Skip to main content

நம்முடைய இன அடையாளத்தை எந்த குஜராத்தியும் கேள்விகேட்க முடியாது - திருமுருகன் காந்தி பேச்சு!

Published on 11/02/2020 | Edited on 12/02/2020

நாடு முழுவதும் சிஏஏ தொடர்பான வாத பிரதிவாதங்கள் எழுந்து வரும் நிலையில் இதுதொடர்பான எதிர்ப்பு கூட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் அத்தகைய கூட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புக்களை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மத்திய அரசை எதிர்த்து கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இந்த குடியுரிமை சட்டத்தை ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக மாற்றப்பார்க்கிறார்கள். உண்மையில் நிலைமை அப்படியல்ல. இது இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்குமானது. ஆனால் தற்போது இஸ்லாமியர்கள் போராட வந்திருக்கிறார்கள். எனவே மற்ற அனைத்து மதத்தினருக்கும் எதிரானதாகவே இந்த சட்டம் அமைந்திருக்கிறது. எனவே ஒட்டுமொத்த மக்களும் இதை எதிர்த்து போராட வேண்டும். ஆனால் தற்போது இஸ்லாமிய சகோதரர்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து மக்களும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். நமக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், கல்வியுரிமை முதலியவற்றை குடியுரிமை மறுக்கிறது என்றால் அதுதான் மனுதர்ம ஆட்சி. அதற்குத்தான் இவர்கள் இத்தகைய சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அதற்கு எதிராகத்தான் நாமும் களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு கொடுத்துள்ளார்கள், வருடாவருடம் கல்விக்கான செலவீனங்களும், விவசாயத்திற்கான செலவும் அதிகரிக்கும் நிலையில் அதற்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தை குறைத்துள்ளார்கள். இதுதான் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு செய்கின்ற காரியமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஏன் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மேடைகளில் பேசுகிறார்கள். பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க வீட்டில் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகிறார். 
 

jk



பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் எல்லாம் ஏன் படிக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள். நீட் தேர்வை கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு உள்ள நோக்கம் எல்லாம் இங்கே இருப்பவர்கள் எல்லாம் படிக்க கூடாது என்று மனு தர்மம் சொல்வதை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த மனுதர்மத்தின் பிடியில் இருந்து வெளியேறியவர்கள் இஸ்லாமியர்கள். இந்த சாதி இழிவிலிருந்து இஸ்லாமியர்கள் முதலில் வெளியேறினார்கள். அதனால் தான் இஸ்லாமியர்கள் மீதான வன்மம் அவர்களுக்கு இன்றும் இருந்து வருகின்றது. இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் யார், சாதிய ரீதியான வன்மத்தை துடைதெறிந்துவிட்டு வாழ்பவர்கள் தானே? இந்த இழிவை மீண்டும் நம்மீது திணிக்க பார்க்கிறார்கள். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க விடக்கூடாது. நாம் தமிழர்களாக ஒன்றுதிரண்டு நிற்கும் வரை எந்த இந்துத்துவ வாதியும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. தமிழர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். இதே ஜல்லிகட்டு போராட்டம் கடற்கரையில் நடைபெற்ற போது இதே இஸ்லாமியர்கள் தானே நமக்கு மூன்று வேலை உணவு கொடுத்தார்கள். ஜல்லிக்கட்டு காளையை நேரில் கூட பார்க்காத பெருங்கூட்டம் தானே இங்கே திரண்டது.  இங்கே வந்தவர்கள் எல்லாம் ஜல்லிகட்டு போட்டியில் விளையாடியவர்களா என்றால் இல்லை. தமிழன் அடையாளத்தில் ஒன்றுதிரண்டவர்கள். தமிழன் என்ற அடையாளத்திலேயே இந்த குடியுரிமை போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இந்தியன் என்ற அடையாளம் 70 ஆண்டுகளாக நம்மீது இருக்கின்ற அடையாளம், ஆனால், தமிழன் என்ற அடையாளம் 5000 ஆண்டுகளாக நம்மீது இருக்கின்ற அடையாளம். இது நம்முடைய இன அடையாளம். அதை அந்த குஜராத்தியும் கேள்வி கேட்டுவிட முடியாது. உங்களுடைய பண்பாடும் எங்களுடைய பண்பாடும் வேறுவேறு. நீயும் நானும் வேறு. நமக்குள் எந்த இன ஒற்றுமையும் இல்லை. எனவே எங்கள் சகோதரனின் வாழ்வை குடியுரிமையை வேறுயாரும் நிர்ணயிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார். 

 


 

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...