Skip to main content

"ஆளுநர் மாளிகை என்பது கிண்டியில் உள்ள கமலாலயம்; எதையும் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள்..." - ராம. சுப்பிரமணியம் தடாலடி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

கத

 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேவையற்ற காலதாமதம் செய்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த அதிரடியான பதில் வருமாறு,


ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரின் விடுதலையில் காலம் தாழ்த்தி முடிவெடுக்காமல் விட்டதால் தமிழக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே? அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அவர்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டார்கள், இந்த விஷயத்தில் அவர்கள் இரட்டை நிலையை எடுத்துள்ளார்கள். அவர்களை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அந்த தினத்தில் மத்திய அரசின் சார்பில் எந்த வழக்கறிஞரும் செல்லவில்லை என்று இலங்கையிலிருந்து வரும் ஒரு பத்திரிகையில் எடிட்டோரியலில் செய்தி வந்துள்ளது. இந்தப் பிரச்சனைகளைப் பற்றி எப்போது அவர்களிடம் பேசினாலும் நாங்கள் அவர்களின் விடுதலையை எதிர்ப்போம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பலமுறை தெரிவித்துள்ளார்கள். ஆனால் சரியான முறையில் இந்த வழக்கில் அவர்களால் ஆஜர் ஆகக்கூட முடியவில்லை. அப்பட்டமாக இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் மத்திய பாஜக அரசு. 

 

ஆனால் இந்தத் தீர்ப்பில் ஆளுநர் என்ன செய்யக்கூடாது என்பதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வாயிலாகப் புரிய வைத்துள்ளார்கள். மாநில அரசு ஒரு முடிவெடுத்து ஆளுநருக்குக் கோரிக்கைகளை அனுப்பி வைத்தால் தேவையற்ற கால தாமதம் செய்யக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாகப் பேரறிவாளன் விவகாரத்தில் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். ஆளுநர் எல்லாம் இதைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை; துடைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆளுநர் மாளிகை கமலாலயம் போல் இருப்பதாகத்தான் தெரிகிறது. கேரளாவில் இதுதான் நடந்தது. மேற்கு வங்கத்தில் முயற்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை. தற்போது இல.கணேசன் இருக்கிறார், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

 

நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கிறார். அவர் என்ன கூறுகிறார், என்னைக் கண்டால் தெலுங்கானா அரசு நடுநடுங்குகிறது என்கிறார். ஒரு அரசாங்கத்தை நடுங்க வைக்கத்தான் ஆளுநர் செல்வார்களா? அரசுடன் ஒத்துழைப்பு தந்து ஆட்சியைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லாமல் வாக்களித்த மக்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், உபத்திரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செயல்படக்கூடாது. 

 

இரட்டை வேடத்தை எத்தனை நாளைக்கு அவர்கள் போட முடியும். பாஜகவைத் தவிர எந்த மாநிலத்திலும் யாரும் நிம்மதியாக ஆட்சி நடத்தி விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்த மாதிரியான அரசியல் விளையாட்டுகளை நடத்தி வருகிறார்கள். இதை எந்த சுயச்சார்பு உள்ள மாநிலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களையும் அரசியல் கட்சியினரையும் இவர்கள் எந்த அளவுக்கு முட்டாளாக நினைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. யாரைப் பற்றியும் கவலை இல்லை, நாங்கள் நன்றாக இருந்தால் சரி என்ற கோணத்தில் இவர்கள் செயல்படுவது நீண்ட நாட்களுக்கு நடக்காது. மக்கள் இவர்களுக்குப் பதில் கூறுவார்கள்.

 

 

Next Story

ஆளுநரின் துப்பறியும் கதை; அப்செட்டில் அமித்ஷா!

Next Story

பிரதமர் மோடியின் ‘5டி’ ; முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள் - ராம சுப்ரமணியன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ramasubramanian | Cmstalin | Cmstalin speech | Modi |

 

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பாட்காஸ்ட் மூலம் மக்களிடம் பல்வேறு அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசி வருகிறார். அதில், பாஜக ஆட்சி பற்றியும் பேசி தனது இரண்டாவது ஆடியோ பாட்காஸ்டை வெளியிட்டார். இது குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

இந்தியா முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து பேசுபொருளாகியுள்ளது என்பது உண்மை. மேலும், ஆடியோவில் சொல்லப்படும் விசயங்கள் இந்திய மக்களிடையே சேர்கிறது என்ற கவலை பாஜகவிடம் உருவாகியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வை குறிவைக்க முயல்கின்றனர். ஸ்டாலின் பேசிய ஆடியோ ‘நீங்கள் சொன்ன மகளிர் உரிமைத் தொகை வந்துவிட்டது... ஆனால், மோடி அவர்கள் தெரிவித்த 15 லட்சம் வரவில்லை’ என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அடுத்து, குஜராத்தை வளமாக மாற்றுவேன் என்று கூறிய பொய் பிம்பங்களை பற்றியும் முதல்வர் பேசியுள்ளார். 

 

இதற்குப் பல ஆண்டுகள் முன்பு மோடி அறிவித்த, 5டி- வளர்ச்சியாக திறமை, பாரம்பரியம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்வர் சொல்கிறார், ‘5டி-க்கு பதில் 5சி, வகுப்புவாதம், ஊழல், கார்ப்பரேட் முதலாளித்துவம், ஏமாற்றுதல் மற்றும் குணநலன் படுகொலை தான் இருக்கிறது’ என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணியைக் கண்டு சிலர் அஞ்சியுள்ளனர். தொடர்ந்து, சிஏஜி அறிக்கையின் 7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசினால் பயம் வந்துவிடும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

இதன் தொடர்ச்சியாக, அயோத்தி திட்டத்தில் கோவில் கட்ட இடம் வாங்கியதில் குளறுபடி, நடுத்தர வர்க்கத்தினரை விமானத்தில் அழைத்து செல்லும் ‘உடான்’ திட்டத்தின்படி தமிழகத்தில் சேலத்தை தவிர பிற அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. சினிமாவில் வரும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போலத்தான் ரயில்வேயிலும் செலவுகள் கூடியுள்ளது. தொடர்ந்து, ஓய்வூதிய திட்ட நிதிகளை எடுத்து விளம்பரங்களுக்கு செலவிட்டது. சுங்கவரியை சிலரிடம் வசூலிக்காமல் விட்டது. அதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் கடிதம் அனுப்பியது முதல் பாரத்மாலா திட்டத்திலும் நிறைய சிக்கல் உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார். பின்பு, துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் 1270% நிதி உயர்ந்தது என்றும் கூறியுள்ளார். 

 

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலும், இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது, ஒரே தொலைப்பேசியை வைத்து பல சிகிச்சைகளை பெற்றது. ஒரே ஆதார் எண்ணில் பல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை தகவலையும் ஸ்டாலின் எடுத்து சொல்லி ‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இ.ந்.தி.யா. கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். மேலும், ஊழலின் உறைவிடமாக பாஜக இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலும், பத்திரிகைளிலும் கூட பேசுவதில்லை என ஆதங்கத்துடன் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, முதல்வரின் இந்த பேச்சு இந்திய மக்களை சென்றடையும் என்பதே எனது கருத்து.

 

இந்த சுங்கவரி உயர்வு குறித்து, நக்கீரன் களத்திற்குச் சென்று நிலவரத்தை தெரிந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்தது. இதேசமயம், சிஏஜி அறிக்கை குறித்து  பாஜக, ‘இந்த அறிக்கை எல்லா காலத்திலும் வரக்கூடியது தான். திட்டங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு தான் செயல்படுத்தும்’ எனக் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. போன்றவர்கள் ‘இந்த முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்துள்ளது’ எனத் தக்க பதிலையும் அளித்தனர். எனவே, எந்த குற்றச்சாட்டையும் பாஜக மீது வைக்க முடியாது என்றதும் பின்னர் வந்த சிஏஜி அறிக்கையும், மு.க. ஸ்டாலின் கூறிய கருத்தும் பாஜகவினரை அச்சமடைய வைத்துள்ளது என்பது உண்மை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...