவல்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

temple


இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளைக் கொண்டிருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். அவற்றில் பெரும்பாலான சொத்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படிப் பயன்படுத்தப்படாமல் தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விற்பது எனத் தீர்மானிக்கிறது திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாகம். அந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் சுப்பா ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா; ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
 


இதனையறிந்த தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கடுமையாக எதிர்த்தார். விவகாரம் சீரியஸ் ஆனது. அதேசமயம், திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் சுப்பாரெட்டியின் தீர்மானத்தை வழிமொழிந்து, சென்னை தி.நகரில் உள்ள தமிழக திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவரான சேகர்ரெட்டியும் தீர்மானம் போடுகிறார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
 

sekar


இந்த விவகாரத்தை முரளிதரராவ் உள்பட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் என பலரின் கவனத்துக்கும் கொண்டுசெல்கிறார் தமிழக பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு தலைவர் சுப்பிரமணிய பிரசாத். பல முனைகளிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சுப்பாரெட்டிக்கும் எதிராகக் கண்டனங்கள் எதிரொலிக்கின்றன. தேவஸ்தானத்திற்கு வருவாய் இல்லாததால் சொத்துகள் விற்கப்படுகிறது என்கிற ரீதியில் பரபரப்பாகிறது. இதனையடுத்து, ’சொத்துகள் விற்பதை நிறுத்த அறக்கட்டளை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்’ என சுப்பாரெட்டியைக் கேட்டுக்கொள்கிறார் ஜெகன்மோகன்ரெட்டி.
 

cm


அதனை ஏற்றுக்கொண்டு, தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்திருக்கும் சுப்பாரெட்டி, "பயன்படுத்தப்படாத நிலங்களை விற்பனை செய்வது 1974-லிருந்தே நடந்து வருகிறது. இதுவரை பகிரங்க ஏலம் மூலம் 129 சொத்துகள் விற்கப்பட்டுள்ளன. அறக்கட்டளையின் தலைவராக கிருஷ்ணமூர்த்தி இருந்த முந்தைய காலத்தில், பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து அதனை விற்பனை செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அப்போது, ஆந்திராவில் 26, தமிழகத்தில் 23 என 50 நிலங்களை விற்க தீர்மானிக்கப்பட்டன'' என விளக்க மளித்திருக்கிறார்.
 


இது குறித்து நாம் விசாரித்தபோது, "அறக்கட்டளையின் தலைவரான சுப்பாரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா என்பதாலேயே பா.ஜ.க.வினர் அரசியல் செய்து பூதாகரமாக்கினர். அதே பாணியில் அரசியல் செய்ய முடிவெடுத்த ஜெகன்மோகன், அறக்கட்டளையின் தலைவராக கிருஷ்ணமூர்த்தி இருந்த காலத்தில்தான் நிலங்களை விற்க முடிவு செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் வகையில் விளக்களியுங்கள் என சுப்பா ரெட்டிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். காரணம், கிருஷ்ணமூர்த்தி மத்திய பா.ஜ.க. அமைச்சர் அமீத்ஷாவுக்கு நெருக்கமானவர்'' என்கிறார்கள் போர்டின் முன்னாள் உறுப்பினர்கள்.

இந்த நிலையில், தேவஸ்தான சொத்து சர்ச்சைகள் குறித்து தமிழக பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு தலைவர் சுப்பிரமணிய பிரசாத்திடம் நாம் விசாரித்த போது, "திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கும் சொத்துகள் அதன் அறக்கட்டளைக்காக பக்தர்கள் கொடுத்தது அல்ல. தாங்கள் வணங்கும் கடவுளான ஏழுமலையானுக்கு காணிக்கையாகப் பக்தர்கள் கொடுத்தது. அதாவது, சொத்துகளுக்கு அதிபதி திருப்பதி ஏழுமலையான்தான். அந்த வகையில் சொத்துகளைப் பராமரித்து, அதன் மூலம் வருவாயைப் பெருக்கி, அந்தத் தொகையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதனைத் தவிர்த்து சொத்துகளை விற்க அறக்கட்டளைக்கு அதிகாரம் கிடையாது. பயன்படுத்தப்படாமல் இருப்பதால் ஒரு சொத்தை விற்க நினைப்பது அறிவீனம். குறிப்பிட்ட சொத்துகளில், தேவஸ்தானம் சார்பில் மருத்துவமனை கட்டுங்கள், இந்து தர்மங்களைப் போதிக்கும் பாடசாலைகளை அமையுங்கள், சமய பெரியோர்களின் சொற்பொழிவு கூடங்களை உருவாக்குங்கள், தர்மஸ்தானம் அமையுங்கள், ஏழை பக்தர்களுக்கு அதன் மூலம் உதவுங்கள். ஆன்மிகரீதியாகவும், இந்து தர்மத்தின்படியும் இப்படி நிறைய நல்ல விசயங்களைச் செய்ய முடியும். அதனைத் தவிர்த்து, நிலங்களை விற்பதற்கு முயற்சிப்பது தவறு.
 

http://onelink.to/nknapp


இன்றைக்குச் சிறிய அளவில் நடக்கும் இந்த முயற்சிகள், எதிர்காலத்தில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளும் ஏலம் விடப்படும் சூழலை உருவாக்கும். அதனால், ஏழுமலையானுக்குச் சொந்தமான நிலங்களை விற்கக் கூடாது. மேலும், திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை இப்படி ஒரு முடிவை எடுக்கிறபோது, தமிழக திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் சேகர் ரெட்டியும், போர்டின் உறுப்பினர்களும் அதனை எதிர்த்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சொத்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம் எனத் தீர்மானம் போட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, திருப்பதி தேவஸ்தான அறக் கட்டளையின் முடிவுகளை ஏற்கும் வகையில் தீர்மானம் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஏழுமலையானுக்குச் சொந்தமான நிலங்களை விற்பதற்கு துணை போயிருக்கும் தமிழக திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையை முழுமையாகக் கலைக்க வேண்டும். நிலங்களை விற்பது தொடருமானால், இனி ஏழு மலையானுக்கு பக்தர்கள் நிலங்களைக் காணிக்கையாகத் தருவது கேள்விக்குறியாகி விடும்'' என்கிறார் ஆவேசமாக.


 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.