Skip to main content

பசியால் அழுகின்றக் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல... கண்ணீரில பொம்மை விற்பனையாளர்கள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

கரோனா பெருந்தோற்று தொடங்கிய நாள் முதலே ஒட்டு மொத்த மக்களையும் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கூலி வேலை கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அவல நிலையும் இருந்தது. சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழைய நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

 

தமிழகம் முழுவதும் திருவிழாக்களில் பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள், பொம்மைகள் விற்பனை செய்யும் நரிக்குறவர்களின் நிலை ரொம்பவே பரிதாபமாக உள்ளது. ரூபாய் 5 வட்டி, ரூபாய் 10 வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கும் போது, கோயில் திருவிழாக்கள் ரத்து என்ற அறிவிப்பு இவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் பாசி, மணி விற்கும் நரிக்குறவர் மக்கள் வாங்கியக் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள்.

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகரில் வசிக்கும் உமா, ரகு போன்ற பலரும் நம்மிடம், "எங்கள் வாழ்வாதாரம் பலூன், பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள் விற்கிறது தான். நாங்கள் கட்டும் மாலை தான் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் பக்தர்களும் மாலையாக போடுவாங்க. நாங்க யாரையும் ஏமாற்றி பிழைக்க மாட்டோம். திருவிழா நேரங்கள்ல வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி கோயில்ல வித்துட்டு உடனே கடனையும் வட்டியும் திருப்பிக் கொடுப்போம். அதனால எங்கள் நாணயத்தைப் பார்த்து அடுத்த முறையும் பணம் கேட்டால் கொடுப்பாங்க.

 

ஆனா கஜா புயல் வந்து மொத்தமா எல்லாத்தையும் அழிச்சது. அடுத்து போன வருசம் கரோனா வந்து அழிச்சது. எங்க ஊர்ல மட்டும் 100 பேர் வியாபாரம் செய்றோம். ஒவ்வொருத்தரும் ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்கிப் பொருள் வாங்கி வந்து, திருவிழா இல்லாம வீட்டுக்குள்ளேயேக் கிடந்தது. இந்த வருசமாவது திருவிழா இருக்கும்னு மறுபடியும் கடன் வாங்கிப் பொருள் வாங்கி முடிச்சு 2 திருவிழா வியாபாரம் முடியும் போது திருவிழாவை நிறுத்திட்டாங்க. பொருள் எல்லாம் மூட்டையா கட்டி வீட்டுக்குள்ள கிடக்குது. வாங்கின கடனை கேட்டு கடன் கொடுத்தவங்க கேட்கும் போது பதில் சொல்ல முடியாம ஓடி ஒழியுறோம். ஒருவேளை  சோத்துக்கு தொட்டுக்கக் காய்கறி வாங்க காசு இல்லாமப் போச்சு.

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

வாங்கினக் கடனை அடைக்க முடியல. நாங்க ரேசன் அரிசியால பசியாறினாலும் எங்க குழந்தைங்க பசியால அழும் போது பால் வாங்கிக் கொடுக்க காசு இல்லாம நாங்களும் சேர்ந்து அழுறோம். கரோனாவுல சாகுறதைவிட பசியால செத்துடுவோம் போலிருக்கு. இதையெலலாம் பார்க்கும் போது கரோனா வந்து எங்கள ஒரேயடியா கொன்னுட்டாலும் சரினு தோனுதுய்யா.. எங்களைப் போல அன்றாடம் பிழைப்புக்காக பலூன் விக்கிற நரிக்குறவர் கூட்டத்தைப் பார்க்க யாருக்கும் மனசு வரல. எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்கய்யா.. எங்களுக்கும் இந்த அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி நிவாரணம் கொடுத்தால் எங்க குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்போம். இல்லன்னா பசி நோயாலயே செத்துடுவோம்" என்றனர்.

 

இது போன்ற சிறு சிறு வியாபாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பினால் அவர்களையும் காப்பாற்றலாம். 


 

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.