Skip to main content

"அரசியல்வாதிகளுக்கு தேர்வு வையுங்கள்... பார்த்து எழுதினால் கூட வெற்றிபெற மாட்டார்கள்.." - சீமான் தடாலடி!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

jkl


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் குறித்து பேசினார். அவரின் பேச்சு பின்வருமாறு, " இன்று டெல்லியில் நடைபெறும் போராட்டம் என்பது ஒட்டுமொத்த குடிமக்களுக்குமான பிரச்சனையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த விவசாயச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய விலையேற்றத்தை, மிக பெரிய உணவுப் பஞ்சத்தை நம் நாட்டு குடிகள் சந்திப்பார்கள். மிக அத்தியாவசியமான உணவுப்பொருட்களை, அத்தியாவசியமான உணவுப்பொருள் அல்ல என்று இந்தச் சட்டம் அறிவிக்கிறது. அப்படி என்றால் ஒரு முதலாளி மக்களுக்குத் தேவையான பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த முடியும். ஒரு கிலோ தக்காளியை 500, 1000 என்று கூட விற்பனை செய்ய இந்தச் சட்டம் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. எனவே இதை போராடுகிற விவசாயிகளின் பிரச்சனையாக கருதாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சனையாக கருத வேண்டும். வேளாண்மையைச் சார்ந்துதான் ஒட்டுமொத்த உலக குடிகளும் வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் வாழ்க்கையை இருட்டாக்குவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. வேளாண்மை பாதிக்கிறது என்றால் அதை நாட்டு பாதிப்பாக கருத வேண்டுமே தவிர, போராடுகிறவர்களின் பாதிப்பாக கருதக் கூடாது. 

 

இந்த கரோனா பாதிப்புக்குத் தடுப்பூசி ஒன்றை தற்போது இந்தியாவில் போடுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற நாடுகளில் எல்லாம் அந்தெந்த நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் தடுப்பூசிகளைப் போட்டு மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள். இந்தியாவில் அந்த முறையை பின்பற்றலாமே? பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாமே? அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் உயிர் என்பது மிக முக்கியமான ஒன்றுதானே? அல்லது நிர்மலா சீதாராமனாவது ஊசி போட்டுக்கொள்ளட்டும். இல்லையென்றால் மருத்துவதுறை அமைச்சராவது போட்டுகொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள். இதை செய்ய ஏன் தயங்குகிறீர்கள். எதற்கெடுத்தாலும் மாணவர்களுக்குத் தேர்வு வைக்கிறீர்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏன் எந்தத் தேர்வும் வைக்கமாட்டேன் என்கிறீர்கள். அவர்கள் மக்களால் தேர்வு செய்து பதவியில் வருவார்கள் என்றால் தேர்வில் வெற்றிபெற்றால்தான் முடியும் என்ற நிலையைக் கொண்டு வாருங்கள். அமித்ஷா, மோடி உள்ளிட்டவர்கள் தேர்வெழுத்தட்டும். நானும் தேர்வெழுதுகிறேன். வெற்றிபெறவில்லை என்றால் வெளியேறுகிறேன். இதற்கு அரசு ஒத்துக்கொள்ளுமா? பலபேர் பார்த்து எழுதினால் கூட தேர்வில் வெற்றிபெற மாட்டார்கள். 

 

நாட்டில் உள்ள அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அரசு என்ன செய்ய இருக்கிறது என்று தெரியவில்லை. ரயில், துறைமுகம், விமான நிலையம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு, இவர்கள் எதை சாதிக்க இருக்கிறார்கள். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தால் இவர்களால் இவ்வாறு சிந்திக்க முடியுமா? மக்களிடம் 28 சதவீதம் வரியை வாங்கிங்கொண்டு நீங்கள் எதை நிர்வகிக்கிறீர்கள், ஒன்றும் இல்லை. உங்களை மாதிரியான ஊடகவியலாளர்கள்தான் என்னை மொழி வெறியன், இன வெறியன் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் என்னுடைய ஊர் தளவாடியில் இருக்கின்ற தமிழ் பலகையை ஒருவர் வந்து அழித்துவிட்டு செல்கிறார் என்றால் அதை எப்படி பார்த்துக்கொண்டு இருப்பது. இதை ஏன் எந்த ஊடகமும், தேசிய சிந்தனை கொண்ட ஒருவரும் கண்டிக்கவில்லை. மான உணர்வு, இன உணர்வு செத்துப் போய் விட்டதா? அதையே நாங்கள் செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள். இன வெறியன் என்ற ஒற்றைச் சொல்லில் எங்களை அடக்கப் பார்ப்பீர்கள். அவர்களுக்கு வந்தால் அது சொறி சிரங்கா? எங்களுக்கு வந்தால் இன வெறியா? இதில் நியாயம் இருக்கிறதா, கூறுங்கள். இதற்கு எதிர்வினை ஆற்றுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் இருப்பதே, பிறந்ததே அதற்குத்தான். அன்புன்னா அன்பு, வம்புன்னா வம்பு. வெட்ட வரும்போது விழுந்து கும்பிடுகிற ஆள் நான் கிடையாது, வெட்ட வேண்டும் என்று நினைக்கின்ற போதே வெட்டி முடித்துவிடும் ஆள் நான், எனவே எங்களிடம் ஆட்டம் காட்டாதீர்கள்" என்றார்.

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்