Skip to main content

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை! சட்டமன்றத் தேர்தல் நடக்குமா?

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

                                         

election commission of india

                                

காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? எனக் குழம்பிப் போயிருந்த அரசியல் கட்சிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளன. அதேசமயம், இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்பாத நிலையில், அடுத்த வருடம் நடக்க வேண்டிய சட்டமன்றத் தேர்தலும் தள்ளிப்போகுமோ? என்கிற கேள்விகள் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 
                           

திமுக எம்.எல்.ஏ.க்கள் குடியாத்தம் காத்தவராயன், திருவெற்றியூர் கே.பி.பி.சாமி ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரியில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். ஜூன் மாதம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன், கரோனா தாக்கத்தால் உயிரிழந்தார். இதனால் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கண்ட 3 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
                         

எம்.எல்.ஏ. இறந்துபோனால் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் தொகுதிகளுக்கு ஆகஸ்டிலும், திருவல்லிக்கேணிக்கு டிசம்பரிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 
                         

கரோனா நெருக்கடிகளால் பொது முடக்கம் அமலில் இருக்கும் சூழலில், இடைத்தேர்தல் நடக்குமா? என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் எதிரொலித்தபடி இருந்தது. ஆனால், தேர்தல் விதிகளின்படி, பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையே ஒரு வருட காலம் மட்டுமே இருந்தால் இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. ஒரு வருடத்திற்கு அதிகமான நாட்கள் இருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். 
                          

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தைப் போலவே உத்தரப்பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளும், மத்தியபிரதேசம், பீகார், அசாம், கேரளா மாநிலங்களில் தலா 1 தொகுதியும் காலியாக இருக்கிறது. அதனால், பொதுத்தேர்தலுக்கு ஒரு வருட காலம் இல்லாத மாநிலங்களில் ஆகஸ்டில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம். 
                            

இந்த நிலையில், "இடைதேர்தல் நடத்த வேண்டிய சூழலில், கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்தபடி இருக்கிறது. இதனால் தமிழகம், பீகார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. மக்களின் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை" எனத் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கரோனா நெருக்கடிகளை முன்னிறுத்தி தமிழகத்தில் நடத்த வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தலையும் தள்ளிவைத்து விடுவார்களோ? அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிவிப்பா? என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.