Skip to main content

மிரட்டப்படும் டாக்டர்! - இ.டி. வழக்கில் பரபரப்பு! 

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Threatened doctor! ED Excitement in the case!
அங்கித் திவாரி

தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக நடக்கும் நிகழ்வுகள் சில திகிலை ஏற்படுத்தி வருகின்றன.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் டாக்டர் சுரேஷ்பாபுவை, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரிடம் இருபது லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபின், அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட திவாரி, உணவு அருந்தாமல் அழுது அடம்பிடித்து வந்ததோடு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர். அங்கு வைத்து அவரை மனநல மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, திண்டுக்கல்லில் உள்ள ஊழல் வழக்குக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகனாவிடம் அவர் தரப்பு மனு செய்தது. அப்போது, அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இதுவரை திவாரி மீது எந்தவொரு புகாரும் இல்லை. அவர் இதுவரை எந்த ஒரு மெமோவும் வாங்கியதில்லை. அப்படியிருக்க, அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிக்க வைத்திருக்கிறார்கள். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

ஆனால் அரசுத் தரப்பு வக்கீலோ, "இது முதன்மை வழக்காக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அவர் வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார்” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதியரசர் மோகனா, திவாரியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

Threatened doctor! ED Excitement in the case!
டாக்டர் சுரேஷ்பாபு

அதே சமயம் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான டாக்டர் சுரேஷ்பாபு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீதியரசரிடம் தனியறையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். "இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில், புகார் கொடுத்த நபர் தனிப்பட்ட முறையில் நீதியரசரிடம் வாக்குமூலம் கொடுத்ததில்லை' என்கிறார்கள் சட்டத்துறையினர்.

இது சம்பந்தமாக டாக்டர் சுரேஷ்பாபுவின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, அமலாக்கத்துறை அதிகாரி திவாரி மீது புகார் தெரிவித்து, அவரை கைது நடவடிக்கையில் சிக்க வைத்திருப்பதால், டாக்டர் மீது அமலாக்கத்துறையினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவர் எங்கெங்கே சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்று விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல் தனது நண்பர்கள் மூலம் டாக்டர் சுரேஷ்பாபு, வெளிநாட்டில் தன் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி தகவல்களைத் தேடி வருகிறார்கள். இவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இப்போது, டாக்டரை சும்மா விடமாட்டோம். அவருக்கு எதிராக ரெய்டை நடத்தி, அவரைக் கைது செய்வோம் என்று மறைமுகமாக மிரட்டி வருகிறார்கள். இதற்கிடையே திவாரியின் ஆதரவாளர்கள், டாக்டர் வழக்கமாகப் போய்வரும் இடங்களையெல்லாம் கண்காணித்து வருகிறார்கள். அதனால் அவர்கள் மூலம் டாக்டரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள சில அதிகாரிகளே, கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள் என்று டாக்டரிடம் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு டாக்டர் அலறிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் மற்றும் திவாரியின் ஆதரவாளர்கள் மூலம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதியரசரிடம் டாக்டர் ரகசிய வாக்குமூலம் கொடுத்து அவர் முறையிட்டிருக்கிறார்'' என்கிறார்கள் கவலையோடு.

இந்த நிலையில், லஞ்சம் வாங்கிக் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர் வாங்கி வந்த லஞ்சப் பணத்தில், மதுரை, சென்னை உள்பட சில இடங்களில் பணிபுரியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதினொரு பேருக்கு பங்கு கொடுத்திருக்கிறாராம். எனவே, இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்கிற பேச்சும் பரவலாக அடிபட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த மூவ்களை எல்லாம் டெல்லி கூர்ந்து கவனித்து வருகிறதாம்.

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.