Skip to main content

சிவபானமா இது... திருவண்ணாமலை சாமியார்களின் சுகவாசம்!   

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

படுக்க இடம் கிடையாது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலை கிடையாது, உற்றார், உறவினர் இருந்தும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்கள்  நூற்றுக்கணக்கில் உள்ளனர். அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டே வாழ்கிறோம் என உடம்பில் திருநீறு பட்டையுடனும் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையுடனும் வலம் வருகிறார்கள்.

 

thiruvannamalai priest



கடந்த வாரம் கிரிவலப்பாதையில் ஒரு சாமியாரை மற்றொரு சாமியார் அடித்து உதைத்தார். மற்ற சாமியார்கள் அதை வேடிக்கை பார்த்தபடி ‘எதையோ’ புகைத்தபடி அமர்ந்திருந்துள்ளனர்.  கிரிவலம் சென்ற பக்தர்களும் அதை வேடிக்கை பார்த்தனர். அப்படி வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது கற்களை வீசி எரிய முயல அவர்கள் பயந்து ஓடியுள்ளனர். இதை அவ்வழியாக சென்ற ஒருவர் போட்டோ எடுக்க அவர் மீதும் கற்களை வீசியுள்ளார். போட்டோ எடுப்பதைப் பார்த்த வேடிக்கை சாமியார்கள் புகைப்பதை நிறுத்திவிட்டு கற்களை எரிந்த சாமியாரை அடக்கி உட்கார வைத்தனர்.

 

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூகநல ஆர்வலர் ஒருவர், "எல்லாம் கஞ்சா போதைங்க... பேருதான் இவுங்களுக்கு சாமியார். பாதிப்பேர் கஞ்சா அடிக்கறது, சரக்கு அடிக்கறதுன்னு இவுங்க உலகமே தனி. காலையில் 11 மணியாச்சின்னா ரமணாஸ்ரமத்துக்கும் – ஓம்சக்தி கோயிலுக்கும் இடையில் கோயிலுக்குப் பின்னால் அமர்ந்து கஞ்சாவை புகைக்கிறார்கள். அதே போல நிருதிலிங்கம் அருகே, திருநேர்அண்ணாமலை கோயில் அருகே, நித்தியானந்தா ஆஸ்ரமம் எதிரே கஞ்சா-குடி சாமியார்கள் நிறைய பேர் உள்ளார்கள். பௌர்ணமி அல்லாத நாட்களில் கிரிவலப்பாதையில் புளியமரத்தடி நிழலில் அமர்ந்து கஞ்சா புகைப்பது சகஜம், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா புகை இலவசமாக கிடைக்கிறது. இப்படி கஞ்சா புகைத்துவிட்டு அந்த போதையில் சாமியார்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது சகஜம்" என்றார். 

 

thiruvannamali fight

 

கிரிவலப்பாதையே கதியென கிடக்கும் சாமியார்களுடன் புழங்கும் காவி கட்டிய அண்ணாமலையார் பக்தரிடம் பேசியபோது, "காவி கட்டிய வயதானவர்கள் தினம் ஒரு குழுவாகச் சென்று கடைகளில் திருவோடு ஏந்துவார்கள். அந்தக் குழு அதோடு அடுத்தவாரம்தான் செல்லும். மற்ற நாட்களில் கிரிவலப்பாதை, பெரிய கோயில் எதிரே அமர்ந்திருப்பார்கள். பௌர்ணமியன்று துண்டு போட்டும், திருவோடு ஏந்தியும் சாலை ஓரம் அமர்ந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்கள். பணத்தைப் பெற்றாலும் இவர்களுக்கு செலவென்று எதுவும் கிடையாது. தினமும் மூன்று வேலை உணவு ரமணாஸ்ரமம் உட்பட பல ஆசிரமங்களில் வழங்கப்படுகிறது. தினமும் காலையில் இருசக்கர வாகனத்தில் வந்து  உணவுதானம் வழங்குபவர்கள் இருக்கிறார்கள். யாசகம் பெற்ற பணத்தில் பகலில் டீ சாப்பிடுவார்கள்.

சிலர் குடும்பத்தில் இருந்து யாராவது பார்க்க வந்தால் அவர்களுக்கு தந்து அனுப்பிவிடுகிறார்கள். பலர் இரவில் டாஸ்மாக் சரக்கும், கஞ்சாவுக்கும் செலவு செய்கின்றனர். டாஸ்மாக் கடையில் யார் கேட்டாலும் கிடைக்கிறது என்பதால் இவர்களே நேரடியாக போய் வாங்கிக்கொள்கிறார்கள். மதுவுக்குத் துணையாக பீப், சிக்கன் என உண்டுவிட்டு உறங்குவது வழக்கம். சாமியார்களாக வலம்வருபவர்கள் யாரும் கஞ்சாவை தேடி செல்வதில்லை. இவர்களை தேடி கஞ்சா வருகிறது. சாமியார் உடை போட்ட ஒருத்தரே கொண்டு வந்து விற்பனை செய்கிறார். ஒரு பாக்கெட் 50 ரூபாய்தான்" என்றார். 

 

thiruvannamalai


முற்றும் துறந்ததாகக் கூறும் சாமியார்களுக்கே சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது என்றால் மற்றவர்களுக்கு எப்படி  என்கிற கேள்வி எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா புகைக்கும் சாமியார்கள் மலையோரம் வசிக்கும் படிக்காத இளைஞர்களிடம் ஓரினச்சேர்க்கை செய்ததால் கொலையெல்லாம்கூட நடந்தது. சமீபமாக அப்படியெதுவும் நடக்கவில்லையென்றாலும் கஞ்சா போதையில் அவர்களுக்குள் அடித்துக்கொள்வது சகஜமாகியுள்ளது. இந்த கஞ்சாவை சிவபானம் என்றும் ஒரு சிலர் கூறிவருவதாலும் திரைப்படங்களில் யூ-ட்யூப் வீடியோக்களிலும் அவ்வாறு கூறப்படுவதாலும் கல்லூரி மாணவர்களும் இதை ஒரு ஸ்டைலாக, சிவபக்தியுடன் தொடர்புடையதாக தவறாக நினைத்து இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவது சமீபமாக அதிகரித்துள்ளது.  

 

 

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைப் போல திருவண்ணாமலையில் உள்ள சாமியார்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். உண்மையாக அனைத்தையும் துறந்தவர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களின் பக்தர்கள் பலர் பல பக்தி அனுபவங்களையும் கூட சொல்கிறார்கள். ஆனால் பலர் இந்த வகையறாவாகவே இருக்கின்றனர். என்ன தங்கள் காவி கோலத்தை மறந்து கோலாகலமாக வாழ்கிறார்கள். காவி கட்டிக்கொண்டு இவர்கள் செய்யும் எதையும் தமிழக காவல்துறை கண்டுகொள்வதில்லை. எந்த காவியைக் கண்டாலும் அவர்களுக்கு பயம்தான் போல... 

  

 

 

Next Story

கலச ஊர்வலம்; அனுமதி தந்த அதிகாரிகள் - கொண்டாடிய பாமக

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும்  என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.