Skip to main content

“இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது...” -தமிமுன் அன்சாரி

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி, நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தியை பிரமராக்குவோம் என்ற முழக்கத்தோடு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
 

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சந்தித்தார். 

 

thamimun ansari


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் தமிமுன் அன்சாரி, 
 

மனிதநேய ஜனநாயக கட்சி வளரும் கட்சிகளில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் நாங்கள் எடுத்திருக்கக் கூடிய கொள்கை முடிவு மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எங்களின் மக்கள் செல்வாக்கை இதன் மூலம் கூடுதலாக பெருக்கியிருக்கிறோம் என்று நம்புகிறோம். 
 

எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தெரிவித்துவிட்டு, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை அறிவித்துவிட்டு எங்களது தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கிவிட்டனர். 
 

மிகுந்த எதிர்பார்ப்போடு பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் எங்களது அலுவலகத்திற்கு வர தொடங்கினர். இந்த நிலையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கக்கூடிய திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினை சந்தித்து எங்களது அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்துவதுடன், சில கோரிக்கைகளையும்  கொடுக்கலாம் என்று எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு முடிவு எடுத்தது. 
 

அதன்படி ஐந்து அம்ச கோரிக்கையுடன் திமுக தலைவரை சந்தித்தோம். 
 

நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைகளையும் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின்  பரிந்துரைகளையும்  அமல்படுத்துவது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, பேரறிவாளன் உள்ளிட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, நாடு முழுக்க உள்ள விசாரணை சிறைவாசிகளை விடுவிப்பது  உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை  அவரிடம் கொடுத்தோம்.
 

thamimun ansari


எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களோடு நடந்த சந்திப்பில் எங்களை வரவழைத்து, அவர்களோடும் எங்களை உரையாட செய்து சிறப்பு செய்தார். இது எங்கள் மீது அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காட்டக்கூடியதாக இருக்கிறது. 
 

மேலும், திமுக தலைவரின்  முன்பாக நாங்களும் காங்கிரஸ் தலைவர்களும் உரையாடியபோது நிபந்தனையற்ற முறையில் மனிதநேய ஜனநாயக கட்சி அவர்களுக்கு அளித்த ஆதரவை துணிச்சலான மற்றும்  சிறப்பான முடிவு என்று பாராட்டினார்கள். 
 

தமிழகமெங்கும் மஜகவினர் கொடிகளோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாக திமுக தலைவர் கூறியபோது, கள நிலவரத்தை அவர் எவ்வாறு கூர்ந்து கவனிக்கிறார் என்பதை உணர முடிந்தது.
 

புதுச்சேரி உட்பட, தேர்தல் நடைபெறும்40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி உறுதி என்று கூறி வந்தோம். நாளுக்கு நாள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அலை வீசுவதை பார்க்கிறபோது 40 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்பது  உறுதியாகியிருக்கிறது. 
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளின் வெற்றிதான் இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கப்போகிறது. 
 

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கினால் நாட்டின் ஜனநாயகம் நாசமாகிவிடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. 
 

நாட்டின் எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை புகுத்தி தேர்தல் ஆணையம், நீதிமன்றம், மத்திய புலனாய்வு துறை , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சுதந்திரமான அமைப்புகளையெல்லாம் நாசப்படுத்திவிட்டார்.
 

இதையெல்லாம் நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். 
 

இந்த தேர்தலில் ராகுல்காந்தி தேசிய அளவில் ஒரு அரசியல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அவரது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாஜகவினர் திணறுவதை பார்க்க முடிகிறது. 
 

300 இடங்களில் மதசார்பற்ற மற்றும் , சமூக நீதி சார்ந்த கட்சிகளின் வெற்றி உறுதிப்படும் என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை நாட்கள் செல்ல செல்ல இன்னும் உயரலாம்.
 

இவ்வாறு கூறிய அவரிடம் கீழ்கண்ட கேள்விகளை தொடுத்தோம்.

 

kamal haasan


நிலையான ஆட்சிக்கும், இந்திய பாதுகாப்புக்கும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே? 
 

எடப்பாடி யாரை நினைத்து நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். அவருடைய் உள்மனம் ஒன்று பேசுகிறது. அவருடைய வெளிப்பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது. மோடியால் தாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்பதை முழுமையாக உணர்ந்தவர் அவர். இப்போது அவர் பேசுவதெல்லாம், தன் மனசாட்சிக்கு விரோதமாகத்தான் என்பதை அவரோடு இருப்பவர்களே அறிவார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டினோம். கேட்கவில்லை. இப்போது தேர்தல் பரப்புரைகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரிதாபமான  நிலையை நினைத்து  உண்மையிலேயே வருத்தப்படுகிறோம். 
 

40 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லையே? 

கமல்ஹாசனுடைய கலைத்துறை பயணம் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதே சமயம் இந்த தேர்தலோடு அவருடைய அரசியல் பயணம் நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எதையோ பெரிதாக எதிர்பார்த்து  வந்து, இப்போது ஏமாற்றத்தில் அவர் இருப்பது புரிகிறது.

கருப்புக்குள் காவி எனப் பேசி, தடம் மாற்றத்தில் தொடங்கி இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.