Skip to main content

புகழேந்தியும் அமமுகவில் இருந்து வெளியேறுவார்... தினகரனால் கட்சியை நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத் 

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

அமமுக தலைமை மீது கடும் விமர்சனம் செய்த தங்க தமிழ்செல்வன், தனக்கு ரெஸ்ட் தேவை, சில காலம் அமைதியாக இருக்கப்போகிறேன் என்று மீடியாக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.


 

இதுதொடர்பாக நம்மிடம் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் அரசியல் விமர்சகரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத்.
 

அமமுக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிற்கிறது. சரிவின் விரிவில் நிற்கிறது. அதனுடைய அழிவை யார் நினைத்தாலும் இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு கொள்கை சார்ந்த அமைப்பாக அதனை கட்டி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியினுடைய தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இதுவரைக்கும் சிந்திக்கவில்லை. ஒரு மிகப்பெரிய தோல்வியை தமிழ்நாட்டில் பெற்ற பிறகுகூட இந்த தோல்விக்கான காரணம் என்னவென்று இதுவரைக்கும் அவர் யோசிக்கவில்லை. டிடிவி தினகரனால் அமமுகவை நடத்துவதற்கு முடியாது. காலப்போக்கில் அந்த கட்சி கல்லறைக்கு போய்விடும்.

 

thanga tamilselvan mkstalin-ttv-nanjilsambath


 

சில நிர்வாகிகள் செல்வதால் இந்த இயக்கம் போய்விடாது. நடந்து முடிந்த தேர்தலில் 3வது இடத்தை பிடித்துள்ளோம். வாக்களித்த அனைத்து தொண்டர்களுமா சென்றுவிட்டனர் என்கிறாரே புகழேந்தி...
 

செந்தில் பாலாஜி ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கரூர் மாவட்ட அரசியலை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர். அந்த மாவட்டத்தில் திமுக ஜாம்பாவனாக இருக்கிற அண்ணன் கே.சி.பி.யை எதிர்த்து அரவக்குறிச்சியில் வாகை சூடியவர். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றதால் கரூர் மாவட்டத்தில் அமமுக இன்று அஸ்தமனத்தை சந்தித்திருக்கிறது. 


 

அதனைத் தொடர்ந்து தங்க தமிழ்செல்வன். எம்பியாக இருந்தவர். ஆண்டிப்பட்டி எம்எல்ஏவாக இருந்தவர், அந்த மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். அவருக்கு பின்னால் இன்று பல சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் சென்றுள்ளனர். இவர்கள் போவதால் எந்த இழப்பும் இல்லை என்று சொல்வதை எப்படி நம்ப முடியும். 
 

அமமுகவில் இருந்து வருபவர்களை வரவேற்று ஆர்வத்துடன் திமுக சேர்த்துக்கொள்வது புரியவில்லை. அமமுகவை ஒழிக்கலாம், அழிக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது புரியவில்லை என்கிறாரே புகழேந்தி...
 

அவருடைய உள்ளத்தில் இருப்பது ஒன்று. உதட்டில் இருப்பது ஒன்று. அவரும் அங்கே இருக்க முடியாது. இயங்க முடியாது. அவரும் வெளியேறிவிடுவார். 
 

அமமுகவில் இருப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர்கள். அமமுக தலைமை பிடிக்கவில்லை என்றால் அதிமுக செல்லாமல், திமுகவுக்கு ஏன் வருகிறார்கள்... 
 

அதிமுக தற்போது தாய் கழகமாக இல்லை. பிஜேபி என்கிற கட்சியின் அடிமையாக பேய் கழகமாக மாறி வருகிறது. அதனால் அங்கு செல்ல விரும்பாமல் திமுகவுக்கு வருகின்றனர். 


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்