Skip to main content

 எஸ்.பி.க்கு கார், அவரது இரண்டு மனைவிகளுக்கு டிசைன் டிசைனாக அள்ளிக் கொடுத்த முருகன்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ஆம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். 
 

இந்தநிலையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், சுரேஷ் என்ற கொள்ளையன் செங்கம் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். சுரேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சுரேஷ் பல தகவல்களை சொல்லியுள்ளான் என்று தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

murugan



திருச்சி தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் கூறியபோது, முருகன் கொள்ளையடித்து வரும்போதெல்லாம் திருவாரூர் போலீசார் சிலருக்கு பணம், நகைகளை வழங்கி, அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளான். இதனால் அவன் மேல் திருவாரூரில் எந்த வழக்குகளும் இல்லை. 
 

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் எஸ்.பி.யாக இருந்த ஒருவருக்கு முருகன் நெருக்கமாக இருந்துள்ளான். எஸ்.பி. குடும்பத்தினருடனும் நெருக்கமாக பழகிய முருகன், அவருக்கு ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அந்த எஸ்.பி.க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு விரும்பிய நகைகளை டிசைன் டிசைனாக முருகன் வாங்கி கொடுத்துள்ளான். இருப்பினும் முருகனை விசாரணை செய்ததால்தான் மேலும் உண்மைகள் வெளிவரும்.


 

 

இந்த கும்பலிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற அவர், இந்த கொள்ளை கும்பல் மதுரையில் உள்ள நகைக்கடையில் கொள்ளை, பஞ்சாப் நேஷ்னல் பேங்க் நகைக்கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது என்று தெரிவித்தனர். 



 

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.