Skip to main content

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய எதிர்ப்பு இருந்ததா? செம்மலை பதில்

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

அமமுக தலைமை மீது கடும் விமர்சனம் செய்த தங்க தமிழ்செல்வன், தனக்கு ரெஸ்ட் தேவை, சில காலம் அமைதியாக இருக்கப்போகிறேன் என்று மீடியாக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். 


  thanga tamilselvan mkstalin-Semmalai-mla


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ செம்மலை. 
 

அமமுக தலைமையை பிடிக்காதவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுகவில் இணைகிறார்களே?
 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுகவினுடைய மக்கள் செல்வாக்கு என்ன என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அமமுகவுக்கு டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள், தினகரன் கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பார். நாம்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்போடு சென்றார்கள். கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பதாக சொல்லி நம்ப வைத்தார் தினகரன். 
 

இப்பொழுது 18 சட்டமன்ற உறுப்பினர்களை பலிகாடாவாக்கி, தான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொண்டு, அவரை நம்பி வந்தவர்களை ஏமாற்றிவிட்டார். அமமுகவை ஒரு அமைப்பாக நடத்திய அவர் தேர்தல் ஆணையத்தில் அதை பதிவு செய்ய இருக்கிறேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியபோதுதான் அவரை அவர் பின்னால் சென்றவர்கள் நம்பவில்லை. 
 

டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள், அவர் மீது நம்பிக்கையை இழந்து இன்றைக்கு அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், அதிமுகவைவிட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்துகொள்ளலாம் என்று அறிக்கையும் விட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில்தான் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுகவில் மீண்டும் வந்து இணைந்து கொண்டுள்ளார்கள். 
 

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்திருக்கிறார் என்றால், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே அமமுகவினர் அதிமுகவில் இணைவதற்கு எந்த தடையும் இல்லை. இணைந்து எப்பொழுதும் கட்சி பணிகளை ஆற்றலாம். 
 

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வளர்ச்சிக்கு தங்க தமிழ்செல்வன் தடையாக இருப்பார் என்பதால் அதிமுகவில் இணைய அவருக்கு தடை இருந்ததாக கூறுகிறார்களே?
 

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவதற்கு எதிர்ப்பு இருந்தது என்பதெல்லாம் உண்மையல்ல. அவராக அவரது விருப்பப்படி திமுகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவுக்கு வருவதற்கு அவருக்கு யாரும் தடைவிதிக்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவர் தாரளமாக வரலாம். அதை தலைமை முடிவு செய்யும் என்று சொல்லியிருந்தார். ஆனால் தங்க தமிழ்செல்வன் எங்களுடைய தலைமையை அணுகி கேட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்கும்போது அவர் அதிமுகவில் இணைய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மையல்ல. இவ்வாறு கூறினார். 



 

 

 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.