Skip to main content

அமித்ஷா சொன்னால் அம்மா பேசுவதாக அர்த்தமா? தமிமுன் அன்சாரி காட்டம்...

Published on 19/12/2019 | Edited on 19/12/2019



மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணி கட்சியின் தலைமையான அதிமுக மாநிலங்களவையில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதே?

 

நாங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். அவர்களின் பல அரசியல் அணுகுமுறைகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
 

இப்போது புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவை பாஜகவிடம் நிரந்தரமாக சரணடைய செய்து விட்டார்கள். இது மனசாட்சியற்ற அரசியல். 

இந்த சட்டம் குறித்து 2014 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அப்போது மோடியா? லேடியா? என ஜெயலலிதா அம்மா அவர்கள் பாஜகவுடன் நேரிடையாக மோதினார். அந்த சமயத்தில் அவர்களின் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த கருத்தை கண்டித்து பேசினார். இது மதச்சார்பற்ற நாடு. அகதிகளாக வருபவர்களிடம் பேதம் பார்க்க கூடாது என பரப்புரையில் குறிப்பிட்டார்.
 

 இன்று அம்மாவின்  கொள்கைக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கிறது.

 

thamimun ansari



 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி ஏற்கனவே பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை தமிழர்களை பொருத்தவரை கடந்த 2016ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து ஜெயலலிதா வலியுறுத்தினார். அதன்பிறகு நானும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறாரே?

 

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் இச்சட்டத்தை இவர்கள் ஆதரித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் பொன்மனச் செம்மல் MGR ன் செல்லங்கள். ஜெயலலிதா அம்மா அவர்களின் அன்பை பெற்றவர்கள்.
 

இன்று ஒரு பாதகத்திற்கு துணை போய் விட்டு, எதையாவது பேசி தப்பிக்க நினைப்பது நியாயம் தானா?  மோடியின் கருத்து தான் அதிமுக கருத்தா? அமித் ஷா சொன்னால், அம்மா பேசுவதாக அர்த்தமா?  அதிமுக தொண்டர்களை திருப்திப்படுத்த , சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என கருத வேண்டியுள்ளது.

இவர்கள் ஈழத் தமிழர்கள் விஷயத்திலாவது உறுதி காட்டி, இதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் வெளிநடப்பாவது செய்திருக்கலாமே... 


 

 

இன்று தமிழக மக்களிடமிருந்து அதிமுக அந்தியப்பட்டு நிற்கிறது. போதாக்குறைக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்ற மூளை வீங்கிகளின் உளறல்கள் அதிமுகவை மேலும், மேலும் பலஹீனப்படுத்துகிறது. 
 


பாவம் அதிமுக தொண்டர்கள். அவர்கள் குமுறுகிறார்கள். களத்தில் மக்களை சந்திப்பவர்கள் அவர்கள் தானே. பாஜகவை திருப்திபடுத்த, அதிமுகவை படுகுழியில் தள்ளக் கூடாதல்லவா...
 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்துகின்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறதே?
 

இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுதும் மாணவர்கள் கிளர்ச்சி செய்வது வரவேற்க்கத்தக்கது. அவர்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள். அவர்கள் அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கவே போராடுகிறார்கள்.
 

 JNU, ஜாமியா மில்லியா, அலிகர் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய போலீஸ் வன்முறைகள்  கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இதயத்துடிப்புகள் மாணவர்கள் தான். அவர்களின் குரல்வளையை நெறித்தால் நாடு தாங்காது.
 

மாணவர் போராட்டங்களில் ரவுடிகளை இவர்களே ஏவிவிட்டு, மாணவர் போராட்டங்களை வன்முறை களமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. ஃபாஸிஸம், சாதி, மத, மொழி பிரிவினை ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராடுகிறார்கள்.
 

 மாணவர் போராட்டங்கள் ஆட்சி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் மாணவர் போராட்டம் வலுத்துள்ளது தமிழகத்தின் கொள்கையை வெளிக்காட்டுகிறது. அவர்கள் எரிமலையாக எழுந்து குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

 

விடுமுறைகள் மூலம் அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் கூலிக்காக போராட வில்லை. கொள்கைக்காக போராடுகிறார்கள்.
 

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக அதிமுக எம்பி முகமது ஜானை ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்? 


 

 


அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜானுக்கு, சிறுபான்மை சமூகத்திற்கான ஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே MP வாய்ப்பு கிடைத்தது என்பது பலரும் அறிந்ததே. அவர் ஃபாஸிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதை, அவர் ஊர் மக்கள் விரும்பவில்லை. எனவே, ஜமாத் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியிருக்கிறார்கள். இது அவர்கள் கோபத்தின் ஒரு பகுதி மட்டுமே.
 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் திமுகவை கண்டித்து 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
 

திமுக ஒரு பலமான திராவிட கட்சி . மாநில கட்சிகளிலேயே வலிமையான முறையில் அரசியலை முன் வைக்கும் கட்சி. அதற்கு எதிராக தமிழகத்தில் பாஜக போராட்டம் நடத்தும் என்பது நகைப்புக்குரியது. மயிலும், வான்கோழியும் ஒன்றல்ல. கோடுகள்  இருப்பதாலேயே பூனைகள் புலிகள் ஆகி விட முடியாது.
 

அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்களை, அமித்ஷாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் வெல்ல முடியாது. இது ஒன்றும் உத்தரப் பிரதேசம் கிடையாது. இது தமிழ்நாடு. தந்தை பெரியார் நாடு.
 

திமுக அறிவித்துள்ள பேரணியில் உங்கள் கட்சி கலந்து கொள்ளுமா?
 

திமுகவின் முயற்சி பாராட்டத்தக்கது. திமுக  அழைப்பு கொடுத்தால், நாங்கள் அந்த பேரணியில் பங்கெடுப்போம். கொள்கை பிரச்சனைகளில் நாங்கள் தி மு க வின் நிலைபாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை ஆதரவு கொடுத்து, அவர்களோடு கைக்கோர்த்து செயல்பட்டிருக்கிறோம்.
 

தமிழக முதல்வர் உங்கள் மீது சாப்ட் கார்னர் வைத்திருப்பவர் என சொல்லப்படுகிறது. இது விஷயமாக அவருக்கு நீங்கள் ஏதாவது கோரிக்கை வைத்திருக்கிறீர்களா?
 

ஏதோ ஒரு நெருக்கடிக்கு ஆளாகி, அரசியல் சூழலுக்கு கட்டுப்பட்டு இச்சட்டத்திற்கு ஆதரவளித்து விட்டோம் என்று கூட உள்ளுக்குள் அவர்கள் கூறிக் கொள்ளலாம். சமூக நீதி, மதச்சார்பின்மை மீது மனசாட்சியுடன் அவர்களுக்கு அக்கறை இருந்தால், இவ்விரு  இச்சட்டங்களையும்  தமிழகத்தில் அமல் படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். 
 

பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர்  நிதிஷ் குமார் பீஹாரில் இதை அமல்படுத்த மாட்டோம் என்று விட்டார். நடுநிலையாக உள்ள ஒரிஸா முதல்வர் நவீன் பட் நாயக்கும் இப்படி அறிவித்து விட்டார். ஏற்கனவே வங்க புதல்வி மம்தா பானர்ஜியும், கேரள மாவீரன் பிரணாயி விஜயறும், புதுச்சேரியின்  தங்கத் தமிழர் நாராயணசாமியும் தைரியமாக அறிவித்துள்ளனர்.
 

இதை தமிழக முதல்வரிடமும்  எதிர்பார்க்கிறேன். அவர் MGR ன் சிஷ்யர், அம்மாவின் உண்மை தொண்டர் என்றால் இதை செய்ய வேண்டும். அதை தமிழ்நாடு வரவேற்கும்.


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.