Skip to main content

“இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது...” -தமிமுன் அன்சாரி

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி, நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தியை பிரமராக்குவோம் என்ற முழக்கத்தோடு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
 

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சந்தித்தார். 

 

thamimun ansari


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் தமிமுன் அன்சாரி, 
 

மனிதநேய ஜனநாயக கட்சி வளரும் கட்சிகளில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் நாங்கள் எடுத்திருக்கக் கூடிய கொள்கை முடிவு மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எங்களின் மக்கள் செல்வாக்கை இதன் மூலம் கூடுதலாக பெருக்கியிருக்கிறோம் என்று நம்புகிறோம். 
 

எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தெரிவித்துவிட்டு, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை அறிவித்துவிட்டு எங்களது தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கிவிட்டனர். 
 

மிகுந்த எதிர்பார்ப்போடு பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் எங்களது அலுவலகத்திற்கு வர தொடங்கினர். இந்த நிலையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கக்கூடிய திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினை சந்தித்து எங்களது அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்துவதுடன், சில கோரிக்கைகளையும்  கொடுக்கலாம் என்று எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு முடிவு எடுத்தது. 
 

அதன்படி ஐந்து அம்ச கோரிக்கையுடன் திமுக தலைவரை சந்தித்தோம். 
 

நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைகளையும் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின்  பரிந்துரைகளையும்  அமல்படுத்துவது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, பேரறிவாளன் உள்ளிட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, நாடு முழுக்க உள்ள விசாரணை சிறைவாசிகளை விடுவிப்பது  உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை  அவரிடம் கொடுத்தோம்.
 

thamimun ansari


எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களோடு நடந்த சந்திப்பில் எங்களை வரவழைத்து, அவர்களோடும் எங்களை உரையாட செய்து சிறப்பு செய்தார். இது எங்கள் மீது அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காட்டக்கூடியதாக இருக்கிறது. 
 

மேலும், திமுக தலைவரின்  முன்பாக நாங்களும் காங்கிரஸ் தலைவர்களும் உரையாடியபோது நிபந்தனையற்ற முறையில் மனிதநேய ஜனநாயக கட்சி அவர்களுக்கு அளித்த ஆதரவை துணிச்சலான மற்றும்  சிறப்பான முடிவு என்று பாராட்டினார்கள். 
 

தமிழகமெங்கும் மஜகவினர் கொடிகளோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாக திமுக தலைவர் கூறியபோது, கள நிலவரத்தை அவர் எவ்வாறு கூர்ந்து கவனிக்கிறார் என்பதை உணர முடிந்தது.
 

புதுச்சேரி உட்பட, தேர்தல் நடைபெறும்40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி உறுதி என்று கூறி வந்தோம். நாளுக்கு நாள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அலை வீசுவதை பார்க்கிறபோது 40 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்பது  உறுதியாகியிருக்கிறது. 
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளின் வெற்றிதான் இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கப்போகிறது. 
 

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கினால் நாட்டின் ஜனநாயகம் நாசமாகிவிடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. 
 

நாட்டின் எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை புகுத்தி தேர்தல் ஆணையம், நீதிமன்றம், மத்திய புலனாய்வு துறை , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சுதந்திரமான அமைப்புகளையெல்லாம் நாசப்படுத்திவிட்டார்.
 

இதையெல்லாம் நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். 
 

இந்த தேர்தலில் ராகுல்காந்தி தேசிய அளவில் ஒரு அரசியல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அவரது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாஜகவினர் திணறுவதை பார்க்க முடிகிறது. 
 

300 இடங்களில் மதசார்பற்ற மற்றும் , சமூக நீதி சார்ந்த கட்சிகளின் வெற்றி உறுதிப்படும் என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை நாட்கள் செல்ல செல்ல இன்னும் உயரலாம்.
 

இவ்வாறு கூறிய அவரிடம் கீழ்கண்ட கேள்விகளை தொடுத்தோம்.

 

kamal haasan


நிலையான ஆட்சிக்கும், இந்திய பாதுகாப்புக்கும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே? 
 

எடப்பாடி யாரை நினைத்து நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். அவருடைய் உள்மனம் ஒன்று பேசுகிறது. அவருடைய வெளிப்பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது. மோடியால் தாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்பதை முழுமையாக உணர்ந்தவர் அவர். இப்போது அவர் பேசுவதெல்லாம், தன் மனசாட்சிக்கு விரோதமாகத்தான் என்பதை அவரோடு இருப்பவர்களே அறிவார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டினோம். கேட்கவில்லை. இப்போது தேர்தல் பரப்புரைகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரிதாபமான  நிலையை நினைத்து  உண்மையிலேயே வருத்தப்படுகிறோம். 
 

40 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லையே? 

கமல்ஹாசனுடைய கலைத்துறை பயணம் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதே சமயம் இந்த தேர்தலோடு அவருடைய அரசியல் பயணம் நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எதையோ பெரிதாக எதிர்பார்த்து  வந்து, இப்போது ஏமாற்றத்தில் அவர் இருப்பது புரிகிறது.

கருப்புக்குள் காவி எனப் பேசி, தடம் மாற்றத்தில் தொடங்கி இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்