Skip to main content

"முகிலன் கேட்ட கேள்விகளை விவாதம் செய்தீர்களா... குற்றச்சாட்டை மட்டும் எப்படி விவாதம் ஆக்குகிறீர்கள்"

Published on 09/07/2019 | Edited on 10/07/2019


காணமல் போயிருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் தற்போது காவல்துறையினரால் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காணாமல் போன நாளில் இருந்தே முகிலன் எங்கே என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த திருமுருகன் காந்தியிடம், முகிலன் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதோ அவரின் பதில்கள்...

கடந்த 140 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருந்த முகிலன் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார், அவருக்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளீர்கள். இதை எப்படி பாக்குறீங்க?

முகிலன் திரும்ப வந்தது மகிழ்ச்சி. எப்போதும் மனசை அழுத்திக்கிட்டு இருந்த வலி தற்போது மறைந்த நிலையில், அவர் வருகை மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது. ஆனா, அவரை அந்த நிலையில் பார்க்க ரொம்ப கஷ்டமா இருகிறது. மக்களுக்காக போராடுகின்றவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது. 140 நாட்கள் அவரை மீட்க முடியாமல் போனதற்கு யார் காரணம். எந்த கேள்வி எழுப்பியதற்காக அவர் காணாமல் போனாரோ அந்த கேள்விகள் எல்லாம் தற்போதும் அப்படியே தான் இருக்கிறது. 140 நாட்களாக அதற்கான பதிலை யாரும் கூறவில்லை. வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், அவர் திரும்பி வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் சித்தரிக்கப்பட்ட ஒன்று என முகிலனின் மனைவி தெரிவித்துள்ளார். இதை நீங்கள் எப்படி பாக்குறீங்க?

இந்த சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அவர் எழுப்பிய நிலையில், அதுகுறித்து இந்த அரசாங்கம் எந்த பதிலும் கூறாமல், பிரச்சனையை திசை திருப்புகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை யார் கொன்றது, அவங்க சாவுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்று மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை யாராவது எழுப்பினால், அவர்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாலியல் குற்றச்சாட்டுகளை நாம் பேசி தீர்வு காண முடியாது. சம்பந்தபட்டவர்கள் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும். இப்படி எல்லாம் குற்றச்சாட்டு வைத்து முகிலனை கைது செய்யமுடியும் என்றால், பொள்ளாட்சி விவகாரத்தில் இந்த அரசாங்கம் என்ன செய்தது என்று நாம்தான் பார்த்தோமே. அரசாங்கத்தோட சுறுசுறுப்பு எப்படி இருந்துதுன்னு நாடே பார்த்ததே. மக்கள் எல்லாம் போராட்டம் நடத்தித்தானே குற்றவாளிகளை கைது செய்தார்கள். துடியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது என்ன நடவடிக்கை எடுத்தாங்க. ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் நமக்கு என்ன பதில் கிடைத்துள்ளது.

 

thirumurugan gandhi speaks about mugilan issue


சமூகத்துக்கு ஆதரவாக போராடுபவர்களின் மீது தொடர்ந்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு சம்பந்தபட்ட நபர்கள் தான், பேசி விவாதிக்க வேண்டும். குற்ற வழக்காக வேண்டுமானால் அதனை பதிவு செய்யுங்கள். எங்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில், இருக்கு. இந்த வழக்கை பத்தி விசாரிக்கிறீங்களா? விவாதம் செய்கின்றீர்களா? முகிலனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கேட்டதற்காக என்மீது ஒரு  வழக்கு போட்டு இருக்காங்க. இது விவாதம் ஆனதா, இல்லை.  காவிரி உரிமையை பத்தி பேசியதற்காக வழக்கு போட்டு இருக்காங்க, இது விவாதம் ஆச்சா? இல்லை. என்மீது 48 வழக்குகள் போட்டுள்ளார்கள். இதுகுறித்து எந்த விவாதமும் எழவில்லை. இப்படி நீங்க போடும் அனைத்து வழக்குகளையும் விவாதம் ஆக்குங்க. முகிலன் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது, அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா, அவர் தரப்பை கேட்காமலே அவரை குற்றவாளியாக ஆக்கிவிடுவீர்களா? அவர் மேல்தான் தவறு உள்ளது என்று சமூக வலைதளங்களிலேயே பேசி முடித்துவிடுவீர்களா என்ன? அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்வதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கா. வாய்ப்பே இல்லை என்கிற போது நீங்களே விவாதித்து நீங்களே எப்படி முடிவு செய்வீர்கள். வழக்கு போடுங்கள், அதை நீதிமன்றத்தில் அவர் சந்திப்பார். ஆனால் மக்கள் பிரச்சனையில் அவர் கேட்ட கேள்விக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

முகிலனை கைது செய்து அழைத்துக்கொண்டு போதும்போது என்னை கடத்தி சென்றார்கள், மனதளவில் கொடுமைப்படுத்தினார்கள் என்று கூறியுள்ளார். இதை எப்படி பாக்குறீங்க?

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பாதிக்கப்பட்ட நபர் சொல்கிறார் தான் கடத்தப்பட்டதாக. இதுகுறித்து ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்றால், இல்லை. இது எவ்வளவு அதிர்ச்சியான ஒரு சம்பவம். நான்கு மாதமாக அவரை நீங்களே கண்டுபிடிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் கூறாமல், பாலியல் குற்றச்சாட்டு வழக்கைத்தான் நான் எடுப்பேன் என்றால், இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகம் வருமா வராதா?


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்