Skip to main content

விநாயகர், சின்னத்தம்பி யானைகளும் அதிர வைக்கும் உண்மைகளும்..!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019


'விநாயகர்' 'சின்னத்தம்பி' இந்த பெயரை கேட்டதும் இரண்டு ஆண்களின் பெயர்கள் தானே என்று நாம் சாதாரணமாக நினைக்க கூட வாய்ப்புண்டு. ஆனால், இது மனிதர்களின் பெயர்கள் அன்று. ஒருசில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர், சின்னத்தம்பி என்ற இந்த இரண்டு யானைகளின் உரிமைப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது. அதற்கு என்ன காரணம் என்பதை நாம் அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம். அதற்கு முன்பு அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியின் தற்போதைய அவல நிலைகுறித்து காண்போம். தெற்காசியாவின் பட்டுப்பூச்சிகள் அதிகமாக வாழ்ந்த ஆனைகட்டி மற்றும் தடாகம் பள்ளத்தாக்கில் நடைபெற்றுவரும் சட்ட விரோத மண் கொள்ளையால் தற்போது மாபெரும் சுற்றுச்சூழல் நாசம் ஏற்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் முதன் முறையாக இந்த கனிமவள கொள்ளைகளை குறித்து ஆதாரங்களோடு இந்த செய்திகளை வெளியிடுகிறோம்.
 

fdgj


 

தடாகம் பள்ளத்தாக்கு:
 

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை பள்ளத்தாக்குகளான போலாம்பட்டி பள்ளத்தாக்கு, தடாகம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள்தான் நொய்யலாற்றின் ஆதாரப் பகுதியாகும். இதில் போலாம்பட்டி பள்ளத்தாக்கு ஆன்மீகம், கல்வியின் பெயரில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் மினரல் வாட்டர் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய கோவை மாநகரில் வசிக்கும் இளம்தலை முறைக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோவை மாநகரத்தின் மத்திய பகுதிகளான லட்சுமி மில்ஸ், புலியகுளம், மீனா எஸ்டேட், ராமநாதபுரம் என பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்றால், அந்தாண்டில் சங்கனூர் பள்ளத்தாக்கில் நீர் வந்திருக்கிறது என்று அர்த்தம். நொய்யல் ஆர்ப்பரித்து செல்வதற்கு இந்த சங்கனூர் பள்ளத்தாக்கின் நீரோட்டம் அதற்கு காரணமாக இருந்தது. 


செங்கல் சூளைகள்:
 

உலக அளவில் கட்டுமானத்திற்கு மிக தேவையான பொருளாக விளங்கிவரும் விளங்கி வரும் செங்கல் உற்பத்தி குடிசை தொழில் பட்டியலில் இருந்தது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கடந்த 25 ஆண்டுகளில் அடைந்துள்ளன. இந்த வளர்ச்சியில் கட்டுமான துறையின் பங்கும் முக்கியமானது. மேற்படி கட்டுமானங்களுக்கு தேவையான செங்கல் உற்பத்தி  பரவலாக கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. அதில் ஒரு பகுதியாக தடாகம் பள்ளத்தாக்கில், பன்னிமடை, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், 24 வீரபாண்டி, சின்னத்தடாகம் ஆகிய கிராமங்களில் குடும்பமாக ஆயிரக்கணக்கானவர்கள் டேபில் மற்றும் தரைக்கல் முறையில் செங்கல் உற்பத்தி செய்துவந்தனர். ஏழு பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 வரையிலான செங்கல் உற்பத்தி செய்தனர். உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் 5 முதல் 7 நாட்கள் வரை காய்ந்தபின் வேகவைக்க முடியும். இப்படி உற்பத்தி செய்தவரையில் மாவட்டங்களுக்கு தேவையான கற்களை கொடுக்கவும், அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் சூழலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இவ்வாறு செயல்படும் நாட்டுச்சூளைகளுக்கு அரசின் அனுமதிகள் தேவைப்படுவதில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் அவ்வப்போது கண்காணித்து வரும்.


 

a


செங்கல் உற்பத்தி ஆலைகள்:
 

தடகாம் பள்ளத்தாக்கில் பல ஆயிரக்கணக்கான மக்கள் செய்துவந்த இந்த தொழில் 2000ம் ஆண்டுவாக்கில் அரசியல்வாதிகளின் பார்வையில் பட்டது. ஏறத்தாழ தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள சோமையம் பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், 24 வீரபாண்டி, பன்னிமடை ஆகிய கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், ஆளும் கட்சியினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள்  கண்களில் பட்டது. குடிசை தொழிலாக இருந்த செங்கல் உற்பத்தி நவீன ஆளைகளாக வடிவம்  மாறியது. முதன்முதலாக வயர் கட்டர் இயந்திரம் மூலம் செங்கல் உற்பத்தி தொடங்கப்பட்டது. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யும் வகையில் செங்கல் சேம்பர் அடுப்புகள் அமைக்கப்பட்டன. 7 பேர் சேர்ந்து மூவாயிரம் செங்கல் உற்பத்தி செய்தது போய் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் செங்கல்கள் முதல் 1.5 இலட்சம் செங்கல்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் அதற்கு தேவையான கனரக மண் தோண்டும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு நாளைக்கு இரண்டு சிப்ட் விதம் இந்த இயந்திரங்கள் செயல்படத் துவங்கியது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை தாண்டி கேரளாவிற்கு செங்கல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாளடைவில் கேரளா செங்கல்களுக்கான பிராதான மார்க்கெட்டாக மாறியது. ராட்சத இயந்திரங்கள் தேவைக்காக எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் வனப்பகுதியின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள், நீரோடைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் என எவற்றையும் விட்டுவைக்கவில்லை. குறைந்த பட்சம் 25 அடிமுதல் 60 அடிவரையில் கண்ணில் பட்ட இடங்களில் எல்லாம் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டது.

 

j



விவசாயம் செய்யமுடியாத சூழலில் இருந்த பலரும், இவர்களுக்கு தங்களின் நிலத்தின் மண்ணை விற்று வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக நல்ல மண் உள்ள விவசாய நிலங்கள் குறிவைக்கப்பட்டு பாதாளக்குழிகளை போல தோண்டப்பட்டது. இதனால் வனவிலங்குகள் வனத்தின் எல்லைக்கு வந்து திரும்பி போவது தெரியாமல் குழம்பி ஊருக்குள் வரத் தொடங்கின. இதனால் மிச்சம் மீதம் இருந்த விவசாயமும் அழியத் தொடங்கியது. தடாகம் தட்டுயகளில் (மஞ்ச சோழம்) என்று பேர் போன பயிர் முறைகள் முற்றிலும் அழிந்து போய்விட்டன.  பல இடங்களில் மின் கம்பங்களை மட்டும் விட்டுவிட்டு அதனை சுற்றியும் மண் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் மிக அதிகபட்சமாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னால் தலைவர்  VKV சுந்தர்ராஜ் முதல் TTK, INDU,CSB, MINI, MYIL, YBC, VMT, TVS, ABW, KKG, CMK, Mani, SNT என 14 குடும்பங்களிடம் மட்டுமே 50க்கும் மேற்பட்ட சேம்பர்கள் இருக்கின்றன (ஒரு சேம்பர் என்று குறிப்பிடுவது ஒரு புகை போக்கி இருக்கும் செங்கல் வேக வைக்கும் அடுமனை).

 

jj



அதிர வைக்கும் ஆவணங்கள்:
 

தடாகம் பள்ளத்தாகில் இவ்வளவு பெரிய   அளவில் அதுவும்  45 சதுர கிலோமீட்டரில் 200 செங்கல் சேம்பர்கள் இருப்பது மிக மிக ஆபாயகரமானது, தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 24 வீரபாண்டி கிராமம், அனைக்கட்டி தெற்கு மற்றும் வடக்கு ஆகிய பகுதிகள் மாதவ்காட்கில் ஆணையத்தால் சூழலியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கிராமங்களும் மலைதள பாதுகாப்புழுவின் கட்டுப்பாட்டில் வருகின்றன. ஒரு சிறுகட்டிடம் கட்டவேண்டும் என்றால் கூட வனத்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறை, தீயணைப்புதுறை ஆகிய துறைகளிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். இது தவிர 2012 உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி எந்த ஒரு நிலத்திலும் பட்டாநிலம் அல்லது அரசு நிலங்களில் கனிமவளங்களை தோண்டி எடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாநில சூற்று சூழல் கமிட்டியின் அனுமதி பெற்ற பின்னரே கனிம வளம் தோண்டி எடுக்கப்பட வேண்டும். ஆனால் கனிம வளத்துறையினர் வழங்கிய தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆவணங்களின் படி எந்த ஒரு மண் குவாரிக்கும் அனுமதி வழங்கவில்லை.

 

fg



கோவையில் மொத்தம் 125 செங்கல் சேம்பர்களிடம் வருடாந்திர கடடணம் என்ற கட்டணத்தை மட்டும் வசூலித்து விட்டு செயல்பட அனுமதித்துள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பெறப்பட்ட ஆவணங்களின் படி எந்த ஒரு செங்கல் சேம்பர்களும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை. கோவை மாவட்ட வன அலுவலர் சட்ட விரோத மண்குவாரிகள் மற்றும் செங்கல் சேம்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க  மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2015 முதல் பல்வேறு மாவட்ட ஆர்வலர்கள் இந்த சட்டவிரோத செங்கல் சேம்பர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
 

nj




சட்டவிரோத செங்கல் சேம்பர்களின் பின்னணி: 
 

தடாகம்  சட்ட விரோத செங்கல் சேம்பர்களுக்கு பின்னணியில் இருப்பது கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கம். சின்னத்தடாகம் கிராமத்தில் உள்ளது. அதன் தற்போதைய தலைவராக இருப்பவர் தர்மராஜ். முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர், ரம்யா என்ற பெயரில் இரு சேம்பர்கள் வைத்துள்ளார். அதே போல் பன்னிமடை ஊரட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் அ.தி.மு.க., கவி என்றபெயரில் இரு சேம்பர்கள் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள். இந்த சங்கத்தை பொருத்தவரையில் யார் ஆளும் கட்சியோ அவர்களில் இருந்து ஒருவரை தலைவராக போட்டுவிடுகின்றனர். இதனால், எந்த ஆட்சி வந்தாலும் பிரச்சனை வருவதை தள்ளிப்போட வசதியாக இருந்தது. இது தவிர கடந்த இருபது ஆண்டுகளாக இந்த சட்டவிரோத மண்கொள்ளை மற்றும் சேம்பர்களுக்கு  பாதுகாப்பாக இருப்பது இரு மூத்த உள்ளூர் அரசியல்வாதிகள்.
 

jk



இருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஒருவர், முன்னாள் அ.இ.அ.தி.மு.க ,சட்டமன்ற உறுப்பினர் ம. சின்னராசு, தற்போது ப.ஜ.க-வில் இருக்கிறார். இவர் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் சேம்பர் நடத்தி வந்தார். தற்பொது அதை விட்டுவிட்டு மண் சப்ளை செய்துவருவதை கவனித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அகில இந்திய செங்கல் உற்பத்தியாளர் சங்கத்திலும் இருந்து அதன் மூலம் டெல்லியிரும் லாபி செய்து வருபவர்களில் மிக முக்கியமானவர். மற்றொருவர் சி.ஆர். ராமச்சந்திரன் முன்னாள் தி.மு.க, சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது கோவை வடக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவரும் சி.ஆர் என்ற பெயரில் அவருக்கு சேம்பர் சொந்தமாக உள்ளது.

 

f



அதை லீசுக்கு கொடுத்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்கு சென்றுவிட்டார். இவர்கள் இருவரும்  தொடர்ந்து இந்த சங்கத்தின் கவுரவ தலைவர்களாக இருந்து வருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள், அரசியல்  மட்டத்தில் லாபி செய்து தொடர்ச்சியாக செங்கல் சேம்பர்களை காப்பாற்றி வருவதும் இவர்களே. இருவரிடமும் பேசியதில் ஒரே மாதிரியான பதிலை கூறினார்கள். அதில் "இந்த  தொழிலை நம்பி ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் இந்த தொழிலை நிறுத்தினல் பாதிக்கப்படும் என்றும் முடிந்தவரை கனிமவளத்துரைக்கு உரிய கட்டணம் செலுத்துகிறோம், பட்டா இடங்களில் மட்டும் மண் எடுக்கிறோம், இதர துறைகளிடம் உரிய அனுமதிகளை வாங்குவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.
 

h



உண்மையில் இந்த இரு மூத்த அரசியல்வாதிகளும் நினைத்திருந்தால் குறைந்த பட்ச சட்டவிதிமுறைக்கு உட்பட்டு இந்த செங்கல் சேம்பர்கள் செயல்பட்டிருக்கும். மேலும் அரசு அதிகாரிகளை பொருத்தவரையில் அனுமதி வாங்காமல் இந்த சேம்பர்கள் செயல்படும் வரை அரசுக்கு சேர வேண்டிய வருவாய் அதிகாரிகளுக்கு கிடைக்கும் என்பதால் சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அருகில்தான் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகமும் இருக்கிறது. முறையாக செயல்பட்டிருந்தால் 2013 ல் 78 ஆக இருந்த சேம்பர்கள் 200க்கும் மேல் வளர்ந்திருக்காது. இப்பகுதியும் இவ்வளவு மோசமாக சிதைக்கப்பட்டிருக்காது.


தொடரும்..

   
 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.