Skip to main content

முத்தையா கொலை வழக்கு; பரபரப்பாகும் ஆவணப் படம்! 

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Thisayanvilai muthaiya case

 

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளைப் பகுதியை அடுத்த அப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் காலணி தைக்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள். இவரது மூன்றாவது மகன் முத்தையா (19), தனது பகுதியின் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி முத்தையா, தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு ஓடக்கரையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். முத்தையாவின் தந்தை கன்னியப்பன் கொடுத்த புகாரின் படி முதலில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திசையன்விளை காவல்துறை இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. பிறகு இந்த வழக்கை விசாரித்த திசையன்விளை காவல்துறை, முத்தையாவை பட்டியலினத்தைச் சேர்ந்த சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவர் தான் கொலை செய்தனர். கொலைக்கு காரணம், சுரேஷின் தங்கையை முத்தையா கேலி கிண்டல் செய்ததன் காரணமாகவே கொலை நடந்துள்ளது எனத் தெரிவித்து எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

ஆனால், நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலை, இது மறைக்கப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொலையான முத்தையா குடும்பம், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஆவணப் படத்தில், இந்தக் கொலை வழக்கில் நியாயத்தை நிலை நிறுத்த போராடி வரும், திராவிட தமிழர் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மனிதம் அமைப்பு ஆகிய இயக்கங்கள் இந்த வழக்கின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரை விரிவாக ஆராய்ந்து அதன் திசை மாற்றங்களை பகிர்ந்துள்ளனர்.

 

இந்த ஆவணப் படத்தில் பேசும் முத்தையாவின் தந்தை கன்னியப்பன், அவரது மகன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை உறுதி செய்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர் பெருமாள் ஏற்கனவே முத்தையாவை தாக்கியதையும் அவர் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவர் ஜூலை 23ம் தேதி நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். அதில், முத்தையாவின் நண்பர் கார்த்தி தான் இறுதியாய் அவரை அழைத்து சென்றதாகவும், ஆனால், மகனை தேடியபோது அவர் கொல்லப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஆறு நபர்கள் வந்ததாகவும் சொல்கிறார். மேலும், திசையன்விளை காவல் ஆய்வாளரும், ஊராட்சி மன்றத் தலைவரும் ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடு பேசியதாகவும் விவரிக்கிறார். 

 

இந்த வழக்கில் திசையன்விளை காவல் ஆய்வாளர், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததையும் அந்த ஆவணப் படத்தில் உறுதி செய்கிறார். 

 

இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதியழகனின் தாய், “என் மகனை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள்” என்று சொல்லி உடைந்துபோய் அழுதார். பிரகாஷின் மனைவி பேசும்போது, “கொலை சம்பவம் நடந்த அன்று என் கணவர் என்னுடன் வீட்டில்தான் இருந்தார்” என்கிறார். மூவரையும் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி காவல்துறை கடுமையாக தாக்கியதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் சொல்கின்றனர்.

 

இந்தக் கொலையின் அடிப்படை காரணமாக காவல்துறைச் சொல்லும் சுரேஷின் தங்கை முத்தையாவை தனக்கு தெரியாது என்றும் காவல்துறையினர் தன்னை ஒப்புக்கொள்ள சொன்னர் என்றும் சொல்லியுள்ளார். 

 

முத்தையா கொல்லப்பட்ட அன்று அவரை அழைத்துச் சென்ற கார்த்தி, போலீஸின் அடியின் காரணமாக பொய் சாட்சி சொன்னேன். உண்மையில் அன்று பெருமாளும், வேறு ஒருவரும் அங்கு வந்தனர். நான் அங்கிருந்து தப்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

 

மனிதம் அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஜி.ரமேஷ் பாபு என்பவர் ஒரு உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து அறிக்கை தயார் செய்துள்ளார். அதிலும் இது ஒரு அப்பட்டமான ஆணவக் கொலை என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், எஃப்.ஐ.ஆர்.-ல் முழுமையான விசாரணை நடக்காமல் திருத்தங்கள் நடந்துள்ளன. போலீஸும், பேரூராட்சி தலைவரின் கணவரும் ஏன் நஷ்ட ஈடு குறித்து பேச வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

 

இந்த ஆணவக் கொலை குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “இந்த ஆணவக் கொலை என முத்தையாவின் தந்தை சொல்லியுள்ளார். ஆனால் போலீஸ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளது. காவல்துறை கொலைச் செய்யப்பட்ட முத்தையா குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், கைது செய்யப்பட்ட ஆதி திராவிடர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து நீதி கேட்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.  

 

பலியான முத்தையாவின் தந்தை இது ஆணவக் கொலை என சொன்னபிறகும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; இதில் அப்பாவி மூவர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தமாக சொல்கிறது அந்த ஆவணப் படம்.

 

 

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.