Skip to main content

அந்த 13 உயிர்கள்... –தமிழகமும் தாய்லாந்தும்!!!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

தாய்லாந்து நாட்டில் குகைக்குள் சிக்கிய 13 சிறுவர்களையும் அவர்களுடைய பயிற்சியாளரையும் மீட்க அந்த நாட்டு அரசு மேற்கொண்ட சர்வதேச அளவிலான முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் மீட்கப்படும்வரை நிலவிய பதற்றம் நமக்கு ஆச்சரியத்தை அளித்தது.

 

thailand


 

 

 

13 உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பா என்று நமக்கே வியப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குறிபார்த்து சுடுபவர்களால் 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. அவர்கள்போக, 100க்கு மேற்பட்டோர் குறிதவறி குண்டு பாய்ந்ததால் காயமடைந்திருந்தனர். பலருக்கு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன.

 

சுட்டுக் கொன்ற அரசாங்கமே, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயும், காயம்பட்டவர்களுக்கு அவர்களுடைய காயத்துக்கு தகுந்தபடியான தொகையையும் இழப்பீடாக அளித்துவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

 

okchi


 

அதற்கு கொஞ்சநாட்கள் முந்தி, ஒக்கி என்ற புயல் தாக்கியதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் 661 பேர் காணாமல் போனதாக இந்திய அரசாங்கமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, அரசுகள் அடுத்தகட்ட கொள்ளையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

 

இந்தியாவில் குறிப்பாக உயிர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சாதிக்கு தகுந்தபடி வேறுபடும் என்பது எதார்த்தமான உண்மை. டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் நள்ளிரவில் பலரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணியை வெளியிடாமல் மறைத்து, அத்தனை மீடியாக்களும் அரசுக்கு எதிராக ஓலமிட்டன. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விரைவாக வழங்கப்பட்டது.

 

 

 

சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில்நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் பட்டப்பகலில் கொல்லப்பட்டபோதும் இப்படித்தான் கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட அரசாங்கமே தடைவிதித்தது. கொன்றவனைப் பற்றிய தகவல்களையும் மறைத்தது. ராம்குமார் என்பவனை கைது செய்து அவனை கடைசிவரை செய்தியாளர்களிடம் பேசவிடாமல், சிறையிலிருந்து பிணையில் வெளிவரும் நிலையில் நிரந்தரமாக பேசவிடாமலே செய்துவிட்டார்கள்.

 

ஆனால், காதலித்தார்கள் என்பதற்காகவே சாதியின் பேரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டாலும், வீடுபுகுந்து சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாலும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காகவே மூன்றுபேரை வெட்டிக் கொன்றாலும் எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து போவதைப் பார்த்து பழகியவர்களுக்கு தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு வியப்பையே ஏற்படுத்தும்.

 

thailand


 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாய்லாந்து கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 13 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம்லுவாங் என்ற நீளமான குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்டனர். 4 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பலத்தமழை பெய்து குகையில் நீர் நிரம்பிவிட்டது. வெளியில் வரமுடியாத அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

 

அவர்களைக் காணாமல் தேடிய அரசு, அவர்களைக் கண்டுபிடித்து மீட்க உடனடியாக சர்வதேச உதவியை நாடியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிரோடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் உயிர்க்காப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

 

thailand


 

குகையில் மழைநீர் அதிகரித்துவிடாமல் இருப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் ராட்சத பம்ப்புகளை கொடுத்து நீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது. இதனிடையே, சிறுவர்களுக்கு சுவாசிக்க ஆகிசிஜன் சிலிண்டரைக் கொடுத்துவிட்டு திரும்பும்போது தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர் சமன் குனன் உயிரிழந்தார்.

 

ஒருவழியாக சிறுவர்களை மீட்பதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. முதல் நாள் 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும், மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் செவ்வாய்க்கிழமையும் மீட்கப்பட்டனர்.

 

சிறுவர்கள் காணாமல் போய் 9 நாட்கள் அவர்களைத் தேடும்பணி நீடித்தது. அப்போதுதான், தாம்லுவாங் குகை முன் சிறுவர்கள் சென்ற சைக்கிள்கள் நிற்பதை பார்த்த சிலர் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்துதான் சிறுவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்தது.

 

 

 

மனித உயிர்களின் மதிப்பறிந்த தாய்லாந்து அரசு அந்த உயிர்களைக் காப்பாற்ற கவுரவம் பார்க்காமல் சர்வதேச உதவியை நாடியது.

 

ஆனால், ஒக்கி புயலில் காணாமல் போன தனது நாட்டு மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றுவதில் இந்தியக் கப்பற்படை வேண்டுமென்றே மெத்தனம் காட்டியது என்று கன்னியாகுமரி மீனவர்கள் குமுறியதை கேட்க முடிந்தது. கடலோரப்பகுதிகளில் இருந்து தங்களை வெளியேற்றுவதே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியதும் கடல் அலையில் மோதி கரைந்துவிட்டது.

 

உயிரைக்கொல்லும் திட்டங்களுக்கு சாதகமாக மக்களுடைய உயிரை எடுக்கவும் தயங்காத அரசுகள், தாய்லாந்து அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

 

Next Story

41 உயிர்களை மீட்டவரின் வீட்டை புல்டோசரால் இடித்த அரசு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் குழுவினர் அங்கு குவிந்தனர். மேலும், சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் இங்கு கொண்டு வரப்பட்டு, சுரங்கத்தின் 47 மீட்டர் தொலைவு அளவில் துளையிட்ட போது துரதிர்ஷ்டவசமாக இயந்திரம் உடைந்தது. இதனால், தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இதற்கிடையில், தொழிலாளர்கள் சீராக இருக்க, குழாய் மூலமாக உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வந்தும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் காப்பாற்றப்படுவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

இந்த நிலையில் தான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்று துளையிடும் அனுபவம் வாய்ந்த 12 சுரங்கப்பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில், 800 மி.மீ விட்டமுள்ள குழாய்க்குள், மீதமுள்ள 13 மீட்டர் பாதையை 21 மணி நேரத்தில் துளையிட்டு முடித்தனர். இதனைத் தொடர்ந்து, 17 நாள்கள் போராட்டத்திற்கு பின் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் படையினர் வெற்றிகரமாக்கினர். இதன் பின்னர், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருவராக, ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தனர். இந்த மீட்பு பணிக்கும் பேருதவியாக இருந்த எலி வளை தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வர தொடங்கின. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

தங்கள் உயிரைப் பணயம் வைத்த, எலிவளை சுரங்கத் தொழிலாளர் ஒருவர் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தரைமட்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வகீல் ஹாசன். இவர் டெல்லி கஜோரி காஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம், கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பல வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடிப்பு நடவடிக்கை பணியில், வகீல் ஹாசனின் வீடும் இடிக்கப்பட்டது. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

இதனால், வகீல் ஹாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாலையோரத்தில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய வகீல் ஹாசன், “இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடுகளை இடிப்பது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய முன்னறிவிப்பின்றி எங்கள் வீடு இடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“தென் மாவட்ட மக்களை மீட்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” - தமிழக முதல்வர்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Tamil Nadu Chief Minister says Government is paying great attention to rescue the people of Southern District

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதி செய்திட அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேற்பார்வையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர். மேலும், தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.